செய்திகள்
திருவாரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் கி.வீரமணி பேசியபோது எடுத்தபடம்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி- கி.வீரமணி பிரசாரம்

Published On 2021-03-19 14:03 GMT   |   Update On 2021-03-19 14:03 GMT
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்றும், சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்றும் கி.வீரமணி பிரசாரம் செய்தார்.
குடவாசல்:

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நன்னிலம் சட்டசபை தொகுதி வேட்பாளர் ஜோதிராமனை ஆதரித்து தி.க. தலைவர் கி.வீரமணி குடவாசல் பகுதியில் பிரசாரம் செய்தார்.

இதையொட்டி குடவாசல் அண்ணா தெற்கு வீதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தி.க. தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ் வரவேற்றார். மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் கோபால், மண்டல தலைவர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் வீரையன், மாவட்ட துணைத்தலைவர் அருண்காந்தி, குடவாசல் ஒன்றிய தலைவர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

பா.ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற அ.தி.மு.க. அரசை தனது எடுபிடி அரசாக மாற்றி உள்ளது. நாட்டில் மத கலாசாரத்தில் அதிக அக்கறை செலுத்தி நம்மை நாலாந்தர குடிமக்களாக மாற்ற முடிவு எடுத்துள்ளது.

விவசாயமே பிரதானமாக உள்ள தமிழகத்தில் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பொய்யான வாக்குறுதிகளை கூறுகிறார்கள். சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையாகும். தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். லஞ்சம் மிகுந்த அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தி.க. பொதுச்செயலாளர்கள் ஜெயக்குமார், அன்புராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், தட்சிணாமூர்த்தி, பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் திருவாரூரில் பூண்டி கே.கலைவாணனை ஆதரித்து தி.க. சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் பனகல் சாலையில் நேற்று நடந்தது. இதில் தி.க. தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகையில், பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ் அதிகாரிக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. எனவே தமிழகம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க தி.மு.க. கூட்டணியை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும். அ.தி.மு.க. படுதோல்வி அடைய வேண்டும்’ என்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், நகர செயலளர் பிரகாஷ், மாநில விவசாய அணி துணை செயலாளர் சங்கர், ம.தி.மு.க. நிர்வாகி சீனுவாசன், நாகை காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News