ஆன்மிகம்
அழகர்கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனம் மதுரைக்கு புறப்பட்டபோது எடுத்தபடம்.

கள்ளழகர் எழுந்தருளும் தங்கக்குதிரை வாகனம் மதுரை வந்தது

Published On 2018-04-27 05:56 GMT   |   Update On 2018-04-27 05:57 GMT
சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளும் தங்கக் குதிரை வாகனம் மதுரைக்கு வந்தது.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலின் சித்திரைபெருந்திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். இந்த விழா நேற்று மாலை மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை கல்யாணசுந்தரவள்ளி முன் செல்ல தோளுக்கினியான் பல்லக்கில் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். அப்போது ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். நாளை (சனிக்கிழமை) மாலை அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் அணிந்து தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். 29-ந்தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது.

30-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். மே மாதம் 1-ந்தேதி சேஷ வாகனத்தில் தேனூர்மண்டபத்திலும் அன்று பிற்பகல் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூகமுனிவருக்கு சாபம் தீர்த்து அழகர் காட்சி தந்தருள்கிறார். அன்று இரவு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி ராமராயர்மண்டபத்தில் நடைபெறுகிறது. 2-ந்தேதி அனந்தராயர்பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் சாமி காட்சிதருகிறார்.

3-ந்தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களிடம் விடைபெற்று மலைக்கு புறப்படுகிறார். அன்று மாலை அழகர் திருமலைக்கு வழிநடையாக கள்ளர்திருக்கோலத்தில் திரும்புகிறார். 4-ந்தேதி அதிகாலை அப்பன்திருப்பதி,கள்ளந்திரி உள்ளிட்ட பல மண்டபங்களில் அழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்று காலையில் 9.30 மணிக்குமேல் 10.30மணிக்குள் கள்ளழகர் அழகர்கோவிலை அடைந்து இருப்பிடம் சேருகிறார். 5-ந்தேதி உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. மேலும் கள்ளழகர் எழுந்தருளும் 435 மண்டகப்படிகளும் தயார்நிலையில் உள்ளன.

திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளும் தங்கக்குதிரை, கருடன், சேஷ வாகனங்கள் நேற்று காலை அழகர்கோவில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு மதுரைக்கு வந்தன. இதில் வைகை ஆற்றில் இறங்கும் தங்ககுதிரைவாகனம் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், மண்டூகமுனிவருக்கு சாபவிமோசனம் வழங்கும் கருட வாகனம் தேனூர்மண்டபத்திலும்,சேஷ வாகனம் வண்டியூர் வீரராகவகபெருமாள் கோவிலிலும் தனித்தனியே போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுஉள்ளது.

திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
Tags:    

Similar News