ஆன்மிகம்
சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது

Published On 2017-07-17 06:51 GMT   |   Update On 2017-07-17 06:51 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடக்கின்றன. இதன்படி ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் பராசக்தி வீதி உலாவும் நடந்தத

விழா நாட்களில் காலையும், மாலையும் சந்திரசேகர் மற்றும் விநாயகர் வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று காலை மாட வீதியில் சந்திரசேகர் வீதி உலா நடந்தது. அதன்பின்னர் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடப்பதையொட்டி அங்குள்ள மண்டபத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இதையடுத்து சிவாச்சாரியார்கள் சந்திரசேகருக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினர். அதனை தொடர்ந்து சாமியிடம் இருந்து சூலத்தை பெற்று அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடத்தினர். பின்னர் சிவாச்சாரியார்கள் சூலத்தை சாமியிடம் வைத்தனர்.

தொடர்ந்து அய்யங்குளம் எதிரே உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சந்திரசேகரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது.


ஆனி பிரம்மோற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.


ஆனி பிரம்மோற்சவம் நிறைவடைந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று மாலை விநாயகர் வீதி உலா நடைபெற்றது.

ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் வீதி உலா நடக்கிறது. 26-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், வளைகாப்பு உற்சவமும், பராசக்தி அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு 26-ந் தேதியன்று இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமுலையம்மன் சன்னதி முன்புறம் தீ மிதி விழாவும், பராசக்தி அம்மன் திருவீதியுலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News