search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் செய்தார்.
    X
    நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் செய்தார்.

    பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்த கட்சி திமுக- நடிகை விந்தியா பேச்சு

    நிலக்கரி, 2-ஜி ஸ்பெக்ட்ரம் என பஞ்ச பூதங்களில் ஊழல் செய்த ஆட்சி தி.மு.க தான் என்று தேர்தல் பிரசாரத்தில் நடிகை விந்தியா பேசினார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் செய்தார்.

    ஏழைகளின் வாழ்வில் இருளைப் போக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார். பரதன் ஆண்டாலும் அது ராம ராஜ்யமாகத்தான் இருந்தது. அபோல தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தை ஆட்சி செய்தாலும் அது ஜெயலலிதா ஆட்சியாகத்தான் உள்ளது. நமது கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற நடப்பது இந்த தேர்தல்.

    சேது சமுத்திர திட்டம், நிலக்கரி, 2-ஜி ஸ்பெக்ட்ரம் என பஞ்ச பூதங்களில் ஊழல் செய்த ஆட்சி தி.மு.க. ஆட்சி. தேர்தல் வந்தால் மட்டும் இந்துக்கள் மீது தி.மு.க.வினருக்கு திடீர் பாசம் வந்துவிடும்.

    கிராமந்தோறும் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது, சாலையோர கடைகளில் டீ குடிப்பது, சைக்கிள் ஓட்டுவது என பல்வேறு வகைகளில் மக்களை ஏமாற்றுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் மக்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.

    தற்போது நடைபெற்ற தேர்தலில் தோற்று விடுவோம் என்று தி.மு.க.வுக்கு பயம் வந்து விட்டது. அதனால்தான் வாக்கு எந்திரத்தில் கோளாறு என மக்களை குழப்புகிறார்கள். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அவருக்கு ஏமாற்றமே தேர்தல் பரிசாக மிஞ்சும்.

    எந்த கேள்வி கேட்டாலும் தினகரன் சிரித்துக் கொண்டே பதில் கூறுகிறார். ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தேர்தல் கமி‌ஷனுக்கே பணம் கொடுப்பவர் தினகரன். ஆர்.கே.நகர் மக்கள் இப்போதும் 20 ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களது அன்பை வாக்குகளாக மாற்றி வேட்பாளர் முனியாண்டியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.
    Next Story
    ×