குமரன் திருத்தலங்களில் கதித்தமலை
- கோவில் விளங்கக் குடி விளங்கும் என்பர் சான்றோர்.
- "குன்று தோராடும் குமரனின்" திருத்தலங்களில் கதித்தமலையும் ஒன்று.
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று " என்பார் ஒளவையார்.
"கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் " என்கிறது பழமொழி.
"கோவில் விளங்கக் குடி விளங்கும்" என்பர் சான்றோர்.
அதேபோல் "பிறவா யாக்கை பெரியோன் கோவில்" எனச் சிவன் கோவிலையும், "நீலமேனி நெடியோன் கோவில்" எனத் திருமால் கோவிலையும்,
"பாய் கலைப்பாவை கோவில்" எனச் சக்தி கோவிலையும்
"வேல் கோட்டம்" என முருகன் கோவிலையும், வகைப்படுத்துவர் நம் முன்னோர்.
அத்தகைய வரிசையில், "குன்று தோராடும் குமரனின்" திருத்தலங்களில் கதித்தமலையும் ஒன்று.
"கதித்தமலைக்கு எதுத்த மலை இல்லை" என்ற கூற்று கதித்தமலையின் பெருமைகளை உலகுக்கு எடுத்துக் கூறவும், பாரோர்க்குப் படம் பிடித்துக்காட்டவும் அப்பகுதி மக்களால் உச்சரிக்கப்பட்ட ஒரு சொல்லே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
"பாடப்பாட வாய் மணக்கும்" தெய்வீகத் திருப்புகழை இவ்வுலகிற்கு தந்த அருளாளர் அருணகிரியார் தம் பழனி மலைத் திருப்புகழில் "பதியினில் மங்கை கதித்த மாமலையோடு சிலை குன்றில் தரித்து" என்ற வரிகள் மூலம் கதித்தமலையின் புகழை-பெருமையை இமயத்தின் உச்சிக்கே ஏற்றி வைத்திருக்கிறார் என்பது நாம் பெற்ற பெரும் பேறாகும்.