search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்வோம், செய்து சாதிப்போம்: பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை
    X

    செய்வோம், செய்து சாதிப்போம்: பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை

    செய் அல்லது செத்து மடி என்ற முதுமொழியை மாற்றி, ’செய்வோம், நிச்சயமாக செய்து சாதிப்போம்’ என்ற புதுமொழியை செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
    புதுடெல்லி:

    வெள்ளையனே வெளியேறு (Quit India) போராட்டத்தின் 75-வது நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

    வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஒரு புதிய தலமையின் உதயத்துக்கு அடித்தளமாக அமைந்தது. செய் அல்லது செத்து மடி என்ற மகாத்மா காந்தியின் அழைப்புக்கு மக்கள் அமோகமான ஆதரவை அளித்தனர்.

    சுதந்திர போராட்டத்தின்போதும் கூட அரசியல் மற்றும் சித்தாந்தங்களின் அடிப்படையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சித்தாந்தம் வேறாக இருந்தது. ஆனால், காலத்தின் தேவைக்கேற்ப மகாத்மா காந்தியின் தலைமையின்கீழ் ஒன்றிணைய அனைவரும் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்தது.

    இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது நமது நாட்டுக்கான போராட்டமாக மட்டும் இருக்கவில்லை. உலகின் பிறநாடுகளிலும் காலனி ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் இயக்கமாகவும் இது அமைந்தது.

    தற்போது மக்களின் மனநிலை வெகுவாக மாறி வருகிறது. கடமையைவிட தங்களுக்கான உரிமைகளின் மீது மக்கள் நாட்டம் கொண்டுள்ளனர். சாலைகளில் சிவப்பு விளக்கை கடந்து செல்வதைப் பற்றியும் பொது இடங்களில் எச்சில் துப்புவது குறித்தும் நாம் கவலைப்படுவதில்லை. இதில் எல்லாம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் வெறும் சட்டங்களை இயற்றுவது மட்டும் தீர்வாகாது, மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

    சில விவகாரங்களில் ஒன்றுபட்ட கருத்தொற்றுமை கொண்ட அணுகுமுறை அவசியமாக உள்ளது. வேற்றுமைகளை துறந்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு சட்ட வடிவம் கிடைத்தது கருத்தொற்றுமை அணுகுமுறையியின் மூலம் இந்த நாடு கண்ட சாதனைகளில் ஒன்றாகும். இது ஒரு அரசின் சாதனை மட்டுமல்ல இங்கே அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களின் சாதனையும் ஆகும்.

    வறுமை, கல்வியறிவின்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சவால்களை தற்போது நாடு எதிர்கொண்டுள்ளது. இதில் சாதகமான மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டும்.

    வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட 1942-ம் ஆண்டில் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டுவரை இந்திய மக்களின் மனங்களில் இருந்த அதே ஊக்கத்துடனும் உத்வேகத்துடனும் 2017-ல் தொடங்கி 2022-க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்கும் இயக்கத்துக்கு நாம் தயாராக வேண்டும்.

    ஊழலை ஒழிக்க வேண்டும். ஏழை மக்களுக்கான உரிமைகள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க வேண்டும். பெண்களுகான அதிகாரங்களை அளிப்பதற்கு இடையூறாக இருக்கும் தடைக்கற்களை தகர்க்க வேண்டும். கல்லாமையை ஒழிக்க வேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் சபதமேற்க வேண்டும்.

    செய் அல்லது செத்து மடி என்று 1942-ல் அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல் செய்வோம், சாதித்து காட்டுவோம் என்ற உறுதிமொழியை நாம் இன்று சபதமாக ஏற்க வேண்டும்.

    Next Story
    ×