ஆன்மிகம்

அற்புதங்களை அருளும் ருத்ராட்ச மணிகள்

Published On 2017-11-18 08:38 GMT   |   Update On 2017-11-18 08:38 GMT
சிவபெருமான் தனது ‘ஸம்ஹார’ காரியத்தை ஆற்றும்போது, அவரது கண்களிலிருந்து வெளிப்பட்ட நீரில் இருந்து ‘ருத்ராட்சம்’ உருவானதாக ‘பிருஹத் ஜாபாலோநிஷதம்’ கூறுகிறது.
சிவபெருமான் தனது ‘ஸம்ஹார’ காரியத்தை ஆற்றும்போது, அவரது கண்களிலிருந்து வெளிப்பட்ட நீரில் இருந்து ‘ருத்ராட்சம்’ உருவானதாக ‘பிருஹத் ஜாபாலோநிஷதம்’ கூறுகிறது. சூரிய அம்சம் பெற்ற வலது கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரில் பன்னிரண்டு ருத்ராட்ச மரங்களும், சந்திர அம்சம் பெற்ற இடது கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரில் பதினாறு ருத்ராட்ச மரங்களும், அக்னி அம்சம் பெற்ற நெற்றி கண்ணிலிருந்து விழுந்த கண்ணீரில் பத்து ருத்ராட்ச மரங்களும் தோன்றின.

இடது கண் நீரில் தோன்றிய ருத்ராட்சம் வெண்மை நிறத்துடனும், வலது கண் நீரில் தோன்றிய ருத்ராட்சம் பழுப்பு நிறத்துடனும், நெற்றி கண்ணிலிருந்து தோன்றிய ருத்ராட்சம் கருப்பு நிறத்துடனும் இருப்பதாக ஐதீகம். தாவர வகைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மின்சார சக்தி இருப்பதாக கண்டறியப்பட்டது, ருத்ராட்ச மணிகளில்தான் என்பது கவனிக்கத்தக்கது.

ருத்ராட்சத்தின் மேலாக குறுக்குவாக்கில் கோடுகளும், அதன் நடுவில் இயற்கையாகவே அமைந்த துளையும் இருக்கும். அதன் மேல் இருக்கும் கோடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் தெய்வாம்சம் சிறப்பாக வெளிப்படுவதாக கண்டறிந்துள்ளார்கள். ஒரு பொருளில் உள்ள மங்கலகரமான அதிர்வுகளை, ருத்ராட்சம் மூலமாக எளிதாகக் கண்டறிய இயலும்.



அதாவது 27, 54 அல்லது 108 எண்ணிக்கைகள் கொண்ட ருத்ராட்ச மாலையை, குறிப்பிட்ட பொருளுக்கு மேலாக பிடித்தால் அது வலப்புறமாக அதாவது கடிகாரமுள் சுழலும் திசையில் சுழன்றால், அப்பொருளானது நல்ல அதிர்வுகளைப் பெற்றிருப்பதாகக் கருதலாம். அதற்கு மாறாக இடப்புறமாக, அதாவது கடிகாரச் சுற்றுக்கு எதிர்ப்புறமாகச் சுற்றினால், அந்த பொருளில் நல்ல அதிர்வுகள் இல்லை என்றும் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில், ருத்ராட்ச மணிகளை அணிவது, ஆன்மிக காரணங்களுக்காக என்று இல்லாமல், உடல் நலம் சார்ந்தும் இருக்கிறது. அவற்றில் இருக்கும் காந்த அலை இயக்கமானது அணிந்திருப்பவரின் உடல் இயக்கத்தோடு ஒன்றுபட்டு செயல்படக்கூடியது. ருத்ராட்ச மாலையை 3 முதல் 6 மாதங்கள் அணிந்திருந்தால் உடலுக்கு பொருந்தக்கூடிய ஈர்ப்பு மண்டலம் கொண்டதாகவும், உடலின் அதிர்வெண்களுக்கு தக்கவாறும் மாறி விடும்.

அதனால் ருத்ராட்சத்தை இன்னொருவரிடம் கொடுப்பதோ, மற்றவருடையதை பெறுவதோ கூடாது. நமது பாரம்பரியத்தில் மற்றவர் கைகளில் இருந்து உப்பு, எள், எண்ணெய் போன்றவற்றை இன்னொருவர் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவதை நாம் கவனித்திருக்கலாம். அதற்கு, சில பொருட்களுக்கு அதை தொடும் நபரது உடல் அதிர்வுகளைக் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் இருப்பதே காரணம்.
Tags:    

Similar News