search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி
    X

    கருணாநிதி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #DMKLeader #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    சமாதியின் அருகில் கருணாநிதி படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடியும் கட்டப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    இன்று கருணாநிதி நினைவிடத்துக்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து இன்று காலை கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

    கட்சித் தொண்டர்கள் கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். கருணாநிதியின் சமாதி அருகே பொதுமக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் பெண் ஊழியர்கள் 2 பேர் உள்ளனர். தொண்டர்கள் கொடுக்கும் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை அவர்கள் வாங்கிச் சென்று சமாதியில் வைக்கிறார்கள்.


    சமாதியில் அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் அதன் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். பெண் தொண்டர்கள் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    ஆஸ்பத்திரியிலும் அவரை பார்க்க முடியவில்லை. ராஜாஜி ஹாலிலும் பார்க்க முடியவில்லை. அஞ்சலியாவது செலுத்தலாம் என இங்கு வந்துள்ளோம் என்று அவர்கள் கூறி விட்டு சென்றனர்.

    கருணாநிதி சமாதியில் தி.மு.க. தொண்டர் ஒருவர் மொட்டை போட்டுக்கொண்டார். அவரது பெயர் வினோத் கண்ணா. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மொட்டை போட்ட பிறகு கருப்பு சட்டை அணிந்தபடி அவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-


    நான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர். எனக்கு கருணாநிதி மீது பற்று அதிகம். அவர் மறைவால் மனதுக்கு கஷ்டமாக உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தேன். காவேரி ஆஸ்பத்திரியில் காத்திருந்த நான் நேற்று காலையில் ராஜாஜி ஹாலுக்கு வந்தேன். ஒரு தொண்டனாக நான் அவருக்கு எதுவும் செய்யவில்லை. எனவே மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தி மனதை தேற்றிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கருணாநிதி சமாதிக்காக நேற்று பள்ளம் தோண்டப்பட்டதால் ஆங்காங்கே மண் குவிக்கப்பட்டிருந்தது. இன்று அவை பொக்லைன் மூலம் சமதளமாக்கி சீரமைக்கப்பட்டன. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    Next Story
    ×