செய்திகள்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2017-05-07 19:40 GMT   |   Update On 2017-05-07 19:40 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. மதுரை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் அளவு பதிவாகி வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெயில் அதிகமாக இருக்கிறது.

இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. உள்மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை மழைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. பகல் நேரங்களில் வெப்பம் சீராகவே இருக்கும்”, என்றனர்.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 3 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நெல்லை மாவட்டம் தென்காசியில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது. 
Tags:    

Similar News