search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் தடையை மீறி சட்டசபைக்குள் நுழைவோம்: பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் அறிவிப்பு
    X

    சபாநாயகர் தடையை மீறி சட்டசபைக்குள் நுழைவோம்: பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் அறிவிப்பு

    சபாநாயகர் அனுமதித்தாலும், அனுமதிப்படாவிட்டாலும் வருகிற 23-ந் தேதி சட்டசபைக்குள் நுழைவோம் என்று பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    மாநில அரசின் பரிந்துரையின் பேரில் புதுவை சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க முடியும். ஆனால், புதுவையை ஆளும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியின் பரிந்துரை இல்லாமலேயே மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது.

    மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வ கணபதி ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களின் நியமனத்தை புதுவை சட்டமன்ற சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்க மறுத்து விட்டார்.

    அதிகாரம் படைத்த உரிய நபரிடம் இருந்து உத்தரவு வராததால் 3 எம்.எல்.ஏ.க் களின் நியமனத்தை ஏற்க முடியாது என சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார். ஆனால், பா.ஜனதாவின் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    தங்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக ஏற்காதது குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து பா.ஜனதாவினர் புகார் செய்தனர். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக மாநில அரசுக்கு விளக்க கடிதம் அனுப்பியது.

    அதோடு நியமன எம்.எல்.ஏ.க்களை அங்கீகரிக்குமாறும், மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதற்கிடையே சபாநாயகர் வைத்திலிங்கம் தன்னுடைய மகனை பார்க்க அமெரிக்கா சென்று விட் டார்.

    இதனால் நியமன எம்.எல்.ஏ. விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி சபாநாயகர் புதுவை திரும்பினார். சபாநாயகர் புதுவை திரும்பியதால் நியமன எம்.எல்.ஏ. விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் விளக்கத்தை ஏற்று நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் அங்கீகரிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், சபாநாயகர் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ஏற்க மீண்டும் மறுத்து விட்டார்.

    இது தொடர்பாக சபாநாயகரின் உத்தரவின் பேரில் மத்திய உள்துறையால் நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கும் தனித்தனியாக சட்டமன்ற செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ஏற்க முடியாது என்றும் அதிகாரம் படைத்த நபரிடம் இருந்து நியமனம் குறித்து உத்தரவு வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை மீறி சபாநாயகர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ஏற்க மறுத்திருப்பது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 23-ந் தேதி கூடுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்போம் என பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே கூறி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்க மறுத்த பின்பும் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்போம் என பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் விளக்கம் மற்றும் உத்தரவுக்கு பிறகும் சபாநாயகர் எங்களை எம்.எல்.ஏ.க்களாக ஏற்க மறுப்பது ஜனநாயக விரோதம். யூனியன் பிரதேசமான புதுவை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

    புதுவை அரசின் செயல்பாடுகள் குறித்து மத்திய உள் துறை மற்றும் கட்சி தலைமைக்கு புகார் செய்து உள்ளோம். மேலும், கவர்னர் கிரண்பேடி மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரை சந்திக்க உள்ளோம்.

    எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக மாநில அரசு ஏற்கனவே அரசிதழில் வெளியிட்டுள்ளது. அந்த அரசிதழை செல்லாது என்று மாநில அரசு அறிவிக்குமா?

    சபாநாயகர் அனுமதித்தாலும், அனுமதிப்படாவிட்டாலும் வருகிற 23-ந் தேதி சட்டசபைக்குள் நுழைவோம். இதனை யாராலும் தடுக்க முடியாது. சபாநாயகர் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு சாமிநாதன் கூறினார்.

    எம்.எல்.ஏ.க்கள் நியமன விவகாரத்தில் புதுவையில் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×