செய்திகள்

தேசத்தைப் பற்றி கவலைப்படாத மகா கூட்டணி- இறுதிக்கட்ட பிரசாரத்தில் மோடி தாக்கு

Published On 2019-04-27 10:02 GMT   |   Update On 2019-04-27 10:02 GMT
உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் மகா கூட்டணி தேசத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கினார். #LokSabhaElections2019 #Modi #ModiCampaign
கன்னாஜ்:

உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியில் நடந்த இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்துகொண்டு, கன்னாஜ், எட்டாவா, பரூக்காபாத் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை சேர்ந்து அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த சந்தர்ப்பவாதிகள் அனைவரும் சேர்ந்து எதற்கும் உதவாத அரசைத்தான் அமைக்க  விரும்புகிறார்கள். இவர்களின் மந்திரம் முழுவதுமே சாதியைப் பற்றிப்பேசி, சாமானிய மக்களிடம் கொள்ளையடிப்பதுதான்.

உண்மையில் சந்தர்ப்பவாதிகள் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி மிகப்பெரிய ஊழல் கூட்டணி. இவர்களின் நோக்கமே மக்களுக்கு பயன்தராத அரசை உருவாக்குவதுதான். எவ்வளவுதான் எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்தாலும் அவர்களால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது. எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள ஊழல் கூட்டணி தலைவர்கள் தங்களின் வாரிசுகளின் நலன்கள் குறித்துதான் நினைக்கிறார்களே தவிர, தேசத்தின் நலன் குறித்து கவலைப்படவில்லை. பாலகோட் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் இவர்கள், பயங்கரவாதிகளுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள்.

கன்னாஜ் தொகுதியில் அம்பேத்கரை அவமதித்த சமாஜ்வாடி கட்சிக்காக பகுஜன் சமாஜ் கட்சி ஓட்டு கேட்கிறது. ஆட்சிக்கு வருவதற்காகவும் மோடியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும் பெகன்ஜி (மாயாவதி) மகிழ்ச்சியுடன் வாக்கு கேட்கிறார். 


இவ்வாறு அவர் பேசினார்.

4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள இந்த தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. வரும் 29-ம் தேதி வாக்குப்பதிவு நடைபற உள்ளது. கன்னாஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #Modi #ModiCampaign
Tags:    

Similar News