அமாவாசையும், அவசியமான 4 காய்களும்
- குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுவதாக சிலர் சொல்வார்கள்.
- தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என தனி பட்டியலே உண்டு.
அமாவாசை அன்று கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள், தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என தனி பட்டியலே உண்டு. இதில் அமாவாசை விரத சமையலிலும் சரி, அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் போது வேதியருக்கு கொடுக்கும் பொருட்களிலும் சரி வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பார்கள். வாழையடி வாழையாக நமது குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுவதாக சிலர் சொல்வார்கள். அதே போல் அமாவாசை நாளில் பாகற்காய், பிரண்டை, பலாக்காய் கண்டிப்பாக சமைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு புராணத்தில் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.
ஒருமுறை வசிஷ்ட முனிவர், விஸ்வாமித்திரரை சந்தித்து, தனது வீட்டிற்கு உணவு அருந்த வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். வசிஷ்டர், விஸ்வாமித்ரர் இருவருமே பயங்கர கோபக்கார முனிவர்கள். வசிஷ்டரின் இந்த அழைப்பை ஏற்ற விஸ்வாமித்ரர், தனக்கு 1008 காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்க வேண்டும் என கூறினார்.
இதை கேட்ட வசிஷ்டர் திகைத்து போனார். "1008 காய்கறிகளா? அத்தனை வகை காய்கறிகளை எப்படி தேடி பிடிப்பது? எப்படி சமைப்பது?" என குழப்பமடைகிறார். ஆனால் அருகில் இருந்த வசிஷ்டரின் மனைவியும், தீவிர பதி விரதையுமான அருந்ததி, விஸ்வா மித்ரரின் வார்த்தைகளை ஏற்று, நீங்கள் கூறிய படி 1008 காய்கறிகளை சமைத்து பரிமாறுகிறேன் சுவாமி என பணிவுடன் பதிலளித்தாள்.
சிரார்த்தம் கொடுக்கும் நாளும் வந்தது. ரிஷிகளில் பிரம்மரிஷி பட்டம் வாங்கிய விஸ்வாமித்ரரும் உணவு சாப்பிட வந்தார். வாழை இலை போட்டு உணவுகளை பரிமாற துவங்கினாள் அருந்ததி. முதலில் எட்டு வாழைக்காய்களை வைத்தாள்.
பிறகு பாகற்காய், பிரண்டை, பலாக்காய் என பரிமாறி முடித்து விட்டு, 1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது. உணவு அருந்துங்கள் சுவாமி என பணிவுடன் விஸ்வாமித்ரரிடம் வேண்டினாள். ஆனால் ஆத்திரமடைந்த விஸ்வாமித்ரர், என்ன இது? நான் 1008 காய்கறிகள் சமைத்து பரிமாறச் சொல்லி கேட்டால், நீ நான்கு காய்களை மட்டும் பரிமாறி விட்டு 1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது என சொல்லி என்னை அவமானப் படுத்துகிறாய் என கோபமடைந்தார்.
அதற்கு அமைதியாக பதிலளித்த அருந்ததி, "சுவாமி, தாங்கள் அறியாதது இல்லை. அனைத்தும் அறிந்த நீங்களே இப்படி கோபப்படலாமா? அதாவது பாகற்காய் 100 காய்களுக்கும், பிரண்டை 300 காய்களுக்கும், பலாக்காய் 600 காய்கறிக்கும் சமம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவை ஆயிரம் காய்கறிகள் ஆகி விட்டது. இதோ எட்டு வாழைக்காய்களை வைத்துள்ளேன். மொத்தம் 1008 காய்கறிகள் ஆகி விட்டது" என கூறினாள்.
இதைக் கேட்டு சாந்தமடைந்த விஸ்வாமித்ரர், அருந்ததியின் புத்திகூர்மையையும், சாஸ்திர முறைப்படி நடக்கும் குணத்தையும் கண்டு வியந்து, அருந்ததியையும், வசிஷ்டரையும் ஆசிர்வதித்து சென்றார். சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டுள்ளதன் காரணமாகவே உயர்வான இந்த 4 காய்கறிகள் மட்டும் அமாவாசை சமையலில் முக்கிய இடம் பிடிக்கின்றன.