search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் இன்று பிரசாரம்
    X

    சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் இன்று பிரசாரம்

    தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜயகாந்த் இன்று (திங்கட்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். சென்னையில் 3 தொகுதிகளிலும் அவர் வேன் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார். #DMDK #Vijayakanth
    சென்னை :

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார். சாலிகிராமம் வீட்டில் ஓய்வில் இருந்த அவரை அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதிலும், நாடாளுமன்ற தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தும், கூட்டணி விஷயத்திலும் விஜயகாந்த் கவனம் செலுத்தினார்.

    அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட நேரத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த நேரத்தில், தன்னால் பேச இயலவில்லை என்பதை நிருபர்களுக்கு கை சைகை மூலம் விஜயகாந்த் வெளிப்படுத்தினார்.

    அதேநேரத்தில், தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விஜயகாந்த், பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளாதது தே.மு.தி.க.வினர் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் விஜயகாந்த் சார்பாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜய பிரபாகரன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.



    இந்தநிலையில், தான் நன்றாக இருப்பதாகவும், விரைவில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாகவும், இந்த தேர்தல் தர்மத்துக்கும்-அதர்மத்துக்கும் இடையே நடப்பதாகவும், இதில் தர்மம் வெற்றி பெறும் என்றும், 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தே.மு.தி.க. தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் விஜயகாந்த் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இருப்பினும் விஜயகாந்த் எப்போது தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்? என்ற எதிர்பார்ப்பு மட்டும் தே.மு.தி.க.வினர் மனதில் இருந்து நீங்காத குறையாக இருந்தது. தேர்தல் பிரசாரம் நாளை ஓயும் நிலையில், விஜயகாந்த் சென்னையில் 3 தொகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பை தே.மு.தி.க. நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பை கேட்டு தே.மு.தி.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அதன்படி, வட சென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் சாம்பால் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

    3 தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் விஜயகாந்த் வேன் மூலம் பிரசாரம் செய்ய இருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் பகுதியில் விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர், மூலக்கடை, கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். #DMDK #Vijayakanth
    Next Story
    ×