search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் அமைச்சர், அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியல்
    X

    டெல்டா மாவட்டங்களில் அமைச்சர், அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியல்

    கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் நடவடிக்கை பணிகளை செய்வதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். #GajaCyclone
    தஞ்சாவூர்:

    கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் நடவடிக்கை பணிகளை செய்வதில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளை நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர், மின்சார வசதி செய்து தர வேண்டும், மீட்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாபேட்டையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியினர் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.

    இந்த மறியல் போராட்டததில் பெண்கள், குழந்தைகள், கட்சி நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் முழுவதும் உள்ள 33 வார்டுகளிலும் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

    ஏராளமான டிரான்ஸ் பார்மர்கள் பழுதாகின. இதன் காரமணாக மின்சாரம் முழுமையாக தடைபட்டு குடீநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. வெளிமாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

    இதற்கிடையே நகரத்தில் படிப்படியாக மின் விநியோகம் கொடுக்கப்பட்டது. லாரிகள் மூலம் குடிநீரும் விநியோகிக்கப்பட்டது. இருந்தாலும் பல்வேறு வார்டுகளில் மீட்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



    அந்த வகையில் மன்னார்குடி நகரம் 23-வது வார்டு தெற்கு வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புயல் அடித்து 7 நாட்களை கடந்தும் பாதிப்புகளை பார்வையிட எந்த ஒரு அதிகாரிகளும் வராததை கண்டித்தும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியமான தேவைகளை உடனடியாக வழங்க கோரியும் திரையரங்கம் எதிரில் பொதுமக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் போராட்டம் நடந்த இடம் அருகே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தங்கியிருந்த தனியார் விடுதி இருந்தது. உடனே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அமைச்சர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு தங்களை அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்கவில்லை என்று வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பாதுகாப்பிற்கு நின்ற டி.எஸ்.பி. அசோகன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு நகராட்சி ஆணையர் விசுவநாதன், மின்வாரிய அதிகாரி கண்ணன் ஆகியோர் வந்து மீட்பு பணிகளை உடனடியாக தொடங்குவதாக உறுதியளித்தனர்.

    இதைத் தொடர்ந்து ஏராளமான பணியாளர்கள் அந்த பகுதியில் மீட்பு பணிகளை உடனே தொடங்கினர். அதன் பின் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி பகுதியில் புயல் தாக்கிய நாளில் இருந்து இன்று வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 7 நாட்கள் ஆகியும் மின்சார விநியோகம் தொடங்கப்படாததால் விரக்தியடைந்த பட்டினச்சேரி மீனவர்கள், நாகூர் வாஞ்சூர் சோதனைச்சாவடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காரைக்கால், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.

    தகவலறிந்த தாசில்தார் இளங்கோவன், நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உடனே அந்த பகுதியில் மின்சாரம் வழங்கப்படுவதாக உறுதியளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதே போன்று முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மெயின்ரோட்டில் பொதுமக்கள் திரண்டு வந்து இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் முத்துப்பேட்டை அடுத்துள்ள ஆலங்காடு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    Next Story
    ×