search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 3-ம் இடத்துக்கு தள்ளப்படும் - அருண் ஜெட்லி கருத்து
    X

    நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 3-ம் இடத்துக்கு தள்ளப்படும் - அருண் ஜெட்லி கருத்து

    நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3-ம் இடத்துக்கு தள்ளப்படும், மாநில கட்சிகள் கூட்டணி, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் என்று அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley #Congress #Manufacturing
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல், தங்களுக்கான தேர்தல் இல்லை என்பதை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். பிரதமருக்கும், அவருடைய போட்டியாளர்களுக்கும் இடையிலான புகழ் இடைவெளி மிகப்பெரிதாக உள்ளது.

    மொத்த மக்களவை தொகுதிகளில் 50 சதவீத தொகுதிகள் உள்ள உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இல்லவே இல்லை. அல்லது, 3-வது, 4-வது இடத்தில் உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி மொத்தம் 225 தொகுதிகளில்தான் போட்டியிடும் நிலையில் உள்ளது. அங்கெல்லாம் பா.ஜனதாவுடன்தான் நேரடி போட்டி நிலவும்.

    எனவே, தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி 3-வது இடத்துக்கு ஓரம்கட்டப்படும். மாநில கட்சிகள் அடங்கிய கூட்டாட்சி முன்னணி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்றும்.

    காங்கிரஸ் கட்சி, ஊழல் புகாரில் சிக்கித் தவித்த கட்சி. ஆனால், பிரதமர் மோடியோ ஊழலற்ற ஆட்சியை தந்து வருகிறார்.

    எனவே, காங்கிரஸ் கட்சி கண்டுபிடித்த உத்திதான், இட்டுக்கட்டுவது. உண்மையான பிரச்சினை இல்லை என்றால், புதிதாக உருவாக்குவது. அப்படி போலியாக உருவாக்கியதுதான், ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்த விவகாரம். ஆனால் அது எடுபடவில்லை.

    அது, அரசுக்கும், அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம். இதில், தனிநபர் சம்பந்தப்படவில்லை. தங்களது போர் திறனுக்கு அந்த விமானம்தான் ஏற்றது என்று ராணுவப்படைகள் விருப்பம் தெரிவித்தன. ரபேல் போர் விமானங்களின் விலையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மந்திரிகளும் சொல்லவில்லை. ஏனென்றால், இது தேசநலன் சம்பந்தப்பட்ட விவகாரம்.

    பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்தபோது, அவர் இது ரகசிய ஒப்பந்தம் அல்ல என்று தன்னிடம் கூறியதாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அந்த கூற்று, உடைத்து எறியப்பட்டு விட்டது.

    முன்பு, போபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் கட்சி சிக்கி தவித்தபோது, அதை திசைதிருப்ப வி.பி.சிங் மகன் பெயரில் செயின்ட் கிட்ஸ் தீவில் போலியாக ஒரு வங்கிக்கணக்கு உருவாக்கப்பட்டது. ‘நாங்கள் ஊழல்வாதி என்றால், நீங்களும் ஊழல்வாதிதான்’ என்று காட்டுவதற்காக காங்கிரஸ் கட்சி அப்படி செய்தது. அதுபோன்றுதான் இப்போதும் செய்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் மற்றொரு வியூகம், மதச்சார்பின்மைக்கு புதிய அர்த்தம் கொடுத்து, சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவது. ‘இந்து பாகிஸ்தான்’ என்ற சொற்றொடரும், தலீபான்களுடன் இந்துக்களை ஒப்பிடுவதும் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்கான நோக்கம்தான். அதன்மூலம், இந்துக்களுடன் பகையை உண்டாக்க பார்க்கிறது. ஆனால், அது காங்கிரஸ் கட்சிக்கே பாதிப்பை உண்டாக்கி விடும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.  #ArunJaitley #Congress #Manufacturing  #tamilnews 
    Next Story
    ×