- அகத்தியர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு புண்ணிய நீர் வேண்டும் என்று சிவனை பிரார்த்தனை செய்தார்.
- சிவபெருமான் மேற்கு நோக்கி இருக்கிறார்.
கோவிலில் உள்ள சிவலிங்கம் அகத்தியர் கையால் பிரதிஸ்டை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கத்திற்குரிய சிறப்பு என்னவென்றால் மற்ற சிவலிங்கங்களில் உருண்டை வடிவில் மேல்பகுதி இருக்கும். ஆனால் இந்த லிங்கத்தில் 16 பட்டைகள் கொண்டு இருப்பதால் சோடசலிங்கம் என்று பெயர். தமிழில் இதை பூரணா கலாலிங்கம் என்றும் சொல்வர். ஆய கலைகள் 16-ம் ஒரே இடத்தில் அமைந்துள்ளது.
அகத்தியர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு புண்ணிய நீர் வேண்டும் என்று சிவனை பிரார்த்தனை செய்தார். அப்போது வராகநதி என்று ஒரு நதி உள்ளது. இது செஞ்சி என்ற ஊரில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி ஓடி புதுச்சேரி கடலில் கலக்கும்.
இந்த நதியை திருக்காஞ்சிக்கு திருப்புவதற்கு சிவபெருமான் வராகருக்கு ஆணையிடுகிறார். வராகர் அவருடைய கொம்பினால் கீரி மேற்கில் இருந்து வடக்கு பக்கமாக திருப்பி விடுகிறார். இதனால் இது வராக நதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி திருக்காஞ்சிக்கு அருகில் வடக்கு நோக்கி பாய்கிறது. இதற்கு அகத்தியர் சங்கராபரணி என்று பெயரிட்டு வழிபடுகிறார். சங்கரா என்றால் சிவபெருமான். பரணி என்றால் ஆபரணம். சங்கரனுக்கு ஆபரணமாக இருப்பவள் கங்கை. இதனால் சங்கராபரணி என்று அழைக்கப்பட்டது.
இந்த நதியில் இருந்து நீர் எடுத்து பூஜை செய்கிறார் அகத்தியர். 17-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது கோவில் முற்றிலும் சிதிலம் அடைந்து தண்ணீரில் இறங்கியது. அதன் பின்னர் அங்குள்ள கிராம மக்கள் இந்த கோவிலில் உள்ள விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, ஜெயிஸ்டா தேவி, அம்பாளுக்கு எதிரில் உள்ள நந்தியம்பெருமான் இவர்களை மட்டும் மீட்டு கொண்டுவந்து கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர்.
நாளடைவில் புதுச்சேரி அரசாங்கம் பணம் ஒதுக்கி 2016-ல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியது.பழமையான கோவிலில் கருங்கல்லால் ஆன குளக்கரை, படித்துறை இருந்தது என்பதற்கான 3 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அதில் முதல் கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் முதல் மதில் சுவரை 2-ம் குலோத்துங்க சோழன் அமைத்து கொடுத்துள்ளார் என்றும், ராஜேந்திர சோழன் படிகற்களை கட்டி கொடுத்தார் என்றும் உள்ளது. மற்றொரு கல்வெட்டில் ராஜேந்திரம் உடையார் இந்த கோவிலுக்கு நித்தியகொடி பூஜைக்கு தேவையான நெல்லை கொடுத்துள்ளார் என்றும் கல்வெட்டில் உள்ளது.
இந்த திருத்தலத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் எல்லா சிவாலயங்களிலும் ஒரு அம்பாள் மட்டுமே இருக்கும். இங்கு காமாட்சி, மீனாட்சி என்று 2 அம்பாள் சுவாமிகள் உள்ளது. ஏனென்றால் காசிக்கு நிகரான தலம் என்பதால் காசியில் அன்னபூரணி, விசாலாட்சி அருள்பாலிக்கின்றனர். விருத்தகாசி என்று அழைக்கப்படும் விருத்தாசலத்தில் பாலாம்பிகை, விருத்தாம்பிகை என்று 2 அம்பாள் இங்கு உள்ளனர். அதேபோன்று இங்கு காமாட்சி, மீனாட்சி என்று இரண்டு அம்பிகை உள்ளனர்.
இங்குள்ள சிவபெருமான் மேற்கு நோக்கி இருக்கிறார். பொதுவாக ரிஷிகள், தேவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள் மேற்கு நோக்கி அமைந்திருக்கும். உதாரணத்திற்கு கபாலீஸ்வரர். கற்பகாம்பாள் பூஜை செய்ததால் அவர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். அதேபோன்று மருந்தீஸ்வரர் வால்மீகி முனிவர் பூஜை செய்ததால் அவர் மேற்கு நோக்கி இருக்கிறார்.
அதேபோல் முருகன் பூஜை செய்ததால் வைத்தீஸ்வரன்கோவில் மேற்கு நோக்கி இருக்கும். மார்க்கண்டேயர் பூஜை செய்ததால் திருக்கடையூரில் சிவலிங்கம் மேற்கு நோக்கி இருக்கும். அதேபோல் அகத்தியர் பூஜை செய்ததால் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். ஆயிரம் கிழக்கு நோக்கி இருக்கும் லிங்கத்தை தரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதே புண்ணியம் ஒரு மேற்கு நோக்கிய சிவபெருமானை தரிசனம் செய்தால் கிடைக்கும்.