search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • உடலை தமிழகம் கொண்டு வர அரசின் உதவியை கேட்டு மனு.
    • கண்ணீர் மல்க மனு அளித்துவிட்டு தாய் கதறி அழுதார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பாப்பக்காள்(65). இவர்களது மகன் தேவராஜ். பழனிச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில் தேவராஜ் கூலி வேலை செய்து தாயாரை காப்பாற்றி வந்தார்.

    இந்நிலையில் தேவராஜின் உறவினர்கள் கோபி, சத்தி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் ரெயில் மூலமாக சம்பவத்தன்று காலை காசியாத்திரை சென்றுள்ளனர்.

    இந்நிலையில் தேவராஜ் உட்பட அனைவரும் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளனர். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த சிறிது நேரத்தில் தேவராஜூக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    உடனே அருகில் இருந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு பூரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே தேவராஜ் உயிரிழந்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து தேவராஜூவின் தாயார் கதறி துடித்து, மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு வர முயன்ற போது, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வாடகையாக கேட்டு உள்ளனர்.

    வறுமையில் வாழும் பாப்பக்காவினால் மகனின் உடலை கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மகனின் உடலை தமிழகம் கொண்டு வர அரசின் உதவியை கேட்டு கோபி ஆர்.டி.ஓ. கண்ணப்பனிடம் கண்ணீர் மல்க மனு அளித்துவிட்டு கதறி அழுதார்.

    கணவரை இழந்த நிலையில் மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்த ஏழை தாயினால், மகனின் உடலை கொண்டு வர முடியாமல் தவிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • யானை அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கும் இங்கும் ஓடியது.
    • குடிநீருக்காக அந்த யானை கடந்து சில நாட்களாக பெரும்பள்ளம் மலைப்பகுதியில் சுற்றி வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு தண்ணீரை தேடி கிராமத்துக்குள் வருவது தொடர்கதை ஆகிவருகிறது.

    குறிப்பாக கடந்த சில நாட்களாகவே யானை கூட்டங்கள், ஒற்றை யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராமம், செலம்பூர் அம்மன் கோவில் வனப்பகுதியொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை தண்ணீர் மற்றும் உணவை தேடி வெளியேறிய ஒற்றை காட்டு யானை அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கும் இங்கும் ஓடியது.

    இதை கண்ட விவசாயிகள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.

    இதனால் ஆவேசம் அடைந்த அந்த ஒற்றை யானை ஒவ்வொரு விவசாய தோட்டத்துக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. அங்கு விவசாயிகள் மக்காச்சோளம், முட்டைக்கோஸ் அதிக அளவில் பயிரிட்டு இருந்தனர்.

    அந்த தோட்டத்துக்குள் யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. சுமார் 10 மணி நேரம் அந்த ஒற்றை காட்டு யானை வனத்துறையினர் மற்றும் விவசாயிகளுக்கு போக்கு காட்டி அங்கும் இங்கும் ஓடியது.

    பின்னர் ஒரு வழியாக அந்த ஒற்றை காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர்.

    இதேபோல் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட கொண்டப்ப நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பெரும்பள்ளம் அணை அருகே உள்ள தரிசு நிலங்களில் பகல் நேரங்களில் நடமாடி வருகிறது. உடல் நலம் குன்றியதால் தீவனம் ஏதும் உட்கொள்ளாமல் பகல் நேரங்களில் தரிசு நிலைகளில் சுற்றி வருகிறது.

    இதனால் அந்த பகுதியில் கால்நடைகளை மேய்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடிநீருக்காக அந்த யானை கடந்து சில நாட்களாக பெரும்பள்ளம் மலைப்பகுதியில் சுற்றி வருகிறது. எனவே அந்த பகுதியில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.
    • மாவட்டத்தில் பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெப்ப அளவு உயர்ந்து வந்தது. சராசரியாக 104 டிகிரி முதல் 111 டிகிரி வரை வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். இதனால் மழை பெய்யாதா என ஈரோடு மக்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. ஆனால் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் 10 நிமிடம் மட்டுமே மழை பெய்து ஏமாற்றியது. நேற்று காலை வழக்கும் போல் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. பகல் 11 மணிக்கு மேல் வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து இருந்தன.

    இதனையடுத்து பிற்பகல் 3 மணி அளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல சொல்ல சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை போட்டி தீர்த்தது. இதனால் ஈரோடு மாநகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கொங்காளம்மன் கோவில் வீதி, வீரப்பன்சத்திரம் போன்ற பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மாநகர் பகுதி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.


    ஈரோடு முருகேசன் காலனி மற்றும் கணபதி காலனி பகுதியில் மரக்கிளைகளுடன் மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர். தற்போது அந்த பகுதியில் மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு கோபி அடுத்த மொடச்சூர் பகுதியில் பலத்த மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தோட்டத்தில் மழை நீர் தேங்கி நின்றது. கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த செவ்வாழை, கதலி, வாழை மரங்கள் கீழே சாய்ந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

    இதேபோல் அந்தியூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்க தாக்கு பிடிக்க முடியாமல் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    தாளவாடி பகுதியில் நேற்று 3-வது நாளாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஓடைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேப்போல் பவானிசாகர் அணை, வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் மழை பரவலாக பெய்தது. மாவட்டத்தில் பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    எலந்த குட்டை மேடு-33.40, தாளவாடி-23.60, கோபி-23.20, பவானிசாகர்-13.20, ஈரோடு-14, வரட்டுப்பள்ளம்-8.20, சென்னிமலை-4.

    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக குளம் மற்றும் மரங்கள் வரண்டு போனது.
    • அயல் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவதும் அதனை பார்க்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே அமைந்துள்ளது வெள்ளோடு பறவைகள் சரணாலயம். சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடிக்கு தண்ணீர் தேக்கும் வகையில் குளம் அமைக்கபட்டுள்ளது.

    கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் மற்றும் மழை காலத்தில் நீர் வழி ஓடையின் மூலமாக வரும் தண்ணீரையே ஆதாரமாக கொண்டுள்ளது இந்த பறவைகள் சரணாலயம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக குளம் மற்றும் மரங்கள் வரண்டு போனது.

    இதனையடுத்து ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பில் பறவைகள் சரணாலயம் புதுப்பிக்கபட்டு சரணாலயத்தை சுற்றி கரைகள் பலப்படுத்தப்பட்டு சிறு பாலங்கள், நடை பாதைகள், பறவைகளின் வண்ண ஓவியங்கள், பட்டாம்பூச்சி பூங்கா, செல்பி பாயின்ட் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் முடிவுற்று எழில்மிகு ரம்மியமாக காட்சியளிக்கின்றது வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.

    இந்த சரணாயத்தில் உள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்டு இனப்பெருக்கம் செய்ய பறவைகள் அதிகம் வருவதுண்டு. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பறவைகளுக்காக சீசன் தொடங்கும்.

    இந்த காலத்தில உள்நாட்டு பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால் இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் போன்ற உள்நாட்டு பறவைகளும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கல் உள்ளான், செம்பருந்துபூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை போன்ற வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த சரணாலய குளத்தில் குளித்து கும்மாலமிட்டு மீன்களை உணவாக உண்டு மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து குஞ்சுகள் வளர்ந்தவுடன் பறந்து சென்று விடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

    இந்த பறவைகளைகான ஈரோடு மாவட்டம் மட்டு மின்றி அருகிலுள்ள கோவை, சேலம், திருச்செங்கோடு என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவது உண்டு. ஈரோடு மாவட்ட த்தின் சிறந்த சுற்றுலா தளமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வந்தது. அயல் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவதும் அதனை பார்க்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

    இந்நிலையில ஈரோடு மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து நாட்டிலேயே 2-வது இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்தது. 110 டிகிரி பாரன் ஹிட் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பகல் நேரங்களில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.

    தற்போது வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மேம்படுத்தப்பட்ட பணிகள் நிறைவடைந்து சரணாலயம் ரம்யமாக காட்சி அளித்தாலும். வெயிலின் தாக்கம் காரணமாக வெளிநாட்டு பறவைகள் வரத்து இல்லை. பறவைகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில உள்நாட்டு பறவைகள் மட்டுமே வந்து செல்கின்றன.

    இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    • ரெயில்வே போலீசார் நேற்று நள்ளிரவு ஈரோடு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவு பேரில் போலீசார், மதுவிலக்கு போலீசார் ஒருங்கிணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஈரோடு-பள்ளிபாளையம் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் காவிரி ஆறு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சியை சேர்ந்த சிவசக்தி (வயது 22) என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய பொழுது அவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மதிவாணன் (40) மற்றும் சின்னாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மதுவிலக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல ஈரோடு ரெயில்வே போலீசார் நேற்று நள்ளிரவு ஈரோடு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

    இதையடுத்து அந்த பையை திறந்து பார்த்த போது அதில் சுமார் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா பையை கைப்பற்றிய ஈரோடு ரெயில்வே போலீசார் அதை ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    பெருந்துறை:

    பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கை உடைக்கப்பட்ட நிலையில் கோவை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்ற த்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கோவை மத்திய சிறையில் உள்ள தனது மகன் சவுக்கு சங்கருக்கு பாதுகாப்பு இல்லாததால் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த சிறைத்துறை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காலை சவுக்கு சங்கரை கோவை போலீசார் சென்னைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாது காப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சவுக்கு சங்கர் தன்னுடைய கை வலிப்பதாகவும், உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்து க்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் அங்கிருந்து நேரடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர் சாந்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு காலை 9.45 மணி அளவில் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று சவுக்கு சங்கரை பார்த்து கேள்வி எழுப்பினர். அப்போது அவரை பேசவிடாமல் போலீசார் தடுத்து அழைத்து சென்றனர். சவுக்கு சங்கருக்கு தொடர்ந்து குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. அதனை ஒரு காவலர் கையில் தூக்கி பிடித்த படி சென்று கொண்டிருந்தார்.

    • நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • பவானிசாகர் அணை மற்றும் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.70 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக இருந்தது. தற்போது அதற்கு பாதியாக குறைந்துள்ளது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடல்போல் பிரம்மாண்டமாக காட்சியளித்த பவானிசாகர் அணை தற்போது குளம்-குட்டை போல் சுருங்கி காட்சியளிக்கிறது.

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 21 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.18 அடியாக குறைந்துள்ளது. 33.45 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 17.29 அடியாக உள்ளது. 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணை நீர்மட்டம் கடந்த ஒன்றரை மாதமாக முற்றிலும் வற்றிப்போய் உள்ளது.

    பவானிசாகர் அணை மற்றும் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • 11-வது வார்டு சருகு மாரியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.
    • சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தங்க சாலை வீதி மற்றும் சருகு மாரியம்மன் கோவில் வீதி, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த குடியிருப்பு பகுதிகளில் சில தினங்களாக இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பு.புளியம்பட்டி பகுதியில் ஒரு பெண் வந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. 11-வது வார்டு சருகு மாரியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

    இதே போல் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு தங்கசாலை வீதியில் உள்ள வீடுகளிலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் டார்ச் லைட் அடித்து பார்ப்பதாகவும் வந்து பார்த்தால் அவர்கள் ஓடி விடுவதாகவும், மர்ம நபர்கள் பகல் நேரங்களில் நோட்டம் விடுவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

    இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும் பெண் முகத்தை முழுவதும் துணியால் மறைத்து மாஸ்க் அணிந்து புடவை கட்டி உள்ளார். இதை பார்த்தால் அவர் ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. மர்ம நபர்கள் பெண்களைப் போல் வேடமிட்டு வருவதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    மேலும் புளியம்பட்டி நகர குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடி வருவது அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.இதனால் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீடுகளில் புகுந்து திருட்டு சம்பவங்களில் நடக்க வாய்ப்புள்ளது.

    எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளித்து பயமின்றி இருக்க புளியம்பட்டி நகர பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வீதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    மேலும் நள்ளிரவில் மர்ம நபர்கள் நடமாடி வருவதையும் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை சிசிடிவி கேமராவில் பார்ப்பதற்கு நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் வெளிச்சம் இல்லாத இடங்களில் தெரு விளக்குகளை அமைக்க வேண்டும். பல பகுதிகளில் எரியாத தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது.
    • பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொளுத்தும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வந்தனர்.

    வரலாறு காணாத வெயிலால் மக்கள் புழுக்கத்தால் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து வந்தனர். மழை எப்போது பெய்யும், குளிர்ச்சியான சூழ்நிலை எப்போது வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நேற்று மட்டும் 106.72 டிகிரி பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் ஈரோடு புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணைப் பகுதியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பலத்த மழை காரணமாக கோபி பஸ் நிலையம் அருகே ஒரு வேப்பமரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மேல் விழுந்தது. நல்ல வேலையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்தனர்.

    இதேப்போல் கவுந்தபாடி, நம்பியூர், குண்டேரிப்பள்ளம், பவானி போன்ற பகுதிகளிலும் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. பவானியில் இரவில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. சித்தோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.

    ஈரோடு புறநகர் பகுதியில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால் அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது. இதனால் ஈரோடு மாநகர் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி-53, கவுந்தப்பாடி-39, நம்பியூர்-33, பவானி-29, குண்டேரிப்பள்ளம்-26, கோபி-12.20, பெருந்துறை-8. 20, எலந்த குட்டை மேடு-6.40, வரட்டுப்பள்ளம் அணை-4.40, மொடக்குறிச்சி-4, தாளவாடி-1.50.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜவுளி நிறுவனங்கள், செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, கல்குவாரிகள், தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
    • தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்ததோடு தோட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

    தமிழகத்தில் கட்டுமானம் தொடங்கி பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்கள், நட்சத்திர விடுதிகள், செங்கல் சூளை, சாய, தோல் தொழிற்சாலை வணிக நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான ஜவுளி நிறுவனங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதி, புறநகர் பகுதி, பெருந்துறை சிப்காட் மற்றும் மாவட்ட முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் ஜவுளி நிறுவனங்கள், செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, கல்குவாரிகள், தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

    முதற்கட்ட தேர்தலுக்காக சென்றவர்களே இன்னும் ஈரோடு திரும்பாத நிலையில், 3-ம் கட்ட தேர்தலையொட்டி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா மாநில தொழிலாளர்கள் ஜவுளி, உணவகங்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தாளவாடி பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள், தோட்டங்களில் அவர்களின் பங்கு மிகப்பெரியது.

    தற்போது அவர்கள் ஓட்டு போடுவதற்காக தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்ததோடு தோட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் கூறும்போது,

    ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெனிகள், செங்கல் சூளை, ஜவுளி நிறுவனங்கள் முக்கியமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் பணிக்கு வரும் வரை தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

    • கதலி, நேந்திரம் போன்ற வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
    • தாளவாடி பகுதியில் மழை கொட்டி தீர்த்தது.

    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆலாம்பாளையம், பனையம்பள்ளி போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கதலி, நேந்திரம் போன்ற வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    அறுவடைக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ரூ.35 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேப்போல் தாளவாடி பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. ஈரோடு மாநகர் பகுதியில் பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும் லேசாக சாரல் மழை பெய்தது.

    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.89 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81 அடியாக இருந்தது. தற்போது அதற்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடல் போல் பிரம்மாண்டமாக காட்சியளித்த பவானிசாகர் அணை தற்போது குளம் -குட்டை போல் சுருங்கி காட்சியளிக்கிறது.

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பெரும்பள்ளம் அணை, குண்டேரி அணை, வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இன்னும் 9 அடி நீர் குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு விடும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    ×