search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் பன்றி,டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி
    X

    கோவையில் பன்றி,டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி

    கோவையில் பன்றி,டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த 2 வாரத்தில் 18-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதனையடுத்து அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் திடீரென கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தனர். பின்னர் அமைச்சர்கள் டெங்கு, பன்றி மற்றும் வைரஸ் காய்ச்சல் வார்டுகளை பார்வையிட்டனர். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தனர்.

    அமைச்சர்கள் ஆய்வின் போது வார்டுகள் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. எனவே வார்டு மேற்பார்வையாளர்கள் உள்பட 4 பேரை அமைச்சர் விஜயபாஸ்கர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்த பன்னீர் செல்வம். இவரது மனைவி கவிதா (வயது 24).

    இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனையடுத்து கடந்த 2-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் கவிதா சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் அவரது ரத்தத்தை பரிசோதனை செய்த போது கவிதாக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அவரை சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கவிதா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர் புஷ்பா நகரை சேர்ந்தவர் வளர்மதி (45). இவர் கடந்த 15 நாட்களுக்கு மேலாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். இங்கு வளர்மதிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு வளர்மதி பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 18 பேரும், டெங்கு காய்ச்சலக்கு ஒருவரும், வைரஸ் காய்ச்சலுக்கு 58 பேர் என மொத்தம் 77 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu #Dengue

    Next Story
    ×