செய்திகள்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Published On 2019-02-12 10:13 GMT   |   Update On 2019-02-12 10:13 GMT
ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். #Rameswaramfishermen
ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. உடனே செல்லுங்கள் இல்லையென்றால் சிறை பிடிக்கப்படுவீர்கள் என்று மிரட்டும் தொனியில் தெரிவித்தனர்.

மீனவர்கள் தங்கள் வலைகளை எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமாகினர். அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கி விரட்டியடித்தனர். மேலும் படகில் இருந்த மீன்களை அபகரித்து கொண்ட இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை தொடர்ந்து மீன் பிடிக்க விடாமல் தடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கடலுக்கு சென்றாலும், இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் வெறும் கையுடனேயே திரும்புகிறோம். இரு நாட்டு அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தும் வரை தீர்வு ஏற்படாது. இதேநிலை நீடித்தால் நாங்கள் மீன்பிடி தொழிலை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று கச்சத்தீவு பகுதியில் ராமேசுவரத்தை சேர்ந்த முனியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது வழக்கத்துக்கு மாறாக கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அலையின் சீற்றத்தால் முனியராஜ் படகு தள்ளாடியது.

இதில் கடல் நீர் புகுந்ததால் படகு மூழ்கத்தொடங்கியது. தண்ணீரை வெளியேற்ற முயன்றும் பலன் இல்லை. இதையடுத்து மீனவர்கள் படகில் இருந்து குதித்து அருகில் இருந்த மற்றொரு படகில் ஏறிக்கொண்டனர். சிறிது நேரத்தில் படகு முற்றிலும் மூழ்கியது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும். #Rameswaramfishermen

Tags:    

Similar News