செய்திகள்

எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி சதி- நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2019-05-06 10:08 GMT   |   Update On 2019-05-06 10:08 GMT
3 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சதி செய்கிறார் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy #edappadipalanisamy #3mlas

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி ஊழல் பேர்வழி என பெயர் எடுத்தார் என பொய்யான குற்றச்சாட்டை மோடி பேசியுள்ளார். போபர்ஸ் வழக்கில் ராஜீவ்காந்தி பாராளுமன்ற நிலைக்குழு விசாரிக்க உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் நிலைக்குழு விசாரணை நடத்தி ராஜீவ்காந்திக்கும், போபர்ஸ் வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிக்கை சமர்பித்தனர். நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தியை எதிர்த்து விசாரணை நடந்தது.

விசாரணையின் முடிவிலும் ராஜீவ்காந்தி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதையெல்லாம் மறைத்து மோடி ராஜீவ்காந்தியின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் அவரைப்பற்றி அவதூறாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

நாட்டு மக்களால் ஏற்க முடியாத ஒன்று. இந்திய கலாச்சாரப்படி மறைந்த தலைவரை விமர்சனம் செய்வது கிடையாது. ஆனால் தரம் தாழ்ந்து, பிரதமர் என்பதையும் மறந்து தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. நாட்டு மக்கள் பிரதமர் மோடி பிரதமராக இருக்க தகுதியுள்ளவாரா? என மக்கள் கேட்கும் நிலையை உருவாக்கியுள்ளார். இதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் கட்சி பாகுபாடின்றி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தோல்வி பயத்தால் மோடி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ராகுல்காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். மோடிக்கு இறுதிகாலம் வந்துள்ளது. பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் மிகப்பெரும் தோல்வியை சந்தித்து மோடி பதவியை விட்டு செல்லும் காலம் நெருங்கிவிட்டது. ராஜீவ் புகழுக்கு களங்கம் விளைவித்த மோடி நாட்டு மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. ராகுல் பிரதமராக அதிக வாய்ப்புள்ளது.

டெல்லியில் முதல்- அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரத்தின்போது தாக்கப்பட்டுள்ளார். முதல்-அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையை மோடி உருவாக்கியுள்ளார். பா.ஜனதா சதித்திட்டம் போட்டு ஆட்சியை கலைக்க நினைக்கிறது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அது தற்போது நடந்து வருகிறது. டெல்லி மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி பதில் கூற வேண்டும். இதற்குத்தான் டெல்லி, புதுவையில் மாநில அந்தஸ்து கேட்கிறோம். தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் முடிந்துள்ளது. 4 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 22 தொகுதியிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்தசூழ்நிலையில் எம்.எல்.ஏ.க்களை பதவிநீக்கம் செய்து ஆட்சியை தக்க வைக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி சதித்திட்டம் தீட்டுகிறார். இதற்காகத்தான் பதவிநீக்கம் செய்ய அறிக்கை அனுப்பியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

சபாநாயகர் தேர்தல் விதிமுறை நடைமுறை இருக்கும்போது கடிதம் அனுப்பி பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பது ஜனநாயக விரோத செயல். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நீதி கிடைக்கும். கொள்ளைப் புறமாக விதிமுறைகளை மீறி சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கை ஏற்க முடியாத ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News