ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவில் தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு மார்கழி மாதத்திற்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெருவடைச்சான் உற்சவம் கடந்த 28-ந்தேதி இரவு நடந்தது. .
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் முன்னோக்கி செல்ல அதன்பின்னர் சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் வலம் வர இருக்கிறார்கள். தேரோட்டத்தையொட்டி தேர்கள் அலங்கரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சி நடந்து, 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
பின்னர் 3-ந்தேதி முத்துப்பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், 4-ந்தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.