search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து வெற்றிக்கு 281 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து வெற்றிக்கு 281 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோலி சதம் அடித்ததையடுத்து இந்திய அணி, 281 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

    மும்பை:

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மணீஷ் பாண்டே நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

    இந்திய அணியின் தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மும்பை வான்கடே மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முடிவு செய்தனர்.

    சவுத்தி வீசிய முதல் ஓவரில் தவான் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் டிரென்ட் போல்ட் பந்து வீச்சை எதிர்கொள்ள இருவரும் திணறினார்கள். 4-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கோட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



    அடுத்த ஓவரை சவுத்தி வீசினார். இந்த ஓவரின் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரோகித் சர்மா. ஆனால் போல்ட் வீசிய அடுத்த ஓவரின் 4-வது பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார் ரோகிர் சர்மா. அவர் 18 பந்தில் 2 சிக்சருடன் 20 ரன்கள் சேர்த்தார். இந்தியா 29 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க வீரர்களை இழந்தது.

    அடுத்து வந்த கேதர் ஜாதவ் 12 ரன்கள் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 15.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. மிகவும் பொறுமையாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 25-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி அடித்து அரைசதம் அடித்தார்.

    இந்தியா 25 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. கோலி 52 ரன்னுடனும், தினேஷ் கார்த்திக் 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தினேஷ் கார்த்திக் மேலும் 10 ரன்கள் எடுத்து சவுத்தி பந்தில் முன்ரோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதையடுத்து கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் பந்தில் கப்திலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய கோலி சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 31-வது சதமாகும். இதன்மூலம் பாண்டிங்கின் சாதனை கடந்த கோலி ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். மேலும் 200-வது போட்டியில் சதம் அடிக்கும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.



    அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டிய பாண்டியா 16 ரன்கள் மட்டுமே எடுத்து போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 45.3 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. பாண்டியாவை தொடர்ந்து புவனேஷ்வர் குமார் களமிறங்கினார். அவர் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

    சதம் அடித்த கோலி 121 ரன்கள் எடுத்து சவுத்தி வேகத்தில் போல்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். புவனேஷ்வர் குமார் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 4 விக்கெட்டும், சவுத்தி 3 கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம் நியூசிலாந்து வெற்றிக்கு 281 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது.
    Next Story
    ×