ஆன்மிக களஞ்சியம்

சென்னை ராஜகீழ்ப்பாக்கம் 13 அடி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி

Published On 2024-05-06 11:21 GMT   |   Update On 2024-05-06 11:21 GMT
  • சுமார் 12 அடி உயரமுள்ள இந்த ஐம்பொன் சிற்பம் பார்க்க அழகான தோற்றமுடையது.
  • இங்குள்ள பிரத்தியங்கிரா தேவி சிலை பஞ்சலோகத்தில் 13 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

சென்னை, தாம்பரம், சேலையூர் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மகாலட்சுமி நகரில் அமைந்துள்ளது பிரத்தியங்கிரா தேவி ஆலயம்.

ஸ்ரீ சாந்தானந்தா சுவாமிகள் சென்னை, ராஜ கீழ்ப்பாக்கத்தில் உள்ள கந்தாஸ்ரமத்தில் இந்த பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் அமைத்துள்ளார்.

இந்த ஆலயத்தில் ஸ்ரீபுவனேஸ்வரியும், சுவாமிநாதனும் எதிரெதிரே தனித்தனியாகக் கோவில் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களையடுத்து ஸ்ரீசரபேஸ்வரரும் ஸ்ரீபிரத்தியங்கிராவும் தனித்தனியே கோவில் கொண்டிருக்கின்றனர்.

இந்த நான்கு திருவடிகளுக்கும் மத்தியில் அழகான தியான மண்டபம் அமைந்துள்ளது.

அபய, வரத முத்திரைகள் தாங்கி பாசமும் அங்குசமும் தரித்தவளாக அன்பும் சாந்தமும் நிறைந்த திருமுகத்தினளாய் பேரழகுடன் வீற்றிருக்கிறாள் ஸ்ரீபுவனேஸ்வரி.

அகில உலகத்தையே ஆளும் அந்த நாயகியின் பக்கத்தில் முருகப்பெருமான் இடக்கையை ஊர்ஹஸ்தமாகவும் வலக்கரத்தில் தண்டூன்றியும் காட்சி தருகிறார்.

பறவை, விலங்கு, மனிதன் மூன்றும் கலந்த வடிவாய். தலையில் பிறை நிலா விளங்க மான், மழு, நாகம், தீ, இந்நான்கையும் ஏந்திய கரத்தினராய்க் காட்சி தருகிறார் ஸ்ரீசரபேஸ்வரர்.

இவர் ஸ்ரீநரசிம்மரின் ஆவேசத்தைத் தணிக்கும் பொருட்டு சிவபெருமானால் மேற்கொள்ளப்பட்ட திருவடிவம்.

சுமார் 12 அடி உயரமுள்ள இந்த ஐம்பொன் சிற்பம் பார்க்க அழகான தோற்றமுடையது.

இங்குள்ள பிரத்தியங்கிரா தேவி சிலை பஞ்சலோகத்தில் 13 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு உள்ள சிறப்பு அம்சம் இதுவாகும்

இந்தப் பிரத்தியங்கிரா தேவி டமருகம், பாசம், கபாலம், சூலம் நான்கையும் தரித்தவளாய் சிம்ம வாகனத்தில் அமர்ந்து ஒளிதரும் பெரு விழிகளும், தெற்றுப்பற்களும், கோரைப்பற்களும் துலங்க காட்சி தருகிறாள்.

தலைக்கு மேலே நாகம் குடையாய் கவிழ்ந்திருக்கிறது. பாதத்து அருகே காளியின் மந்திரத்தை வெளிப்படுத்திய அங்கிரஸ், பிரத்தியங்கிரஸ் ஆகிய இரு முனிவர்களும் கைகூப்பித் தொழுகின்றனர்.

இந்த ஆலயத்தில் அரிய தரிசனங்களாக பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் தத்தாத்ரேயரின் வடிவங்கள் ஆகிய சிலைகள் காட்சி தருகின்றன.

அபயம் என்று அலறிப் பணிந்த உயிர்களைக் காக்கும் அற்புத தேவி இந்தப் பிரத்தியங்கிரா.

அதர்வணப் பத்ரகாளியும் இவளே. இவளை வழிபடும் எவரும் துன்பத்தின் நிழல்கூட தன் மீது படாமல் வாழ்வார்கள்.

இந்தக் காளியை வழிபடும் எவரையும், யாரும் பகைப்பதோ, விரோதமாக்குவதோ கூடாது.

பிரத்தியங்கிரா தேவியை தியானிப்பவர்களிடம் பகைமை பாராட்டக்கூடாது.

அப்படி பக்தர்களைக் காக்கும் கவசமாகத் திகழ்கின்றாள் இந்தப் பிரத்தியங்கிரா தேவி.

Tags:    

Similar News