ஆன்மிகம்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம்

Published On 2017-08-01 04:57 GMT   |   Update On 2017-08-01 04:57 GMT
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அய்யா வைகுண்டர் அவதரித்த தலமான திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார பதி அமைந்து உள்ளது. இங்கு 185-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 11 நாட்கள் நடந்தது.

விழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

11-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. காலையில் உகப்படிப்பு, பணிவிடைக்கு பின்னர் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் பவனி வந்தார். மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடைக்கு பின்னர் அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளினார்.

மதியம் 1.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். பெரும்பாலான பக்தர்கள் சுருள் வைத்து அய்யா வைகுண்டரை வழிபட்டனர். தேர் நிலையை வந்தடைந்தவுடன், பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது. மாலையில் உகப்படிப்பு, பணிவிடை நடந்தது.

விழாவில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News