search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    12 அமாவாசைகளை கடந்துவிட்டோம் - மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர்கள் பாய்ச்சல்
    X

    12 அமாவாசைகளை கடந்துவிட்டோம் - மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர்கள் பாய்ச்சல்

    12 அமாவாசைகளை தாண்டி இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருப்பதாக அ.தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழும் என கூறிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு மீது தினமும் ஊழல் புகார்களை கூறி வருகிறார். இந்த அரசு நீடிக்காது, சட்டசபை தேர்தல் வரும், தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறிவருகிறார். அவருக்கு அமைச்சர்கள் காட்டமாகவும், கிண்டலாகவும் பதில் அளித்துள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சி கலையும் கலையும் என்று 1 வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    தூங்கி எழுந்தாலே ஆட்சி கலைந்துவிடும் என்று தான் அவர் கூறுவார். கனவுலகில் சஞ்சரிக்கிற மனிதர் யார் என்றால் அது மு.க.ஸ்டாலின்தான். இப்போது 6 மாதங்களில் ஆட்சி கலையும் என்கிறார்.

    அவர் மாய உலகில் கருத்து தெரிவிக்கிறார். கட்டப் பஞ்சாயத்து போன்ற வழிகளை கையாண்டு தான் இந்த நிலைக்கு வந்துள்ளார். முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவுலகில் வாழும் ஸ்டாலின் ஒரு மாயமனிதர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களால் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இதனால்தான் தமிழகம் இன்று முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    ஜெயலலிதா மறைந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சி ஒரு அமாவாசை, 2 அமாவாசையில் முடிவடைந்து விடும் என்று மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் கூறினார்கள். ஆனால் 12 அமாவாசைகளை தாண்டி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இன்னும் 3 ஆண்டு ஆட்சியையும் முழுமையாக பூர்த்தி செய்வோம். எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும். ஜெயலலிதா செயல்படுத்திய பெண்களுக்கான திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×