search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அருகே அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் மறியல்
    X

    தஞ்சை அருகே அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் மறியல்

    தஞ்சை அருகே கண்டிதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து திடீர் தஞ்சை-மன்னார்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    கஜா புயலால் கண்டிதம்பட்டு கிராமத்தில் 600-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பை கணக்கெடுத்த அதிகாரிகள் 40 பேரை மட்டும் கணக்கெடுத்து அவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், புயல் பாதிப்பை முறையாக கணக்கெடுத்து அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அப்போது பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசீது வழங்கி, அதன்மூலம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படாமல் உள்ளது.

    இதனை கண்டித்தும், உடனடியாக கண்டிதம்பட்டு கிராமத்தை சேர்ந்த கஜா புயலால் பாதித்த 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். அதன்பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலைமறியலால் மன்னார்குடி- பட்டுக்கோட்டை சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி சாலைகளில் சுமார் 2 கி.மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். 

    Next Story
    ×