செய்திகள்

மதுரையில் சூறாவளியுடன் மழை: மேற்கூரை பறந்து விழுந்ததில் மாணவர் பலி

Published On 2017-04-24 04:10 GMT   |   Update On 2017-04-24 04:11 GMT
மதுரை மாவட்டத்தில் சூறாவளியுடன் மழை பெய்தது. மேற்கூரை பறந்து வந்து விழுந்ததில் மாணவர் பலியானார்.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 106 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பகலில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது.

நேற்று பகலில் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் சூறாவளி காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் மழை நீடித்தது.

பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் தூறலாக மழை பெய்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சூறாவளி காற்று காரணமாக பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

தல்லாகுளம், கூடல்நகர், காளவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று காலை வரை பல பகுதிகளில் மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர்.

மதுரை தத்தனேரி மேலகைலாசபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் அருண்குமார் (வயது14). பள்ளி மாணவரான இவர் கீழவைத்தியநாதபுரத்தில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

அப்பகுதியில் அருண் குமார் விளையாடி கொண்டு இருந்தபோது சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வீட்டின் மேற் கூரை பறந்து வந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அருண்குமார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News