search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து- 3 பெண்கள் படுகாயம்
    X

    கூடலூர் அருகே 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து- 3 பெண்கள் படுகாயம்

    கூடலூரில் 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கூடலூர்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஜக்கிரியா (42), நபிஷா (73), சபியா (43) ஆகிய 3 பேர் ஒரு ஜீப்பில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள எல்லமலை பெரிய சோலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

    நேற்று இரவு அவர்கள் ஊர் திரும்பினார்கள். இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவர்களது ஜீப் கீழ்நாடுகாணி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. ஜீப்பில் இருந்தவர்கள் அலறினார்கள். இந்த சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பு சாமி, தீயணைப்பு வீரர்கள் சங்கர், தாமஸ், ரமேஷ் குமார், ஜாபர் அலி ஆகியோர் வந்து கயிறு கட்டி ஜீப்பை மீட்டனர்.

    இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த ஜக்கிரியா, நபிஷா, சபியா ஆகியோர் காயம் அடைந்தனர். நபிஷாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×