search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விருந்தானது வாழை இலையில் சாதமும் ஆட்டு கறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது.
    • செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி ஊராட்சி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.


    இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஆண்டு தோறும் நடைபெறும் விழாவில் பக்தர்கள் வேலை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் , நோய் நொடியின்றி வாழவும், பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் கருப்பசாமிக்கு கருப்பு ஆடுகள் மட்டுமே பலியிடுவார்கள். பக்தர்கள் கோவிலில் விட்டுச் செல்லும் ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும்போது முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை பொதுமக்கள், விவசாயிகள் யாரும் விரட்டமாட்டார்கள். விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கிராமப்புறங்களில் சுற்றி திரியும் ஆடுகளை எல்லாம் ஒன்று சேர்த்து சுவாமிக்கு பலியிடப்படும்.

    இந்த நிலையில் திருவிழா இன்று காலை தொடங்கிய நிலையில் கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கினர்.பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 125 ஆடுகள் பலியிடப்பட்டு, 2500 கிலோ அரிசியுடன் உணவு சமைக்கப்பட்டது. பின்னர் சமைத்த உணவு, இறைச்சியை சாமிக்கு படைத்து பூஜை செய்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


    இந்த கறி விருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தானது வாழை இலையில் சாதமும் ஆட்டு கறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவார்கள்.

    இந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொரிக்கம் பட்டி, பெருமாள் கோவில்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான், கருமாத்தூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    • அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • குழுவினர் இன்று மழை பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    நெல்லை:

    தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை, தலையணை, நம்பிகோவில், மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மேலும் 5 நாட்களுக்கு நெல்லையில் கனமழை, தென்காசியில் மிக கனமழைக்கான எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் மழையால் சேதங்கள் ஏற்பட்டால் உடனே மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் 90 பேர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்று வந்தனர். இவர்கள் பாளை ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காக ரப்பர் படகு மற்றும் மரங்கள் விழுந்தால் அதை அகற்ற தேவையான உபகரணங்கள், ஜெனரேட்டார்கள் உள்ளிட்டவைகளையும் கொண்டு வந்துள்ளனர். இந்த குழுவினர் இன்று மழை பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இதனையொட்டி இன்று காலை முதலே அவர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை பிரித்து எடுத்துக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு புறப்பட்டனர்.

    • எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார்.
    • ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களிலும் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு ஜூன் 4-ந்தேதி அன்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனி அணியாக களம் கண்டதால் வாக்குகள் பிரிந்து தி.மு.க.வுக்கே அது சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. வுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருந்த அ.தி.மு.க.வின் கனவு பலிக்காமலேயே போய் விட்டது. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்து களம் கண்ட அ.தி.மு.க., பா.ம.க.வையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பாரதிய ஜனதா கூட்டணியில் போய் சேர்ந்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் களம் கண்டுள்ள அவர் வெற்றி பெறுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு தனிக்கட்சியை தொடங்கிய டி.டி.வி. தினகரனும் பாரதிய ஜனதாவோடு கைகோர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இப்படி ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் இருவருமே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக கைகோர்த்திருப்பது அந்த கட்சிக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கக் கூடாது என்றே அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் கட்சி மேலிடத்திடம் குறைபட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்று, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனையும் அரவணைத்துச் சென்றிருந்தால் நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணி வலுவானதாகவே மாறி இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெற்று பா.ம.க.வும் அந்த கூட்டணியில் சேர்ந்திருந்தால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு அந்த அணி கடும் போட்டியாக இருந்திருக்கும் என்றே கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போதைய சூழலில் ஓட்டுகள் பிரிந்து தி.மு.க. வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகளும் தெரிவித்து உள்ளன.


    எனவே அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தும் சில அதிரடியான முடிவுகளை அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய கட்டாயமாகி இருப்பதாகவே கட்சியினர் பலர் கூறியுள்ளனர். குறிப்பாக ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை மீண்டும் உருவாக்கினால் தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கமாக எடுத்துக் கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இது தொடர்பாக திரை மறைவில் ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் இன்னமும் முழுமையாக தீர்க்கப்படாமலேயே இருக்கும் நிலையில் அவருடன் எப்படி கை கோர்த்து செயல்பட முடியும்? என்கிற கேள்விகளையும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் எழுப்பியுள்ளனர். இப்படி அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவினால் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சின்னமணி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார்(வயது 70). இவர் நாகை ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி புனிதா சென்னையில் ஆடிட்டராக உள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சுகுமார் கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்று உள்ளார். சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இவரது வீட்டில் தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த அமுதா என்பவர் வீட்டு வேலைகளை பார்த்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல அவர் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை கதவை திறக்க அமுதா வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் சுகுமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுகுமார் தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறிக்கிடந்தன.

    வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதை அறிந்த போலீசார், சென்னையில் உள்ள சுகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் குறித்து கேட்டறிந்தனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் சீனோ வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த நாய் சுகுமாரின் வீடு அமைந்துள்ள தெருவின் முனை பகுதி வரை ஓடிச்சென்று திரும்பிவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவரது வீட்டின் முன்பக்க சுவர் ஏறி குதித்து உள்ள சென்ற மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து லாக்கரில் வைத்திருந்த சுமார் 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

    சுகுமார் வந்த பின்பு தான் வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பணம் எவ்வளவு இருந்தது என்பது முழுமையாக தெரியவரும்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி போலீசார் திருட்டு போன வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மதியம் 3 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியிலும் கடந்த 2 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை தீவிரமடைந்து வருகிறது.

    அதன்படி ஈரோடு புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம், அந்தியூர், கோபி செட்டிபாளையம் பகுதிகளிலும் ஈரோடு மாவட்ட எல்லை பகுதிகளான தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலை கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஈரோடு மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் இருந்தது. ஆனால் மதியம் 3 மணிக்கு பிறகு மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.

    பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மதியம் 3 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 3 மணிக்கு பின்னர் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. 3 மணிக்கு பெய்ய தொடங்கிய கனமழை மாலை 6 மணி வரை வெளுத்து வாங்கியது.

    இதன் காரணமாக பெருந்துறை, காஞ்சிக்கோவில், பெத்தம்பாளையம், திங்களூர், நசியனூர், பணி க்கம்பாளையம், கிருஷ்ணம்பாளையம், விஜயமங்கலம், புங்கம்பாடி போன்ற தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. புங்கம்பாடியில் உள்ள அணைக்கட்டு பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைக்கட்டு நிரம்பி அந்த உபரிநீர் அருகே உள்ள குளங்களுக்கு சென்றது.

    பெருந்துறை அருகே தெற்கு பள்ளம், பெருந்துறை ரிங் ரோடு பகுதி, டைமன் சிட்டி பகுதி உள்பட பெருந்துறையில் உள்ள 6 குளங்கள் நேற்று பெய்த பலத்த மழையால் நிரம்பியது. இதன் உபரிநீர் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டிற்கு சென்று சூரம்பட்டி அணைக்கட்டும் நிரம்பியது. 6 குளங்கள், அணைக்கட்டு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியிலும் கடந்த 2 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கவுந்தப்பாடி, சென்னிமலை, கொடுமுடி, பவானி, மொட க்குறிச்சி, பவானிசாகர், நம்பியூர், வரட்டுப்பள்ளம் என ஈரோடு புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

    அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் லேசான சாரல் மழையுடன் நின்றுவிட்டது. இதனால் மாநகர் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் பெய்த மழையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-51, குண்டேரிப்பள்ளம்-25.20, கவுந்தப்பாடி-14, சென்னிமலை-12, கொடுமுடி-8.60, பவானி-6.40, மொடக்குறிச்சி-6, பவானிசாகர்-5, நம்பியூர்-3.10, வரட்டுப்பள்ளம்-3.

    • அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.
    • 1 லட்சத்து 61 ஆயிரத்து 977 பேர் விண்ணப்ப பதிவு கட்டணம் செலுத்தி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

    உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை, எளிய மாணவிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக விண்ணப் பித்து வருகின்றனர்.

    இதுவரை விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 7 ஆயிரத்து 532 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 1 லட்சத்து 61 ஆயிரத்து 977 பேர் விண்ணப்ப பதிவு கட்டணம் செலுத்தி உள்ளனர்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க 2 நாட்கள் இருப்பதால் இன்றும் நாளையும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அடுத்த மாதம் 6-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல் அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

    2 வார காலம் போதுமானதல்ல. மேலும் 10 நாட்கள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் விண்ணப்பிக்கப்படுகிறது. அதனால் விண்ணப்பிப்ப தற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    • புதிய விமான சேவைகள், வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும்.
    • பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து, சவுதி அரேபியாவின் தமாம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன.

    அந்தப் பயணிகளின் வசதிக்காக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் நகருக்கும், இதை போல் பாங்காக்கில் இருந்து சென்னைக்கும், இரண்டு விமான சேவைகளை புதிதாக, கடந்த 15-ந்தேதியில் இருந்து, இயக்கத் தொடங்கியுள்ளது.

    இந்த விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகின்றன.

    அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சவுதி அரேபியாவின் தமாமிற்கு, சென்னை யில் இருந்தும், தாமாமில் இருந்து சென்னைக்கும் இடையே, இரண்டு விமான சேவைகளை, வருகின்ற ஜூன் மாதம் 1-ந்தேதியில் இருந்து புதிதாக இயக்கத் தொடங்குகிறது.

    இந்த விமான சேவைகள் வாரத்தில் இரண்டு நாட்கள், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமானமாக இயங்கத் தொடங்குகிறது.

    இதேப்போல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் துர்காப்பூருக்கும், அதேப்போல் துர்காப்பூரில் இருந்து சென்னைக்கும் புதிதாக நேரடி விமான சேவை, கடந்த 16-ந்தேதி தேதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.

    இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இயக்கும் இந்த புதிய விமான சேவைகள், வாரத்தில் 3 நாட்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

    சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில், புதிய நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது, பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • போலீசை பார்த்ததும் கஞ்சா பையை போட்டு விட்டு தப்பி ஓட்டம்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. கடந்த சில நாட்களாக ஈரோடு வழியாக செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரெயில் களையும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோத னை செய்து வருகின்றனர்.

    அதன்படி ஜார்க்கென்ட் மாநிலம் டாட்டா நகர் பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தது.

    நேற்று இரவு ஈரோடு ரெயில் நிலையம் அருகே வந்த போது ரெயில்வே போலீசார் ரெயிலில் சோதனை நடத்தினர்.

    அப்போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.1 பெட்டியின் கழிப்பறை அருகே சோதனை செய்த போது பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்த பொழுது அதில் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ரெயிலில் கஞ்சா கடத்திய கும்பல் போலீஸ் வருவதை பார்த்ததும் கஞ்சா பையை போட்டு விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    கஞ்சாவை கைப்பற்றிய ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை ஈரோடு மது விலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
    • சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் முன் எப்போதும் இல்லாத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2 மாதம் சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு தற்போது கோடை மழை ஆறுதலாக உள்ளது.

    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    அதிகபட்ச வெப்பம் நிலை இயல்பைவிட குறைவாகவே உள்ளது. இதனால் உஷ்ணம் மற்றும் புழுக்கத்தில் இருந்து மக்கள் தற்போது சற்று விடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று முதல் 22-ந் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரண மாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

    அதன் படி இன்று (18-ந் தேதி) அநேக இடங்களில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழையும் தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    நாளை (19-ந் தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராம நாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை

    சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 34-35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 26-27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் இப்பகுதிக ளுக்கு மீனவர்கள் 21-ந் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை

    வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மிக கன மழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளனர்.

    அதன்படி தலா 30 வீரர்கள் கொண்ட தலா 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    கோவை மாவட்டத்துக்கு ஒரு குழு அனுப்பப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் 300 வீரர்களை கொண்ட 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் அனைத்து மீட்பு உபகர ணங்களுடன் தயார் நிலை யில் நிறுப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசின் கோரிக் கையின்படி அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலை யில் உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    TNL01180524: முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அ

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    விசாக திருநாளான வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    23-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.

    மேலும், கோடை விடுமுறையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து, கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் குவியும் பக்தர்கள் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து முருகபெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • அருவிக்கரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கோடை மழை ஒரு சில பகுதிகளில் கனமழை யாகவும், சில இடங்களில் சாரலாகவும் பெய்து வருகிறது. காலையில் இருந்து வானம் மேக மூட்டமாக காணப்படும் நிலையில் பிற்பகலில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    பிற்பகலில் தொடங்கிய மழை இரவு வரையிலும் நீடித்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 5.2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது. பிரதான அணையான பாபநாசத்தில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. கன்னடியன் கால்வாய் பகுதிகளிலும் பலத்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளுக்கு நீர் வரத்து பெரிய அளவில் இல்லை என்றாலும் கோடை மழையால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக களக்காடு, திருக்குறுங்குடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் தலையணை அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

    களக்காட்டில் அதிக பட்சமாக 22.6 மில்லி மீட்டரும், மூலக்கரைப் பட்டியில் 29 மில்லி மீட்டரும் மழை பெய்தது. சேரன்மகாதேவி, முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் அம்பையில் கனமழை பொழிந்தது. வி.கே.புரம், பாபநாசம், அகஸ்தியர்பட்டி, சிவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.அம்பையில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    இதற்கிடையே வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பில் வருகிற 22-ந்தேதி வரையிலும் நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க செல்லவேண்டாம் என கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை நீடித்து வரும் நிலையில், இன்று முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று மாவட்டத்தில் முழுமையாக அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஒரு வாரமாகவே அங்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் வரை பழைய குற்றாலம் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    உடனே சுற்றுலா பயணிகள் அனைவரும் அருவியில் இருந்து வெளியேறிய நிலையில் வெள்ளம் திடீரென அருவியின் படிக்கட்டு பகுதிகளிலும் நிரம்பி ஓடியது. இந்த வெள்ளப் பெருக்கின்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தான்.

    தீயணைப்பு துறையினர் அவரது உடலை சுமார் 500 அடி தூரத்தில் பாறை இடுக்கில் மீட்டனர். தகவல் அறிந்து அங்கு கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விரைந்து வந்தனர். தொடர்ந்து பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு கலெக்டர் தடை விதித்தார்.

    மேலும் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் யாரும் அருவிக்கரைக்கு வர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04633 290548 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே மேற்கொண்டு அசம்பாவி தங்கள் நடைபெறாமல் இருக்க பழைய குற்றாலம் அருவியின் அருகே இரும்பு பேரிகார்டுகள் வைக்கப்பட்டு அருவிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக அருவிக்கரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அணைகளை பொறுத்தவரை ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 6 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கருப்பாநதி, கடனா நதி நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

    மாலை 3 மணிக்கு பிறகு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அங்கு இன்று காலை நிலவரப்படி 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    இன்றும் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. குளிர்ந்த சூழ்நிலை நிலவியதோடு மூடு பனியும் நிலவியது. இன்று காலையில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி நிலவியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.

    • 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
    • 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன்குழி, பஞ்சல், தோமையர்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சுமார் 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×