search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 80 லட்சம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர் - வைகோ
    X

    தமிழகத்தில் 80 லட்சம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர் - வைகோ

    தமிழகத்தில் மட்டும் 80 லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர் என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். #Vaiko
    வேலூர்:

    ‘மோடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்று வேலூரில் வைகோ பேசினார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் மண்டி தெருவில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. ம.தி.மு.க. தலைவர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

    சுதந்திர இந்தியாவின் முக்கிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எதிர்கால இந்தியா என்ன ஆகும், ஜனநாயகமாக இருக்குமா? ரத்தக்கறைகள் கொண்ட பாசிச அதிகாரமாக மாறுமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் ஆற்றல் மிகுந்தவர். ஆங்கில புலமை கொண்டவர்.

    சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, கோட்சே வாழ்க என முழக்கமிட்டனர். இது மோடிக்கு கேட்கவில்லையா? அவருக்கு இதயம் இல்லையா? இரக்கம் இல்லையா?. இந்துத்துவா மதவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களை நிறைவேற்றும் மோடி அரசு பாசிச அரசாகும். 5 ஆண்டுகாலத்தில் ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. இந்தியாவில் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழகத்தில் தான் 6.5 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    மோடி அரசை தூக்கி எறிய வேண்டும். தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. அதை தட்டிக் கேட்காமல் கைகட்டி தமிழக அரசு உள்ளது.

    தமிழகத்தை தாரைவார்க்கும் அ.தி.மு.க. அரசையும் தூக்கி எறிய வேண்டும். தி.மு.க.வின் உதயசூரியன் சின்னம் வெற்றி சின்னமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராணிப்பேட்டையில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து வைகோ பேசியதாவது:-

    2கோடி பேருக்கு வேலை தருவதாக கூறிய மோடி 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை தரவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காவேரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளை தீர்க்கவில்லை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



    முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு இதற்கெல்லாம் உறுதுணையாக உள்ளது. தமிழகத்தில் 80லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Vaiko
    Next Story
    ×