search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக்கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகியது.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, மும்பை அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர்களில் ஒருவருமான அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்டது.

    அந்த வீடியோவில், ரோகித் சர்மாவும், அபிஷேக் நாயரும் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. சில ரசிகர்கள் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோகித் சர்மா பேசுவதை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். அதில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி பேசி இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கிவிட்டது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னியுடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கேமராமேனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார். ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது. எனவே ஆடியோவை ஆப் செய்யுங்கள் என தெரிவித்தார். இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது.
    • அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி மும்பை அணி தனது கடைசி 'லீக்' ஆட்டத்தி்ல் லக்னோவிடம் தோற்று கடைசி இடத்தை பிடித்தது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.

    நிக்கோலஸ் பூரண் 29 பந்தில் 75 ரன்னும் (5 பவுண் டரி), 8 சிக்சர்), கேப்டன் கே.எல்.ராகுல் 41 பந்தில் 55 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். நுவன் துஷாரா, பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 196 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 18 ரன் வித்தியாசத் தில் தோற்றது.

    ரோகித் சர்மா 38 பந்தில் 68 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), நமன்திர் 28 பந்தில் 62 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக் தலா 2 விக்கெட்டும், குணால் பாண்ட்யா, மோஷித் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தை பிடித்தது.

    லக்னோ 7-வது வெற்றியை பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது. லக்னோவும், டெல்லியும் தலா 14 புள்ளிகளை பெற்று இருந்தாலும் ரன் ரேட்டில் மிக மோசமாக இருந்ததால் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியாமல் போனது.

    இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணி பந்து வீசவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டி தொடரில் இதே மாதிரி தடை விதிக்கப்பட்ட 2- வது வீரர் ஆவார். ஏற்கனவே ரிஷப் பண்டுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது டெல்லி அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பாதித்தது.

    ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த சீசன் முடிந்துவிட்டது. மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.

    மேலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அணியில் ஆடிய மற்ற வீரர்களுக்கும் தலா ரூ.12 லட்சம் அல்லது 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    • முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
    • 'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார்?

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழ்ந்து விட்டன.

    வாழ்வா-சாவா ஆட்டம்

    'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா? நானா? என்ற போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று தலைவிதியை நிர்ணயிக்கும் இந்த ஆட்டம் இரு அணிக்கும் வாழ்வா-சாவா போராட்டமாகும். முக்கியமான இந்த ஆட்டத்துக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றன.

    சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டாலோ அடுத்த சுற்றுக்குள் தகுதி பெற்று விடும். ஆனால் பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே நிகர ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி விட்டு அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

    பெங்களூரு அணி எப்படி?

    பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.387 ஆக உள்ளது. தனது முதல் 7 ஆட்டங்களில் 6-ல் தொடர்ச்சியாக தோல்வி கண்டு தத்தளித்த பெங்களூரு அணி கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது. தொடக்கத்தில் படுமோசமாக இருந்த அந்த அணியின் பந்து வீச்சு இப்போது நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாகும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் ஒரு சதம் 5 அரைசதம் உள்பட 661 ரன்கள் சேர்த்து தொடரில் அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (3 அரைசதம் உள்பட 367 ரன்), ரஜத் படிதார் (5 அரைசதம் உள்பட 320 ரன்), தினேஷ் கார்த்திக் (2 அரைசதம் உள்பட 301 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், லோக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். கேமரூன் கிரீன் ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் பொருட்டு இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜாக்ஸ் (230 ரன்), ரீஸ் டாப்லே (4 விக்கெட்) ஆகியோர் நாடு திரும்பியது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    நிலையற்ற சென்னை

    5 முறை சாம்பியனான சென்னை அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.528 ஆக இருக்கிறது. வெளியூரில் இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 2-ல் மட்டுமே வெற்றி கண்டு நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணி சொந்த மண்ணில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 583 ரன்), டேரில் மிட்செல் (2 அரைசதத்துடன் 314 ரன்) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோர் சொதப்பி வருகிறார்கள்.

    அத்துடன் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே (3 அரைசதத்துடன் 389 ரன்) கடந்த 4 ஆட்டங்களில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பேட்டிங் வலுப்பெற அவர்கள் நிலைத்து நின்று கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

    பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சிமர்ஜீத் சிங் நம்பிக்கை அளிக்கின்றனர். முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா விலகலால் ஏற்பட்டுள்ள பலவீனத்தை சரிக்கட்ட ஷர்துல் தாக்குர் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    பெங்களூருவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க மல்லுக்கட்டும்.

    அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்த பெங்களூரு அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 21 முறையும், பெங்களூரு அணி 10 தடவையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இரவு 7.30 மணிக்கு...

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), மேக்ஸ்வெல், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் அல்லது யாஷ் தயாள், கரண் ஷர்மா, முகமது சிராஜ், லோக்கி பெர்குசன்.

    சென்னை: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி அல்லது ஷர்துல் தாக்குர், டோனி, மிட்செல் சான்ட்னெர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
    • இந்தத் தொடரில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் இறுதிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோவுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை இழந்த ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை போராடி வென்றார். இறுதியில் ஸ்வரேவ் 1-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வரேவ் சிலியின் நிக்கோலஸ் ஜாரி உடன் மோதினார்.

    • அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • லக்னோ தரப்பில் ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பூரன் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    அதனை தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. மந்தமாக விளையாடிய டெவால்ட் ப்ரீவிஸ் 20 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.

    அவர் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பாண்ட்யா 16 ரன்னிலும் வதேரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் நமன் வெற்றிக்காக போராடினர். அதிரடியாக விளையாடிய நமன் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் மும்பை அணியால் 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார்.
    • அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.

    ஐபிஎல் தொடரின் 67-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.

    இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. போட்டியின் 2-வது ஓவரை அவர் தான் வீசினார். இந்த ஓவரில், 2-வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஸ்டோய்னிஸிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.

    ஆனால், அவர் ரிவ்யூ எடுக்கவே, பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்றது தெளிவாக தெரிந்தது. இதன் காரணமாக நடுவர் முடிவு திரும்ப பெறப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்காத போதிலும், அவர் கிரீஸிற்குள்ளாக நின்று கொண்டிருந்தார். அப்போது அர்ஜூன் டெண்டுல்கர் பந்தை அவரை நோக்கி எறிவது போன்று ஆக்ஷன் செய்தார். இதற்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஏதோ கூறியபடி நடந்து வந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சச்சின் மகன் என்பதால் அவருக்கு அபராதம் விதிப்பார்களா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.

    அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார். அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார். அவரின் 3-வது ஓவரின் முதல் 2 பந்துகளை பூரன் 6 சிக்சர் விளாசினார். இதனால் பயந்து அர்ஜூன் வெளியேறிவிட்டதாகவும் கிண்டலடித்து வருகின்றனர். 

    • இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற நாடுகளில் நாங்களும் உள்ளோம்.
    • டி20 உலகக்கோப்பையை நடத்திய நாடுகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ரோஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்முறை எங்களிடம் மிக மிக நல்ல அணி உள்ளது. நாங்கள் பேசும்போது, அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் ஆன்டிகுவாவில் உள்ள ஒரு முகாமில் டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக தங்கள் பயிற்சிகளை தொடங்கவுள்ளனர். இத்தொடரில் எங்கள் அணி வீரர்கள் சீரான மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தவாரான கிரிக்கெட்டை விளையாடியனால் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்.

    இது எளிதானது அல்ல என்று தெரியும். ஆனால் இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற நாடுகளில் நாங்களும் உள்ளோம். எனவே இம்முறை அதனை நாங்கள் 3-வது கோப்பையாக மாற்ற முயற்சிப்போம். மேலும் டி20 உலகக்கோப்பையை நடத்திய நாடுகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை. ஏனவே நாங்கள் சிறப்பாக செயப்பட்டு அதனை மாற்ற முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு ஆம்ரோஸ் கூறினார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி:

    ரோவ்மன் பாவெல் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பூரன் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - படிக்கல் களமிறங்கினர்.

    படிக்கல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 28 ரன்னிலும் ஹூடா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேஎல் ராகுலுடன் பூரன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய பூரன் 19 பந்தில் அரை சதம் கடந்தார்.

    தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அர்ஷத் கான் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். இவர் போன போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து அசத்தினார். அடுத்து ஓவரில் கேஎல் ராகுல் 55 ரன்களுடன் வெளியேறினார்.

    69 ரன்னில் 3-வது விக்கெட்டை இழந்த லக்னோ அணி 178 ரன்னில் 4-வது விக்கெட்டை பறிகொடுத்தது. அடுத்த 1 ரன்னை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில் பதோனி மற்றும் குர்ணால் பாண்ட்யா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இந்திய அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங், ரிக்கி பாண்டிங் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருந்தது.
    • பிசிசிஐ உயர்கட்ட நிர்வாகிகளின் பட்டியலில் அவரின் பெயர் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

    மும்பை:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைய உள்ளது. அதன்பின் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர விரும்பாததால், அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதலில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் விருப்பம் காட்டவில்லை. இதனால் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதாக தகவலகள் வெளியானது. குறிப்பாக ஸ்டீபன் பிளெமிங், ரிக்கி பாண்டிங், உள்ளிட்டோர் நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் கேகேஆர் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிசிசிஐ உயர்கட்ட நிர்வாகிகளின் பட்டியலில் கவுதம் கம்பீரின் பெயர் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. கவுதம் கம்பீர் உடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்ட 2 ஆண்டுகளும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் அந்த அணியை மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • 95 சதவீத மக்கள் சச்சின் சிறந்தவர் என்று சொல்கின்றனர்.
    • உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    லண்டன்:

    இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது வாசிம் அக்ரம் கிளென் மெக்ராத், அக்தர், போன்ற மகத்தான பவுலர்களை எதிர்கொண்டார். அந்த வகையில் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டார்.

    அவர் 30000-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து 100 சதங்கள் விளாசி இந்தியாவின் பல மகத்தான வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    மறுபுறம் 2008-ல் அறிமுகமான விராட் கோலியும் கிட்டத்தட்ட சச்சின் போலவே நவீன கிரிக்கெட்டில் உலகின் டாப் பவுலர்களுக்கு சவாலை கொடுத்து இதுவரை 26000+ ரன்கள் 80 சதங்கள் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதனால் சில சமயங்களில் சச்சினை விட விராட் கோலிதான் சிறந்தவர் என்று ரசிகர்கள் கூறுவது வழக்கமாகும்.

    இந்நிலையில் சச்சினை விட பிரையன் லாரா சிறந்த பேட்ஸ்மேன் என்று இங்கிலாந்து முன்னாள் வீரரான டேவிட் லாய்ட் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சமூக வலைதளங்களில் நான் செய்த ஒரு ஆராய்ச்சியை இங்கே சொல்கிறேன். இங்கே 95 சதவீத மக்கள் சச்சின் சிறந்தவர் என்று சொல்கின்றனர். சச்சின் தன் ஈகோவை வீட்டிலேயே விட்டு விடுவார். மறுபுறம் விராட் கோலி மிகவும் ஆளுமை மிக்க வீரர் என்று நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் அற்புதமானவர். விராட் கோலி ஆபத்தானவர்.

    ஒருவேளை சச்சின் மற்றும் லாரா ஆகியோரில் சிறந்தவரை தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் நான் லாராவை தேர்ந்தெடுப்பேன். கண்டுபிடிக்கப்படாத இடங்களில் கூட பந்தை அடிக்கக்கூடிய லாரா எல்லாவற்றையும் இயல்பாக செய்யக்கூடியவர். இருப்பினும் அதை நான் சச்சினிடம் பார்த்ததில்லை. சச்சின் எப்போதும் சமநிலையில் இருப்பார்.

    டெஸ்ட் போட்டியில் விராட் கோலியும் அவரும் அற்புதமான வீரர்கள். உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சச்சின் உன்னதமானவர். அதே சமயம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என்று பார்க்கும்போது விராட் கோலி சிறந்தவர்.

    என்று கூறினார்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. அந்த அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் (-0.787) மிகவும் பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    • பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
    • நாளை பெங்களூருவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறப் போவது யார்? என்பது நாளை தெரியும். பெங்களூருவில் நாளை நடக்கும் 68-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    14 புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் சென்னை அணி தகுதி பெற்று விடும்.

    பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ரன் ரேட் அதிகமாக வைத்து வெற்றி பெற வேண்டும். பெங்களூரு முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெல்ல வேண்டும். ஒருவேளை மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டால் பெங்களூரு அணிக்கு கடினமாக அமையும்.

    இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம் குறித்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. அந்த வீடியோவில் மைதானத்தில் அதிகபடியான நீரை பைப் மூலம் ஊற்றுகின்றனர். அந்த நீர் சிறிது நேரத்தில் காணாமல் பொய்விட்டது.

    இதனால் நாளை எவ்வளவு மழை பெய்தாலும் போட்டி சீக்கிரம் தொடங்கி விடும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

    நாளை பெங்களூருவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×