search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாரணாசியில் செல்வாக்கை நிரூபிக்க 2 நாட்கள் ரோடு ஷோ நடத்தும் மோடி
    X

    வாரணாசியில் செல்வாக்கை நிரூபிக்க 2 நாட்கள் ரோடு ஷோ நடத்தும் மோடி

    வாரணாசியில் பாஜகவின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இரண்டு நாட்கள் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். #Loksabhaelections2019 #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி தன் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்துக்கு செல்லவுள்ளார். சமீப காலமாக ராகுல், பிரியங்கா இருவரும் அடிக்கடி குஜராத் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் மோடியும் குஜராத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

    மேலும் 5 பொதுக்கூட்டங்களில் பேச மோடி திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் நாளை குஜராத்தில் உள்ள ஹிமாத்நகர், சுரேந்திர நகர், அனந்த் ஆகிய 3 நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

    நாளை மறுநாள் 18-ந் தேதி அம்ரேலி நகரிலும் 21-ந்தேதி குஜராத் மாநிலம் பதன்நகரிலும் பேசுகிறார். மீண்டும் 23-ந்தேதி அகமதாபாத் சென்று அங்கு தனது வாக்கை பதிவு செய்கிறார்.

    அதன்பிறகு வாரணாசி தொகுதியில் கவனம் செலுத்த மோடி திட்டமிட்டுள்ளார். அதன்படி 25-ந்தேதி மோடி வாரணாசி செல்கிறார். அங்கு நடக்கும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். அன்றிரவு அவர் வாரணாசியில் தங்குகிறார்.

    மறுநாள் (26-ந்தேதி) வாரணாசி தொகுதியில் மோடி மனுதாக்கல் செய்கிறார். அன்றும் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.

    அமேதியில் ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்த போது 3 கி.மீ. தூர ரோடு ஷோ நடத்தினார். அதை மிஞ்சும் வகையில் பிரதமர் மோடி வாரணாசியில் 2 நாட்கள் ரோடு ஷோ நடத்தவுள்ளார்.

    இதற்கிடையே அடுத்த வாரம் பிரியங்காவும் வாரணாசி தொகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். மோடியின் வாரணாசி பயணத்துக்கு முன்போ அல்லது பின்போ பிரியங்காவும் வாரணாசி செல்வார் என்று தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேசத்தில் நியாய் ரத யாத்திரை நடத்த பிரியங்கா ஏற்பாடு செய்து வருகிறார். பதேபூர் சிக்ரி நகரில் பிரியங்கா இந்த பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதனால் அடுத்த வாரம் முதல் உத்தரபிரதேச தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்ட உள்ளது. #Loksabhaelections2019 #PMModi
    Next Story
    ×