search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கோடை வெயில் குறைந்து ரம்மியமான சூழல் நிலவியது.
    • தமிழகத்தில் 20-ந்தேதி வரை மிக கனமழை மற்றும் அதி கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவித்த நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களாக கோடை மழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் கோடை வெயில் குறைந்து ரம்மியமான சூழல் நிலவியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஊட்டி, நீலகிரி, கொடைக்கானலுக்கும் பயணம் மேற்கொண்டனர்.

    இதற்கிடையே தமிழகத்தில் 20-ந்தேதி வரை மிக கனமழை மற்றும் அதி கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • சோதனைச் சாவடி அலுவலக கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடந்து வருகிறது.

    கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சி ஆகியவற்றை பார்வையிடுகிறார்கள்.

    அதனைதொடர்ந்து ஊட்டியில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று சுற்றி பார்ப்பது வழக்கம்.

    இந்த நிலையில் தொட்டபெட்டா மலை சிகரத்துக்குச் செல்லும் பகுதியில் வனத்துறை சாா்பில் சோதனைச் சாவடி அலுவலக கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

    இதன் காரணமாக தொட்டபெட்டா மலைசிகரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பைக்காரா படகு இல்லத்தில் 1.5 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் பைக்கார படகு இல்லத்திற்கும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை சுற்றி பார்த்து விட்டு, தொட்டபெட்டா மலைசிகரம், பைக்கார படகு இல்லத்திற்கு செல்ல முடிவு எடுத்து அங்கு செல்கின்றனர்.

    ஆனால் அங்கு சென்ற பின்னர் தான் அங்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து உதகை வனத் துறை அதிகாரிகள் கூறு கையில், தொட்டபெட்டா மலை சிகரத்தில் உள்ள சோதனைச் சாவடியால் வாகன நெரிசல் ஏற்படு வதாகவும், இதனை மாற்றி தர வேண்டும் என போலீசார் கேட்டுக்கொ ண்டனர்.

    அதன் காரணமாக தற்போது பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவர். இதேபோல் பைக்காரா சாலை விரிவாக்க பணியும் விரைவில் முடிந்ததும், அங்கும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    • இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
    • கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே ஊட்டி, கொடைக்கானல் என்பது மிகவும் முக்கியமானது.

    இங்குள்ள இயற்கை காட்சிகள், அருவிகள், எண்ணற்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் குளு, குளு கால நிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி, கொடைக்கானலில் கோடைவிழா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இ-பாஸ் பெற்று சென்று வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 10-ந் தேதி மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியையொட்டி பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்து குலுங்கி அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்து வருகிறது.

    இதுதவிர 2 லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

    வழக்கமாக கோடை மாதம் மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் நீலகிரி மாவட்டமே களைகட்டி காணப்படும். வியாபாரமும் படுஜோராக நடந்து வரும்.

    ஆனால் இந்த ஆண்டு இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. கண்காட்சி தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிறது. ஆனால் மலர் கண்காட்சியை பார்வையிட ஒவ்வொரு நாளும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வருகின்றனர். அதிகபட்சமாக கடந்த 12-ந் தேதி 21 ஆயிரம் பேர் வந்திருந்தனர். மற்ற நாட்களில் அதனை விட மிகவும் குறைவாகவே வந்துள்ளனர்.

    சுற்றுலாபயணிகள் வருகை குறைவு காரணமாக மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.125 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஊட்டி வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி பரூக் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் நடக்கும் கோடைவிழாவை காண அனைத்து பகுதிகளிலும் இருந்து எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். இதனால் இந்த ஒரு மாதம் முழுவதும் நீலகிரியில் வியாபாரமும் நன்றாக நடக்கும்.

    வழக்கமாக கோடை விழாவின் போது நடக்கும் மலர் கண்காட்சியை பார்க்க ஏராளமானோர் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. இங்குள்ளவர்களுக்கு எளிதாக இ-பாஸ் கிடைத்து விடுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு விண்ணப்பித்த உடன் இ-பாஸ் கிடைப்பதில்லை. பலமுறை முயற்சி செய்த பின்னரே இ-பாஸ் கிடைப்பதாகவும், அதானாலேயே பலரும் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை குறைவு மற்றும் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பி நடந்து வரும் அனைத்து தொழில்களும் பாதிப்படைந்துள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் அதனை நம்பி நடக்கும் வியாபாரம் முற்றிலும் களை இழந்து விட்டது. தொழிலாளர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர் என்றனர்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதனை பார்வையிட சுற்றுலாபயணி கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து வியாபாரிகள் காத்து இருக்கிறார்கள்.

    • தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.
    • ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழாவை யொட்டி சுற்றுலா பயணி களை கவரும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்ப டும்.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நடந்து வருகிறது.

    அத்துடன் தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.

    கண்காட்சியினை கண்டு ரசிக்கவும், குளு,குளு சீசனை அனுபவிக்கவும்வெளி மாநிலங்கள், வெளிமா வட்டங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ள னர்.

    வெள்ளிக்கிழமை முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    அவர்கள் பூங்காவில் மலர் கண்காட்சியையொ ட்டி, பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளில் பூத்து குலு ங்கிய பூக்களை பார்வை யிட்டனர்.மேலும் பூங்காவில் லட்சக்கணக்கான கார்னே சன் மலர்களை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, பல ஆயிரம் மலர்களை கொண்டு வடி வமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களையும் கண்டு ரசித்ததுடன், அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    அங்குள்ள புல் மைதான த்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆடி,பாடி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

    ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சியை யொட்டி அங்கு வைக்கப்பட்டுள்ள பல வண்ண ரோஜா மலர்கள், மலர்களால் உருவான யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களையும் கண்டு ரசித்தனர்.

    நேற்று மதியம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் மழைக்கு அங்கிருந்த மரத்த டிகளில் தஞ்சம் அடைந்த னர். ஒரு சிலர் மழையில் நனைந்தபடி கண்காட்சியை பார்வையிட்டு, மகிழ்ந்தனர்.

    மழையால் அங்கு குளு, குளு காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியை இது வரை 60 ஆயிரம் பார்வையிட்டுள்ளனர். இதேபோல் ரோஜா கண்காட்சியை கடந்த 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் பார்வையிட்டு ரசித்துள்ளனர். இன்று 4-வது நாளாகவும் சுற்றுலா பயணிகள் மலர் கண்கா ட்சியை பார்வையிட்டனர்.

    ஊட்டிக்கு ஏராளமானோர் சொந்த வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் பயணித்தும் ஊட்டிக்கு வருகிறார்கள்.

    இப்படி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்ப்பது சிரமமானது.

    சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும், அவர்கள் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில், ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து 20 சுற்று பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சுக்கு கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த பஸ் மூலம் படகு இல்லம், பிங்கர் போஸ்ட், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஆவின் வளாகம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    இந்த பஸ்களுக்கு சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.100 கட்டணத்தில் பஸ் இயக்கப்படுவதும், அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. 

    • பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
    • படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    ஊட்டி:

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நேற்றுமுன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகிறார்கள்.

    3-வது நாளான இன்று காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    மேலும் அங்கு பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மலைரெயில், டிஸ்னி வேல்ட் உள்ளிட்ட பல்வேறு அலங்கார சிற்பங்களையும் பார்த்து ரசித்தனர். மலா் கண்காட்சியில் நடப்பு ஆண்டில் முதன்முறையாக இரவில் லேசா் லைட் ஷோ நடத்தப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனா்.


    ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    கோத்தகிரி அருகே கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது.

    தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, கீழே இறங்கும் வழியில் உள்ள கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர். அந்த வகையில் கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சிமுனையில் நிலவிய இதமான காலநிலையோடு, இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிக ளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளை கண்டு ரசித்தனர்.

    இ-பாஸ் நடைமுறையால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், வாகன நிறுத்துமிடம், தங்குமிடம் போன்ற பிரச்சினைகள் இன்றி மகிழ்ச்சியாக வந்து செல்ல முடிந்ததாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனா்.

    • வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்றுவரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்.
    • 7,575 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று 38,116 பேர் நீலகிரிக்குச் சென்றுள்ளனர்.

    நீலகிரிக்கு ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி, நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கின்றனர்.

    இதனை பரிசாத்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்றுவரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதையடுத்து நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பெற்றே வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 6 நாட்களில் 1,03,308 வாகனங்களுக்கு இ-பாஸ் ழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இன்று மட்டும் (இரவு 8 மணி வரை) 7,575 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று 38,116 பேர் நீலகிரிக்குச் சென்றுள்ளனர்.

    • கோடைவிழா நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது.
    • ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்களும் வைக்கபட்டிருந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.

    குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது.

    மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 2 லட்சம் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேல்டு, பல்வேறு அலங்கார வளைவுகள், மலர் அலங்காரங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தன.

    இதேபோல் ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியது. ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்களும் வைக்கபட்டிருந்தன.

    கண்காட்சி தொடங்கியதையொட்டி அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். நேற்று ஊட்டியில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    அங்கு வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள், மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளையும் கண்டு ரசித்தனர். மலைரெயில், டிஸ்னி வேல்டு ஆகியவற்றையும் பார்வையிட்டு, அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.


    இதேபோல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த குட்டியுடன் கூடிய யானை, மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைகள், யானை, புலி உள்ளிட்டவற்றை பார்த்ததும் ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அதன் அருகே சென்று, அதனை தொட்டு பார்த்து ரசித்ததுடன், புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று ஒரே நாளில் நீலகிரிக்கு 24, 247 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 14 ஆயிரத்து 80 பேர் பார்வையிட்டுள்ளனர். ஊட்டி ரோஜா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 6 ஆயிரத்து 209 பேர் பார்வையிட்டுள்ளனர்.

    இதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,471 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 723 பேரும், தேயிலை பூங்காவுக்கு 675 பேரும், மரவியல் பூங்காவுக்கு 89 பேரும் வருகை தந்துள்ளனர்.

    • பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகளும், மலர் அலங்காரங்களும், பல வண்ண மலர்களால் ரங்கோலியும் அமைக்கப்பட்டுள்ளது.
    • கண்காட்சி தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. மலர் கண்காட்சியை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    விழாவில் நீலகிரி கலெக்டர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா மலர்களை கொண்டு பொலிவுபடுத்தப்பட்டு இருந்தது. வாயிலின் நுழைவு வாயில் பல வண்ணமலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு, விழாவின் சிறப்பு அம்சமாக 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா சூரியகாந்தி, சப்னேரியா போன்ற பல்வேறு வகையான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் விழாவின் முக்கிய அம்சமாக பெங்களூரு, ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு பாரம்பரியமிக்க ஊட்டி மலைரெயில் உருவமும், சுட்டி குழந்தைகளை கவரும் வகையில் 20 அடி உயரத்தில் டிஸ்னி வேர்ல்டு மலர் அலங்காரமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும், பல வண்ண மலர்கள், அரிய வகை தாவரங்களும் வைக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள், தோரணங்களால் அழகுப்படுத்தப்பட்டு காட்சியளிக்கிறது.

    இதுதவிர பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகளும், மலர் அலங்காரங்களும், பல வண்ண மலர்களால் ரங்கோலியும் அமைக்கப்பட்டுள்ளது.

    பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் 10 நாட்களும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் இன்று ரோஜா கண்காட்சி தொடங்குகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ரோஜா பூங்காவில் பல ஆயிரம் வண்ண, வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    இதுமட்டுமின்றி குழந்தைகளை கவரக்கூடிய வகையில், பல ஆயிரம் மலர்களை கொண்டு புறா, வனவிலங்குகளை காக்க வலியுறுத்தி யானைகள், புலி, வரையாடு, காட்டுஎருமை, சிங்கம் உள்பட பல்வேறு வன விலங்குகளின் உருவங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.

    கண்காட்சி தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள், மலர் அலங்காரங்கள், மலரால் வடிவமைக்கப்பட்ட மலைரெயில், அலங்கார வளைவுகளை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த யானை, சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    வனவிலங்குகளின் உருவங்களை பார்த்ததும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அவர்கள் அதன் அருகில் சென்று அதனை தொட்டு பார்த்தும், அதன் முன்பாக நின்று புகைப்படமும் எடுத்தனர்.

    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறையும் விடப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களும் கண்காட்சியை காண பூங்காவுக்கு திரண்டு வந்தனர். இதனால் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வருகிற நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
    • ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்கள் சுற்றுலாபயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    எத்தனை வாகனங்கள் வருகின்றன, எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை ஆன்லைன் மூலம் பதிவு செய்த பிறகே சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர முடியும். இதனை ஆய்வு செய்வதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் சுற்றுலா வாகனங்களை சோதித்தபிறகே மாவட்டத்துக்குள் அனுமதிக்கிறார்கள்.

    இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ஊட்டி காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரபு, செயலாளர் மகேந்திரன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    ஊட்டியில் காட்டேஜ் மற்றும் லாட்ஜில் முன்பதிவு செய்தவர்கள் தற்போது அதனை ரத்து செய்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்கள் சுற்றுலாபய ணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள், ஓட்டல், காட்டேஜ் உரிமையாளர்கள் உள்பட அனைத்து வியாபாரிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இ-பாஸ்சை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் ஒரு நாள் அனைத்து வியாபாரிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து கடையடைப்பு போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வியாபாரிகளும் ஆதரவு அளித்தால் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அந்தந்த சோதனை சாவடிகளிலேயே இ-பாஸ் பெற்று தரப்படுகிறது.
    • இ-பாஸ் கட்டாயம் என்ற விழிப்புணர்வு வாசகம் அவசியம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு, நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

    இதனை பரிசாத்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் இ-பாஸ் இல்லாமல் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி இ-பாஸ் கிடைத்திடும் வகையில் அந்தந்த சோதனைச் சாவடிகளிலேயே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பணியாளர்களை இ-பாஸ் பதிவு செய்யும் பணிகளில் ஈடுபடுத்தி இ-பாஸ் பெற்று தரப்படுகிறது.

    மேலும் மாவட்டத்தில் உள்ள துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்களை கொண்டு மேற்காணும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி முதல் நேற்று 8-ந் தேதி மாலை வரை சுமார் 3 லட்சத்து 17 ஆயிரத்து 102 சுற்றுலாபயணிகள், 58 ஆயிரத்து 983 வாகன ங்களில் பயணம் செய்ய இ-பாஸ் முறையில் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தர பதிவு செய்துள்ளனர்.

    இ-பாஸ் நடைமுறை குறித்து சுற்றுலாபயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் தங்கும் விடுதிளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், தாங்கள் வழங்கும் அறை முன்பதிவிற்கான ரசீதில் நீலகிரி மாவட்டத்துக்குள் வருகை தருவதற்கு இ-பாஸ் கட்டாயம் என்ற விழிப்புணர்வு வாசகம் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.
    • 388 ரகங்களை சேர்ந்த 65 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மலைவாச சுற்றுலா தலங்களில் ஊட்டி முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

    இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.

    நாளை தொடங்கும் மலர் கண்காட்சியானது வருகிற 20-ந் தேதி வரை நடக்க உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோ னியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், வில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றை பூங்காவலில் உள்ள பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்து கொண்டிருக்கிறது.

    தயார் செய்யப்பட்ட 388 ரகங்களை சேர்ந்த 65 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.


    இந்த முறை பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட டிஸ்னி வேர்ல்டு, காளான், ஆக்டோபஸ் மற்றும் மலர் கோபுரங்கள் உள்பட 10 வகையான மலர் அலங்காரங்கள் பல லட்சம் ரோஜா மலர்கள், கார்னேசன் மற்றும் செவ்வந்தி மலர்களை கொண்டு அலங்காரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதற்காக பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் ஊட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

    இதுதவிர பல ஆயிரம் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள், ரங்கோலி அமைக்கப்பட்டு ள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் வனவிலங்குகளின் உருவங்கள், கார்ட்டுன் பொம்மைகளும் மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.

    தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் சிறப்பு நிகழ்வாக கண்காட்சி தொடங்கும் நாளை மற்றும் நிறைவடையும் நாளான 20-ந் தேதி ஆகிய 2 நாட்கள் லேசர் லைட் ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மலர் கண்காட்சிக்காக மேடை அமைத்தல், அரங்குகள் அமை த்தல், பணிகள் நடந்து வருகிறது.

    கார்னேசன் மலர்களை கொண்டு அலங்காரங்கள் அமைப்பதற்காக இரும்பு கம்பிகள் மூலம் ரெயில் உள்ளிட்டவைகளின் வடிவங்களும் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூங்காவில் செய்யப்பட்டு ள்ளது.

    இதேபோல் ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்காவில் நாளை ரோஜா கண்காட்சியும் தொடங்குகிறது.

    4200க்கும் மேற்பட்ட ரகங்களில் உள்ள 32 ஆயிரம் பல வண்ண ரோஜா செடிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

    இ-பாஸ் நடைமுறை யால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ள நிலையில், மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்குவதால் வரக்கூடிய நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பெற்றே வருகின்றனர்.
    • ஊட்டியில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரிக்கு ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பெற்றே வருகின்றனர்.

    இ-பாஸ் விண்ணப்பித்த உடனே கிடைத்து விடுகிறது. இருந்தாலும் பெரும்பாலானோர் இ-பாஸ் எடுத்து செல்ல வேண்டும் என்பதால் வருவதில் சற்று தயக்கமே காட்டி வருகின்றனர்.

    நீலகிரியில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

    நேற்று முன்தினம் தாவரவியல் பூங்காவிற்கு 25,600 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் நேற்று 11,600 சுற்றுலா பயணிகள் மட்டுமே பூங்காவை சுற்றி பார்க்க வந்துள்ளனர். இதேபோல் ரோஜா பூங்காவுக்கு 5 ஆயிரத்து 750 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்கா 2,751 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 555 பேரும், தேயிலை பூங்கா 909 பேரும், மரவியல் பூங்காவுக்கு 80 பேரும் என மொத்தம் ஒரு நாளில் 21 ஆயிரத்து 680 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

    வழக்கமாக கோடை சீசனையொட்டி ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதும். வியாபாரமும் களைகட்டும்.

    ஆனால் இ-பாஸ் நடைமுறையால் நேற்று ஊட்டியில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    தொழில் பாதிப்பு கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சமயத்தில் தான், எங்களுக்கு வியாபாரமும் நன்றாக நடக்கும். இந்த சீசன் காலத்தில் நடக்க கூடிய வியாபாரம் மூலமாகவே எங்களுக்கு ஓரளவு வருமானமும் வரும்.

    அந்த வருமானத்தை வைத்து தான் சீசன் இல்லாத நேரங்களில் சமாளித்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் சீசன் நேரத்திலும் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இதனால் வியாபாரம் முற்றிலும் பாதிப்படை ந்து, எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் 2 லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலா பயணிகளில் 40 ஆயிரம் பேராவது வந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இனி மழை காலம் தொடங்கி விடும் என்பதால் சுற்றுலா வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் வருமானம் இழப்பதோடு அதை சார்ந்து வாழும் பல லட்ச குடும்பங்களும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×