என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
- உடலை நிர்வாகம் செய்வதே மனம் தான்.
- மனிதன் உணர்ச்சிகளை நீக்கி உணர்வுகளில் வாழ முயற்சிக்க வேண்டும்.
மனிதர்களுக்கு இரண்டு வகைகளில் நோய்கள் ஏற்படுகின்றன. உணவு, காற்று, நீர் இவைகளால் உடலுக்கு நோய் உருவாகும். கவலை, துக்கம், பயம், கோபம், பெருமை, பொறாமை, கர்வம் போன்றவை உணர்ச்சிகளாலும் நோய் உருவாகும்.
உடலை நிர்வாகம் செய்வதே மனம் தான். உங்கள் உடலை ஆட்டிப்படைக்கும் கவலை, துக்கம், பயம், கோபம், பெருமை போன்றவை உணர்ச்சிகளே.
உணர்வு பூர்வமாக வாழ்வது என்பது அமைதி, நிம்மதி, சாந்தி, சமாதானம் வாழ்வது. மனிதன் உணர்ச்சிகளை நீக்கி உணர்வுகளில் வாழ முயற்சிக்க வேண்டும்.
கவலை என்கிற உணர்ச்சி மண்ணீரல், வயிறு சம்பந்தப்பட்டது.
பசி என்பது வயிற்றை சார்ந்தது. ஒருவர் நல்ல பசியில் சாப்பிட தொடங்குகிறார். அப்பொழுது கவலையான ஒரு செய்தி வருகிறது. பசி காணாமல் போய் விடுகிறது. கவலை ஒன்று வந்தால் பசி உணர்வு இருக்காது. ஜீரண நீர் சுரக்காது. உங்கள் வயிறு, 'உன்னுடைய பிரச்சனை முடித்து விட்டு வா'என்று சொல்லும்.
கவலையோடு வேண்டா வெறுப்யோடு சாப்பிடும் உணவு சரியான முறையில் செரிப்பதில்லை. அந்த உணவில் இருந்து வரக்கூடிய சர்க்கரை சத்தானது கெட்ட சர்க்கரை மாறுகிறது. வயிற்றில் உப்புசம், தேவையில்லாத வாயுக்களும் உற்பத்தி ஆகின்றன.
துக்கம், அழுகை என்கிற உணர்ச்சி நுரையீரல், பெருங்குடல் சம்பந்தப்பட்டது.
துக்கமான செய்தி வருகிறது. அந்த செய்தி கேட்டு சிலர் அழுது விடுவார்கள். அந்த அழுகையின் காரணமாக மூச்சு மூட்டும். அதிக துக்கம் என்பது நுரையீரலையும், பெருங்குடலையும் பாதிக்கும். அதாவது காற்று மூலகத்தை பாதிக்கும்.
பயம் என்கிற உணர்ச்சி சிறுநீரகம், சிறுநீரக பை சம்பந்தப்பட்டது.
குழந்தைகளை பயமுறுத்தினால் அவர்கள் உடனே சிறுநீர் கழித்து விடுவதை காணலாம். பயம் என்கின்ற உணர்ச்சி நீர் மூலகத்தை பாதிக்கும். பயம் ஏற்படும் போது, உடலின் செயல் திறன் குறைகிறது. முகம் கருத்து விடுகிறது. பயத்தின் காரணமாக சிறுநீரக இயக்க சக்தி குறைந்து நோய்கள் உருவாக ஆரம்பிக்கிறது. ஒரு மனிதனை பயம் ஆட்கொள்ளும் போது, சாப்பிட்ட உணவு சரியான முறையில் செரிப்பதில்லை. அந்த உணவில் இருந்து வரக்கூடிய சத்தானது, கெட்ட சக்தியாக மாறுகிறது.
கோபம் என்கிற உணர்ச்சி கல்லீரல், பித்தப்பை சம்பந்தப்பட்டது.
கோபம் கொள்வது மிகவும் தீய பண்பாகும். உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும். ஒரு மனிதனின் கோபம் மற்றவர்களை பாதிக்கிறதோ இல்லையே நிச்சயமாக கோபம் கொண்ட மனிதனை பாதிக்கும்.
நீங்கள் கோபத்தில் இருக்கும் போது, 'என் இரத்த கொதிக்கிறது' என்று சொல்கிறீர்கள். என் வயிறு எரியும் படி செய்து விட்டான் என்று சொல்வோம். அதனால் கோபம் கொள்ளும் போது இரத்த கொதிப்பு அதிகரிக்கும். வயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் கெட்டுப் போய் விடும். நீங்கள் கோபம் அடையும் போது இரத்த நாளங்கள் கடினமாகி, முறுக்கேறுகின்றன. அதனால் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. பெரும்பாலானவர்களுக்கு பக்கவாதம் கோபத்தில் தான் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்ல தற்பெருமை, கர்வம், பொறாமை கொண்டாலும் உடல் நலம் பாதிக்கப்படும். இதனால் இதயம் மற்றும் சிறுகுடல் பலவீனப்படும்.
எனவே உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் எதிலும் நிதானத்துடன் இருந்தால் நிம்மதியாக மகிழ்வாக வாழலாம்.
-சிவசங்கர்
- இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியா விட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி.
சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருளாகும். தேவி பாகவதம் என்ற நூல் அன்னைக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும் அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானவை என்று கூறுகிறது. ஆனால் தந்திர சூடாமணியில் 51 சக்தி பீடங்கள் என்று உள்ளது. இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
51 சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும் 18 சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும் 4 சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன.
சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியா விட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி.
1) அஸ்ஸாம் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில்
2) கல்கத்தாவின் காளிகாட் காளி கோவில்
3) ஒடிசாவின் பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி சக்தி பீடக் கோவில்
4) ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னதி ஆகிய நான்கும் ஆதி சக்தி பீடங்களாகும்.
ஆதி சக்தியின் ரூபமான சதி தேவியின் (தாட்சாயிணியின்) உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோவில்களே சக்தி பீடமாகும்.
1) மூகாம்பிகை : கொல்லூர்
- (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2) காமாட்சி : காஞ்சிபுரம்
- (காமகோடி பீடம்), தமிழ்நாடு
3) மீனாட்சி : மதுரை
- (மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4) விசாலாட்சி : காசி
- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5) சங்கரி : மகாகாளம்
- (மகோத்பலா பீடம்), ம.பி.
6) பர்வதவர்த்தினி : ராமேஸ்வரம்
- (சேது பீடம்), தமிழ்நாடு
7) அகிலாண்டேஸ்வரி : திருவானைக்காவல்
- (ஞானபீடம்), தமிழ்நாடு
8) அபீதகுஜாம்பாள் : திருவண்ணாமலை
- (அருணை பீடம்), தமிழ்நாடு
9) கமலாம்பாள் : திருவாரூர்
- (கமலை பீடம்), தமிழ்நாடு
10 பகவதி : கன்னியாகுமரி
- (குமரி பீடம்), தமிழ்நாடு
11) மகாகாளி : உஜ்ஜையினி
- (ருத்ராணி பீடம்), ம.பி.
12) மங்களாம்பிகை : கும்பகோணம்
- (விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13) வைஷ்ணவி : ஜம்மு
- (வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14) நந்தா தேவி : விந்தியாசலம்
- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15) பிரம்மராம்பாள் : ஸ்ரீ சைலம்
- (சைல பீடம்), ஆந்திரா
16.) மார்க்கதாயினி-ருத்ரகோடி
- (ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17) ஞானாம்பிகை : காளஹஸ்தி
- (ஞான பீடம்), ஆந்திரா
18) காமாக்யா : கவுகாத்தி
- (காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19) சம்புநாதேஸ்வரி : ஸ்ரீநகர்
- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20) அபிராமி : திருக்கடையூர்
- (கால பீடம்), தமிழ்நாடு
21) பகவதி : கொடுங்கலூர்
- (மகாசக்தி பீடம்), கேரளா
22) மகாலட்சுமி : கோலாப்பூர்
- (கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23) ஸ்தாணுபிரியை : குருஷேத்ரம்
- (உபதேசபீடம்) ஹரியானா
24) மகாகாளி : திருவாலங்காடு
- (காளி பீடம்) தமிழ்நாடு
25) பிரதான காளி : கொல்கத்தா
- (உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26) பைரவி : பூரி
- (பைரவி பீடம்) ஒரிசா
27) மாணிக்காம்பாள் : திராக்ஷராமா
- (மாணிக்க பீடம்) ஆந்திரா
28) அம்பாஜி : துவாரகை
- (பத்ரகாளி சக்தி பீடம்) குஜராத்
29) பராசக்தி : திருக்குற்றாலம்
- (பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30) முக்தி நாயகி : ஹஸ்தினாபுரம்
- (ஜெயந்தி பீடம்) ஹரியானா
31) லலிதா : ஈங்கோய் மலை, குளித்தலை
- (சாயா பீடம்) தமிழ்நாடு
32) காயத்ரி : ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்
- (காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33) சந்திரபாகா : சோமநாதம்
- (பிரபாஸா பீடம்) குஜராத்
34) விமலை, உலகநாயகி : பாபநாசம்
- (விமலை பீடம்), தமிழ்நாடு
35) காந்திமதி : திருநெல்வேலி
- (காந்தி பீடம்), தமிழ்நாடு
36) பிரம்மவித்யா : திருவெண்காடு
- (பிரணவ பீடம்), தமிழ்நாடு
37) தர்மசம்வர்த்தினி : திருவையாறு
- (தர்ம பீடம்), தமிழ்நாடு
38) திரிபுரசுந்தரி - திருவொற்றியூர்
- (இஷீபீடம்), தமிழ்நாடு
39) மகிஷமர்த்தினி : தேவிபட்டினம்
- (வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40) நாகுலேஸ்வரி : நாகுலம்
- (உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41) திரிபுர மாலினி : கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம்
- (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42) திரியம்பக தேவி : திரியம்பகம்
- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43) சாமுண்டீஸ்வரி : மைசூர்
- (சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44) ஸ்ரீலலிதா : பிரயாகை
- (பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45) நீலாம்பிகை : சிம்லா
- (சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46) பவானி : துளஜாபுரம்
- (உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47) பவானி பசுபதி : காட்மாண்ட்
- (சக்தி பீடம்) நேபாளம்
48) மந்த்ரிணி : கயை
- (திரிவேணிபீடம்) பீகார்
49) பத்ரகர்ணி : கோகர்ணம்
- (கர்ணபீடம்) கர்நாடகா
50) விரஜை ஸ்தம்பேஸ்வரி : ஹஜ்பூர்
- (விரஜாபீடம்) உ.பி.
51) தாட்சாயிணி : மானஸரோவர்
- (தியாகபீடம்) திபெத்,
-சிவசங்கர்
- பண வரவுகளுக்கும் பஞ்சாமில்லாமல் போகும்.
- சுக்கிரதிசை இருக்கும் இடத்தை வைத்து நற்பலன்களை கொடுக்கும்.
சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அது தவறாகும். சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான நற்பலன்களை பெற முடியும்.
பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்து குழந்தை பருவத்தில் சுக்கிர திசை நடைபெற்றால், நல்ல ஆரோக்கியம், சுகவாழ்வு, சத்தான உணவுகளை சாப்பிடும் அமைப்பு கொடுக்கும்.
இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை அழகான உடலமைப்பு மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் அமையும். மத்திம வயதில் திசை நடைபெற்றால் சுகவாழ்வு சொகுசுவாழ்வு, பெண்களால் அனுகூலம், வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். பெண்களால் அனுகூலம், மணவாழ்வில் மகிழ்ச்சி, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும்.
முதுமை பருவத்தில் நடைபெற்றால் அனுகூலமான பயணங்கள், தாராள தனக்சேர்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற யாவும் அமையும்.
சுக்கிரன் பலம் பெற்றிருந்து நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன், சனி போன்றவற்றின் வீட்டில் அமைந்தோ, சேர்க்கைப் பெற்றோ இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம். ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்றயாவும் அமையும். பண வரவுகளுக்கும் பஞ்சாமில்லாமல் போகும். கடன்கள் யாவும் நிவர்த்தி யாகும். பொதுவாக சுக்கிரன் கிரக சேர்க்கைகளின்றி தனித்து அமைவதே சிறப்பு.
சுக்கிரன் நீசம் பெறுவதும் நல்லதல்ல. நீசம் பெற்றாலும் உடன் புதன் சேர்க்கையுடன் இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி ஒரளவுக்கு சாதகப் பலனை தருவார். சுக்கிரன் செவ்வாய்க்கு கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் பிருகு மங்கள யோகம் உண்டாகிறது.
அது போல சுக்கிரன் உச்சம் பெற்று கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் மாளவியா யோகம் ஏற்படும். இத்திசை காலங்களில் இந்த யோகங்களால் வாழ்வில் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
சுக்கிர திசை நடக்கும் போது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம் என நல்ல பலன்கள் நடைபெறும்.
மொத்தத்தில் சுக்கிரதிசை இருக்கும் இடத்தை வைத்து நற்பலன்களை கொடுக்கும்.
- ஜோதிடர் சுப்பிரமணியன்.
- ஆலமரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பால் எடுத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.
- நாற்பது வயதை கடந்தவர்கள் தினனும் தேனை அருந்தலாம்.
வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும்.
கடுமையான வயிற்றுவலி, உள்ளவர்கள் கொதிக்கும் நீர் ஒரு கப் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்றவேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன் அந்த நீரை குடிக்கவேண்டும். இவ்வாறு குடிப்பதனால் வயிற்றுவலி, நின்றுவிடும், ஜீரணக்கோளாறுகளும் குணமாகும்.
இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சிவக்கும்படி வறுக்கவேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்சவேண்டும். சுண்டக்காய்ந்ததும் இறக்கி வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.
ஒரு டீஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளவேண்டும். செரிமாக்கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும்.
அகத்திக்கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்கவேண்டும். அதை சாறுபிழிந்து எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் எல்லாவித வயிற்றுக்கோளாறுகளும் குணமாகும்.
ஆலமரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பால் எடுத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும், வயிற்றிலுள்ள புண்களும் குணமாகும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்கவேண்டும். பின்பு 1டீஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
என்றும் இளமையுடன் இருக்கவேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதை கடந்தவர்கள் தினனும் தேனை அருந்தலாம். ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும்.
சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும் இவர்கள் தினமும் ஒரு தம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள். ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும் போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை.
தேனை துளசி சாறில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம், சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது
-பசீர் முகமது
- ஒரு இளம் வயது சிப்பாய் முன்னால் நின்று கட்டளைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தான்.
- அணிவகுப்பில் இருந்து தனியாகப் பிரிந்து வெளியே வந்தார் தத்துவப் பேராசிரியர்.
இரண்டாம் உலகப்போரின் போது இது நிகழ்ந்தது.
போரிட நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள்.
அதனால் எல்லா வகையான ஆட்களும் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.
தாய் நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும்.
தந்தை நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று பல தளங்களில் தலைவர்களும் தளபதிகளும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்த அமளியில் ஒரு தத்துவப் பேராசிரியரும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.
முதல்நாள் வீரர்கள் மைதானத்தில் கூடினார்கள்.
ஒரு இளம் வயது சிப்பாய் முன்னால் நின்று கட்டளைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தான்.
அட்டென்ஷன்...
அபௌட்டார்ன்....
லெப்ட்...
ரைட்....
லெப்ட்..
ரைட்...
அணிவகுப்பில் இருந்து தனியாகப் பிரிந்து வெளியே வந்தார் தத்துவப் பேராசிரியர்.
மிகவும் கோபமாக அந்த சிப்பாயிடம் கேட்டார், நீ என்ன செய்கிறாய்?
முதலில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் நன்றாக முடிவு செய்து விட்டு பிறகு வா.
முதலில் இப்படி போ என்கிறாய்.. பிறகு அப்படி போ என்கிறாய்..
நில் என்கிறாய்... போ என்கிறாய்...
வலது பக்கம் போ என்கிறாய்.. இடது பக்கம் போ என்கிறாய்...
இது என்ன கூத்து..?
உருப்படியாக ஏதாவது ஒன்றை தீர்மானம் செய்து வை..
அதுவரை நான் போய் ஒரு காப்பியை அருந்திவிட்டு வருகிறேன்.
வந்தவுடன் நீ சொன்னதை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்..
-ஓஷோ
- முதலில் உங்களை நீங்களே உளமார வாழ்த்தி கொள்ளுங்கள்.
- இன்றும் இந்த நாளில் நான் மேன்மை அடையக்கூடிய நிகழ்வுகளையே எதிர்கொள்ள போகிறேன்.
உங்கள் வாழ்வு வளமாக நலமாக ஓர்சூட்சமம் இருக்கு ...
அது எதையும் எப்போதும் வாழ்த்துவது தான் !
ஓர் செடியை பார்த்தால் அது செழித்து வளர வேண்டும் என்று வாழ்த்துகள் ..
ஓர் சிற்றுயிரை கண்டால் அதற்கு தேவையான அனைத்தும் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகள் ..
ஓர் நோயாளியை கண்டால் சீக்கிரம் பூரண குணமடைய வாழ்த்துகள் ..
பள்ளி செல்லும் குழந்தைகளை கண்டால் நன்று படித்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று வாழ்த்துகள் ..
சிறு வியாபாரிகளை கண்டால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகள்..
பெரிய தனவந்தர்களை கண்டால் பலருக்கும் உதவ வேண்டும் என்று வாழ்த்துகள் ..
ஏமாற்றுபவர்களை கண்டால் அவர்கள் திருந்தி வாழவேண்டும் என்று வாழ்த்துகள் ..
அரசியல்வாதிகளை கண்டால் அவர்கள் பொய் கடந்து மெய்யாய் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்றே வாழ்த்துகள் ..
உங்கள் சக உறவுகளை கண்டால் மேன்மேலும் முன்னேறட்டும் என்றே வாழ்த்துகள...
உங்கள் நட்புகளை கண்டால் சிறப்புற வாழவேண்டும் என்றே வாழ்த்துகள்..
அந்த வாழ்த்தும், உங்களை உள்ளும் புறமுமாய் வாழ்விக்கும் இறையை முன்னிறுத்தி வாழ்த்துகள் ..
வாழ்த்த வயது இல்லை என்று பொய் சொல்லாதீர்கள் ! நம் பிறப்பின் மறு சுழற்சியில் அவர்களோடு வயதில் ஒத்தவர்கள் தான் என்று மெய்யை உணர்ந்து வாழ்த்துகள்..
நீங்கள் வாழ்த்துவது வார்த்தையாக உங்கள் வாய் வழியே வந்து அதை வாழ்த்து பெறுபவர் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. மனதில் நினைத்தாலே போதும்!
முதலில் உங்களை நீங்களே உளமார வாழ்த்தி கொள்ளுங்கள். "நான் நலமாய், வளமாய் இருக்கிறேன்.. . என்னோடு உட்கலந்து இருக்கும் இறைவனின் பரிபூரண ஆசி என்றும் என்னிடம் உள்ளது. அது என்னை மென்மேலும் சிறப்புற வளமுற நலமுற வாழ்வித்து கொண்டே இருக்கும். இன்றும் இந்த நாளில் நான் மேன்மை அடையக்கூடிய நிகழ்வுகளையே எதிர்கொள்ள போகிறேன் ! " என்று காலை எழுந்தவுடன் முதல் வாழ்த்து உங்களிடமிருந்து தொடங்கட்டும்.
அது பார்ப்பது.. கேட்பது.. உணர்வது.. போன்ற அனைத்திற்கும் உங்கள் உள்ளத்தின் குரலாக பரவட்டும்.
எதை கொடுத்தாலும் வாழ்த்தி கொடுங்கள் !
எதை பெற்றாலும் வாழ்த்தியே பெறுங்கள் !!
எதை நினைத்தாலும் வாழ்த்தியே நினையுங்கள்!
அப்புறம் பாருங்கள் .. உங்கள் வாழ்வே மிகப்பெரிய, வெளியே சொல்லி விவரிக்க முடியாத ஆனந்த உணர்வில் திழைக்கும்!
எது நடந்தாலும் அதை இறையருளாக ஏற்றுக்கொள்ளும் தன்மையும் உங்களிடம் இருந்து வெளிப்பட துவங்கும் !!
உங்கள் உடலை சுற்றி உள்ள ஒளியுடல் பிரகாசம் ஆகும்! உங்கள் முகமே ஓர் தேஜஸுடன் ஒளிவீசும் !!
உங்களை சுற்றி என்ன எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும் அது உங்களை தாக்காது, உங்களின் சுற்றத்தையே நேர்மறையாக மாற்றும் ..
எதனிடமும் அன்பே மிளிரும் ! கருணையே ஒளிரும் !!
-வான் கடந்தான்
- மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும்.
- அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது.
கோவில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோவிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.
அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.
உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள்.
இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.
இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெயை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.
இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.
-.அருணாசலம் ஆச்சாரி.
- பாண்டர்வர்கள் வனவாசம் சென்ற போது சூரிய பகவானை வழிப்பட்டு தர்மர் அட்சய பாத்திரம் பெற்றார்.
- அட்சய பாத்திரம் என்பது கொடுப்பதற்காவே தானே தவிர வாங்குவதற்கு அல்ல.
அட்சய திருதியை என்பது சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் சந்திரன் ரிஷபத்தில் இருக்கும் அமைப்பு.
அமாவாசை முடிந்து 3வது திதியில் செய்த ஒன்று பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும்.!
ஏன் என்றால் திதி தான் செல்வநிலையை குறிப்பது...
இந்த திதியில் என்ன கொடுத்தாலும் அது உங்கள் கடைசி பரம்பரை வரை தொடர்ந்து வரும்..!
கொடுத்தால் மட்டுமே பெருகும்...!
அட்சய பாத்திரம் தர்மனுக்கும் மணிமேகலைக்கும் தான் கொடுக்கப்பட்டது
காரணம், சாப்பாடு ஒன்றுக்காகவே!
பசி என்று யார் வந்தாலும் பசித்த வயிறுக்கு அறுசுவை உணவை பரிமாற தானே தவிர
தங்கம் வேணும் னு கேட்டு வந்தவர்களுக்கு கொடுக்க அல்ல,,
தங்கம் வேணும் னு நினைத்துக்கொண்டு கையை உள்ளே விட்டால் தங்கம் வராது...!
உணவுக்காக மட்டுமே தான் அது உருவாக்கப்பட்டது.
பாண்டர்வர்கள் வனவாசம் சென்ற போது சூரிய பகவானை வழிப்பட்டு தர்மர் அட்சய பாத்திரம் பெற்றார்..அதை வைத்து தான் வனவாசத்தை முடித்தனர்..!
எவ்வளவு கடுமையான மழையோ வெயிலோ பயிர்கள் விளையாத போதோ தன் நாட்டு மக்கள் பசியில் தூங்கிட கூடாது என்பதற்காக மணிமேகலை தவம் இருந்து பெற்றது..
அட்சய பாத்திரம் என்பது கொடுப்பதற்காவே தானே தவிர வாங்குவதற்கு அல்ல..
அள்ள அள்ள குறையாத அறுசுவை உணவை தரும் சக்தி கொண்டது.!
பசி என்று வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வயிறு நிறைய அறுசுவை உணவை மணிமேகலை கொடுத்தார்..!
அட்சய திருதியை திதி அன்று உணவு பொருட்களை மற்றவர்களுக்கு வாங்கி கொடுங்கள்...!
அரிசி உப்பு பருப்பு நெய் காய்கறிகள் என எது உங்களால் வாங்கி தர முடியுமோ அதை வாங்கி கொடுங்கள்
அன்று கொடுப்பதால் கொடுத்துகொண்டே இருக்கும் நிலை வரும்..!
திருதியை திதி அன்று என்ன கொடுத்தாலும் அது பெருகும்..!
மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகவே உங்களுக்கு கொடுக்கப்படும்..!
ஒவ்வொரு தமிழ் மாத வளர்பிறை திருதியை அன்று என்ன கொடுத்தாலும் பெருகும்..அதை தான் மூன்றாம் பிறை என்று சொல்லி வழிபடுகிறார்கள்..!
பார்க்கவும் சொல்கின்றீர்கள்..!
3-ம் பிறையில் கொடுத்தால் பெருகும்...!
வேண்டும் என்றால் முயற்சி செய்து பாருங்கள் அதன் சக்தி புரியும்..!
-மணிகண்டன்
- கலைவாணர் ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்.
- பழையது சாப்பிடலாம் என்று மனைவி கூறி வந்தது அந்த இளைஞருக்கு வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.
ஒரு நாள் மாலை கலைவாணர் தம் நண்பர்கள் ப. ஜீவானந்தம், தென்காசி சண்முகசுந்தரப் புலவர் ஆகியோருடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.
"ஆமாம்.. சம்பாதிக்கிறீர்கள், சடுதியில் செலவு செய்து விடுகிறீர்களே! ஊராருக்கெல்லாம் உதவும் தாங்கள் உங்கள் குடும்பத்திற்கு ஏதாவது ஒதுக்கி வைத்திருக்கிறீர்களா?" பேச்சுக்கு இடையே சண்முகசுந்தரப் புலவர் கேட்ட கேள்வி இது.
அதற்குப் பதிலாக கலைவாணர் ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்..
ஓர் ஊரில் ஒரு பணக்கார இளைஞர் இருந்தார். ஒரு நாள் அவர் தனது நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய மனைவி வந்து, வாருங்கள் பழையது சாப்பிடலாம் என்று கணவரை அழைத்தார்.
இதேபோல் பலமுறை பத்துப் பேருக்கு முன்பாக பழையது சாப்பிடலாம் என்று மனைவி கூறி வந்தது அந்த இளைஞருக்கு வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.
மற்றொரு நாள் வழக்கம் போல், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞரை பழையது சாப்பிடலாம் என்று மனைவி அழைத்தவுடன் சற்றுக் கோபமாக எழுந்து உள்ளே சென்றார். வகை வகையான பதார்த்தங்கள் இலையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அப்பெண் சுடச்சுட சோற்றைப் பரிமாறினார்.
உடனே அந்த இளைஞர் கேட்டார். எப்போது பார்த்தாலும் நான்கு பேருக்கு மத்தியிலே பழையது சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடுகிறாயே, இங்கே என்ன பழைய சோறா போடுகிறாய்? நெய், வடை, பாயாசத்தோடு சுடு சோறல்லவா போடுகிறாய்?
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். கஞ்சப்பிரபு என்றல்லவா எண்ணுவார்கள்? என்று அவர் கூறியவுடன் மனைவி, நீங்கள் சுடச்சுட புதிதாக ஏதாவது சம்பாதிக்கிறீர்களா என்ன?
உங்கள் அப்பா சம்பாதித்து வைத்துவிட்டுப் போன பழைய சொத்தை வைத்துக் கொண்டுதானே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என்று பதிலளித்தார்.
கதையை முடித்த கலைவாணர் தொடர்ந்தார், "நான் சம்பாதித்த பழையதைக் கொண்டிருக்க வேண்டுமா? அவர்களே உழைத்துச் சுடுசோறு சாப்பிடட்டுமே!" என்றார்.
-சந்திரன் வீராசாமி
- இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களும் அமைந்துள்ளன.
- சூரியன் இங்கு அடிவானத்திற்கு கிட்டதட்ட செங்குத்தாக நகருவதே ஆகும்.
பூமத்திய ரேகை அல்லது நிலநடுக்கோடு என்பது பூமியை குறுக்குவாக்கில் இரு சமதுண்டுகளாகப் பிரிக்கும் கற்பனைக் கோடு ஆகும். இக்கோட்டிலிருந்து வடதுருவமும் தென்துருவமும் சமதூரத்தில் இருக்கின்றன.
இக்கோடு புவியை வடஅரைக்கோளம், தென்அரைக்கோளம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இது பூஜ்ஜியம் டிகிரி அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது. இக்கோடு 5கிமீ அகலத்தில் குறிக்கப்படுகிறது.
பூமத்திய ரேகைக் கோட்டுப் பகுதியில் உலகில் மொத்தம் 14 நாடுகளும், பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களும் அமைந்துள்ளன.
இங்கு காலநிலை மிகுந்த வெப்பமும் அதிக மழைப்பொழிவும் கொண்டு இருக்கிறது.
பூமத்திய ரேகைப் பகுதியில் பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டராகவும், துருவப்பகுதியில் 12,714 கிலோ மீட்டராகவும் ஆராய்ச்சியாளர்களால் அளவிடப்பட்டுள்ளது.
பூமியின் சுழற்சி வேகம் நிலநடுக் கோட்டில் மணிக்கு 1670 கிலோ மீட்டராக உள்ளது. அதே நேரத்தில் துருவப் பகுதிகளில் அதனுடைய சுழற்சி வேகம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் கிலோ மீட்டராக உள்ளது.
பூமத்திய ரேகைப் பகுதியில் காலநிலை குறைந்தளவு வித்தியாசத்துடன் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இங்கு சூரியனின் கதிர்கள் நேராக விழுவதால் மிகுந்த வெப்பமும் அதிக மழைப்பொழிவும் நிகழ்கிறது.
இதனால் இப்பகுதியில் உலகின் மழைக்காடுகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு அமேசான் மழைக்காடுகள், காங்கோ மழைக்காடுகள், தென்கிழக்காசிய மழைக்காடுகள் ஆகியவற்றைக் கூறலாம்.
உலகின் மற்ற இடங்களைப் போல் அல்லாமல் இங்கு ஆண்டு முழுவதும் பகல் பொழுது 12 மணி நேரமாகவும், இரவுப் பொழுது 12 மணி நேரமாகவும் சமமாக இருக்கிறது.
மேலும் இங்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமம் நிகழ்வுகள் ஒருசில நிமிடங்களே நிகழ்கின்றன. காரணம் ஆண்டின் பெரும்பகுதி சூரியன் இங்கு அடிவானத்திற்கு கிட்டதட்ட செங்குத்தாக நகருவதே ஆகும்.
-அருண் நாகலிங்கம்
- ஒரு முக்கிய காரணம், கிரீன்லாந்து முழுக்க பரவி இருக்கும் பனிப்பாறை.
- கிரீன்லாந்தின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை மூடுகிறது.
உலகின் மிகப்பெரிய தீவாக அடையாளம் காணப்பட்டுள்ளது கிரீன்லாந்து. பூமியின் வடதுருவத்துக்கு மிக அருகே, 59 டிகிரி முதல் 83 டிகிரி அட்சரேகை வரை பரந்து விரிந்துள்ளது கிரீன்லாந்து. இதன் நிலப்பரப்பு இந்தியாவின் முக்கால் பகுதி அளவுக்கு இருக்கும். மக்கள் தொகை 56,000 தான். தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட பெரிய நிலப்பரப்பில் 56,000 பேர் வசிப்பதை கற்பனை செய்ய முடிந்தால் அது தான் கிரீன்லாந்து.
ஆனால் இதற்கு ஒரு முக்கிய காரணம், கிரீன்லாந்து முழுக்க பரவி இருக்கும் பனிப்பாறை. இந்த பனிப்படலம் சுமார் 17,10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது கிரீன்லாந்தின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை மூடுகிறது! சராசரியாக இந்த பனிப்பாறை 1.6 கிலோமீட்டர் தடிமன் இருந்தாலும், சில இடங்களில் 3 கிலோமீட்டர் வரை தடிமன் இருக்கும்.
இந்த பனிப்படலம் முழுக்க நல்ல குடிநீரால் ஆனதுதான். ஆனால் இது மட்டும் உருகினால், உலகமே அழிந்துவிடும் என்கிறார்கள். அந்த அளவு தன்ணீர் இதில் உள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக உலக கடல் மட்டம் 25 அடி வரை உயரும் அளவு நீர் கிரீன்லாந்து பனிப்பாறையில் தேங்கியுள்ளதாம்.
உலக நாடுகளின் கடற்கரையோர நகரங்கள், மாநிலங்கள் எதுவுமே அதன்பின் இருக்காதாம். தவிர கிரீன்லாந்தின் பனிப்படலம் மீது சூரிய ஒளி படும்போது, பனிப்படலத்தின் வெள்ளை மேற்பரப்பு ஒரு கண்ணாடி போல் செயல்பட்டு, சூரிய ஒளியை பிரதிபலித்து விண்வெளிக்குத் திருப்பி அனுப்புகிறது. இதனால், பூமியின் தட்பவெப்பம் கட்டுபடுத்தபடுகிறதாம். இல்லையெனில் பூமி இன்னும் சூடாக இருந்திருக்குமாம்.
- நியாண்டர் செல்வன்
- ஒரு புதிய செய்தியை நான் கற்றுக் கொள்வதன் வாயிலாக இன்னும் சிறிதளவு கூடுதலாக அறிவு எனக்கு ஏற்படுமே அதனால்தான்” என்றார்.
- அறிவுலக மேதையின் அறிவுத்தாகம் அறியும்போது நம் அறியாமையைப் போக்கிக் கொள்ளும் அறிவும் பெறலாமே.
இன்னும் சற்று நேரத்தில் சாக்ரட்டீசுக்கு மரண தண்டனை. உடன் இருக்கும் கைதி ஒரு பாடலை இனிமையாகப் பாடத் தொடங்கினான். கருத்தாழமிக்க அப்பாடலை தனக்காக மீண்டும் ஒருமுறை பாடச் சொன்னார் சாக்ரடீஸ்.
அவன், "நீயோ சற்று நேரத்தில் பரிதாபமாக சாகப் போகிறாய்! உனக்கு பாடல் ஒரு கேடா? தெரியாமல் தான் கேட்கிறேன், உனக்கு எந்த விதத்தில் இது பயன்படப் போகிறது? நீ வாழப் போகிறவன் என்றால் கூட நான் மீண்டும் பாடிக்காட்டினால் நீ அதை பாடி பிறர் கேட்டால் உனக்கும் எனக்கும் பெருமை. சாகப்போகிற உனக்கு இது எதற்கு?" என்று கிண்டலும் கேலியும் செய்தான்.
அமைதியாக சாக்ரடீஸ் கூறினார், "இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவேன் என்பது எனக்குத் தெரியும். இறப்பதற்குள் இந்த ஒரு புதிய செய்தியை நான் கற்றுக் கொள்வதன் வாயிலாக இன்னும் சிறிதளவு கூடுதலாக அறிவு எனக்கு ஏற்படுமே அதனால்தான்" என்றார்.
அதற்கு முந்தைய நாள் மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டிருந்தார் ஒரு புத்தகத்தை. நீங்கள் தான் நாளை இறந்து விடப் போகிறீர்களே எதற்காக இப்படி விழுந்து விழுந்து படிக்கிறீர்கள் என்று சிறைக்காவலர் கேட்டதற்கு "ஆம் நாளைக்குள் படித்துவிட வேண்டுமே இல்லாவிட்டால் நான் செத்துப் போனால் இந்த நூலை மீண்டும் படிக்க முடியாது அல்லவா?" என்றாராம். அறிவுலக மேதையின் அறிவுத்தாகம் அறியும்போது நம் அறியாமையைப் போக்கிக் கொள்ளும் அறிவும் பெறலாமே.
-கவிதா
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்