search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டங்கள் அடங்கிய குரூப்புகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முடிந்து பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தீவிர மாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்த அளவில் 117 அரசு பள்ளிகள், 80-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள், 200-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    இவற்றில் மொத்தமாக அறிவியல் மற்றும் கலைப் பிரிவுகளில் 40 ஆயிரத்திற் கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. மேல்நிலைப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் தொழில் கல்வி, கலை பிரிவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளே முக்கியமான நுழைவு வாயிலாக இருக்கிறது.

    பிளஸ்-1 வகுப்பில் எடுக்கும் பாடத்திட்டங்களே மாணவர்களின் கல்லூரி படிப்பையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பவையாக உள்ளன. எனவே 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ்-1 வகுப்பில் சரியான பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து தனியார் பள்ளிகள் தாளாளர் கூட்டமைப்பின் தலைவர் கூறுகையில், தற்போது பிளஸ்-1 வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். கூடுமானவரை கணிதம், உயிரியல் பாடங்களை தவிர்க்கின்றனர்.

    கலைப் பிரிவில் எந்த பாடத்தை தேர்வு செய்தாலும் அதனுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமும் இடம்பெறுவது போல் இருக்கும் குரூப்புகளையே மாணவர்கள் தேர்வு செய்ய விரும்புகின்றனர். மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளும் பல்வேறு பாடத்திட்டங்களுடன் இணைந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும் கற்பிக்கும் வகையில் குரூப்புகளை பெற்றுள்ளனர்.

    இந்த வகை பாடத்திட்டங்களுக்கு இருக்கும் இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஒரு சில பள்ளிகளில் முற்றிலுமாக அறிவியல் பாடத்திட்டம் என்ற வகையில் உயிரியல் போன்ற பாடத்தை மட்டுமே கொண்ட குரூப்புகளை வைத்துள்ளன. இவற்றில் கணிதம் கற்பிக்கப்படுவது இல்லை.

    மாணவர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தேவையான பாடப்பிரிவுகளை வழங்கும் வகையில் மாணவர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருகிறது என்றார்.

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 350-க்கும் அதிக மான மதிப்பெண்களை பெற்ற மாணவி ஒருவர் கூறுகையில் கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்கள் அடங்கிய குரூப் பாடத் தையே தேர்வு செய்ய விரும்புகிறேன். எதிர்காலத் தில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் பாடத்திட்டத்தை தேர்வு செய்ய விரும்புகிறேன் என்றார்.

    அதே நேரத்தில் பெரும் பாலான மாணவர்கள் கணிதம் தவிர்த்த கலைப் பிரிவு படங்களுக்கே முக்கி யத்துவம் அளித்து வருகின்ற னர். நீட் தேர்வின் மீதான தயக்கம் காரணமாக பெரும் பாலான மாணவர்கள் உயிரியல் பாடத்தை தேர்வு செய்வதில் தயக்கம் காட்டு வதாக தனியார் பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் அரசு பள்ளியில் படிக்க விரும்பும் மாணவர்கள் பரவலாக பல்வேறு குரூப்புகளிலும் சேர்வதில் ஆர்வம் காட்டி வருவதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 10-ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு குரூப்புகளை தேர்வு செய்ய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    அரசு பள்ளிகளை பொறுத்தவரை கலைப் பிரிவு, வணிகப்பிரிவு, அறிவியல் பிரிவு என்ற பேதங்கள் இல்லாமல் மாண வர்களின் விருப்பம் மற்றும் மதிப்பெண்களை அடிப்ப டையாக வைத்து மாணவர் சேர்க்கை அளிக்கப்படுகிறது.

    அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர் களுக்கு உயர்கல்வியில் பல்வேறு துறைகளிலும் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு இருப்பதால் மாணவர்கள் பாடத்திட்டங்களை தேர்வு செய்வதில் எந்தவித தயக்க மும் இல்லை.

    அதே நேரத்தில் மாண வர்கள் உயிரியல் பாடத்தை தவிர்ப்பது குறித்து தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் கூறுகையில், ஒரு சில மாணவர்களுக்கு உயர் கல்வியில் மருத்துவம் படிக்க விருப்பம் இருந்தா லும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வ தில் தயக்கம் உள்ளது. எனவே அவர்கள் பிளஸ்-1 பாடத்தில் உயிரியலை தவிர்த்த படங்களையே எடுக்க விரும்புகின்றனர்.

    அரசுப் பள்ளிகளில் வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டங்கள் அடங்கிய குரூப்புகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மெட்ரிக் பள்ளிகள் போன்ற தனியார் பள்ளிகளில் கணிதம் அல்லாத உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் இணைந்த பாடத்திட்டங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரி வாக இருந்தாலும், உயிரியல் பிரிவாக இருந்தாலும், கலை பிரிவாக இருந்தாலும் மாணவர்கள் கணிதம் இடம்பெறுவதை தவிர்க் கவே விரும்புகின்றனர்.

    கணித பாடத்தில் பிளஸ்-2 தேர்வில் கேட்கப்படும் சிறப்பு கேள்விகளை எதிர்கொள்வதில் மாணவர்கள் மத்தியில் தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே கணிதம் வேண்டாம், உயிரியல் வேண்டாம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டும் போதும் என்பதே எதிர்காலத்தை தேடும் இன்றைய இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்?
    • இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா?

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், சங்கம் விடுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என்றும் இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்பு மாற்றவேண்டும் என்றும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரட்டை குவளை முறை இன்றும் நடைமுறையில் உள்ளது என்றும் சில தனியார் திருமண மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம கலக்கப்படவில்லை எனவும் அதில் பாசி தான் கலந்துள்ளது எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளது போல இரட்டை குவளை முறை போன்ற பாகுபாடுகள் அங்கு இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள், "இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்? இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா? என நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.

    சமூகத்தில் நிகழும் தவறுகளை தனிநபர் சுட்டிக் காட்டினால் அதனை களைந்து சரிசெய்வதை விடுத்து சுட்டிக்காட்டிய நபர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    பின்பு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தும், மாட்டுச்சாணம் கலப்பு வழக்கின் ஆவணங்களை ஒருவாரத்திற்குள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

    • புண்ணிய நதி என போற்றப்பட்ட வைகை தண்ணீரின்றி வறண்டும் காணப்படுகிறது.
    • பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வைகை ஆற்றில் தண்ணீர் நிரந்தரமாக ஓட வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம். திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிகழ்ச்சிக்காக வருடம் தோறும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். திருவிழா முடிந்த பின்னர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படும்.

    இப்படி சிறப்பு வாய்ந்த வைகை ஆற்றை தூர்வாராமலும், சில சமூக விரோதிகள் ஆற்றில் உள்ள மணலை அள்ளிச் சென்றதாகவும் பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வைகையில் நிரந்தரமாக தண்ணீர் ஓடினால் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் நாளடைவில் தண்ணீர் ஓடாமல் சாக்கடை கழிவுகள், வீடுகளில் இருக்கும் குப்பைகள் தான் வைகையில் மிதக்கிறது. புண்ணிய நதி என போற்றப்பட்ட வைகை தண்ணீரின்றி வறண்டும் காணப்படுகிறது.

    கடந்த சில வருடங்களுக்கு முன் வைகை வறண்ட நிலையில் அழகர் மலையானே தீயணைப்பு துறை உதவியால் தொட்டிக்குள் இறங்கி, ஆற்றில் இறங்கும் வைபவம் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடந்த வரலாறும் உண்டு. அதற்கு முன் திறந்து விடப்பட்ட வைகை நீர், வைகையில் மணல் இல்லாததால் மணல் அள்ளிய பள்ளத்தில் நீர் தேங்கி, மதுரைக்கு கூட வைகை நீர் வர முடியாத பரிதாபமான சூழல் நிலையும் இருந்தது. .

    வைகை ஆறு நீர்தாங்கிச் செல்லும் என்ற நிலை மாறி கொசுக்களை உற்பத்தி செய்யுமிடமாகவும், மனிதர்களின் கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாறி விட்டது. இறைச்சிக் கழிவுகள், சாக்கடை நீர் கலப்பதால் வைகை துர் நாற்றமுடன் நோய் பரப்பும் இடமாக காணப்படுகிறது. வைகை கரையோரம் முள் புதர் செடிகளும், ஆற்றுக்குள் நீரை அதிக அளவு உறிஞ்சும் கருவேல மரங்களும், மணல் அள்ளிய திருட்டு கும்பலிடம் தப்பித்த பகுதிகள் சிறு குன்று போலவும், மணல் அள்ளிய இடங்கள் அபாயகரமான பள்ளப்பகுதி என அறிவிக்கும் நிலையிலும் வைகை உள்ளது. கழிவு நீர் சாக்கடைகள் சங்கமிக்கும் வைகையை அழகர் ஆற்றில் இறங்கும் போது மட்டுமே கவனிக்கும் அரசு அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதுரையை வந்தடைந்தது. நேற்று மதியம் பெய்த கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இன்று இரண்டாவது நாளாக வைகையின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் செல்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வைகை ஆற்றில் தண்ணீர் நிரந்தரமாக ஓட வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைத்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் வைகையாற்றில் கலந்து வீணாகிறது. தண்ணீரை தேக்கி வைக்க கூடுதல் தடுப்பணைகளை கட்டவும் பாரம்பரிய மிக்க வைகை ஆற்றில் நிரந்தரமாக தண்ணீர் போடவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
    • மதுரையில் மதியம் 2.30 மணி அளவில் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மழை.

    குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் இன்று காலை வரை 34 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் திடீரென்று சுமார் 2.30 மணி அளவில் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

    குறிப்பாக, மதுரையில் உள்ள அண்ணாநகர், கேகே நகர், தெப்பக்குளம், கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல், தெற்கு வாசல், காளவாசல், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, செல்லூர், தத்தனேரி, சர்வேயர் காலனி ஐயர் பங்களா என்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

    மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மதுரை வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் எதிரொலியால், வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • கொள்ளை சம்பவம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்களிடம் முதல் கட்டமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை தடயங்கள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டை உடைத்து 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை அள்ளி சென்ற மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த துணிகர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சிநகரை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 46). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மதுரை பாசிங்காபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்ற ஷர்மிளா நேற்று இரவு வீடு திரும்பி உள்ளார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    பீரோவில் வைக்கப்பட்டிருந்த 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் ரொக்கம் மதிப்பு ரூ.1.30 கோடி ஆகும். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்களிடம் முதல் கட்டமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை தடயங்கள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம்.

    மதுரை:

    மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கண்மாய்களில் நீரை தேக்கி வைப்பதற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக சிவகங்கைக்கும், 3வது கட்டமாக மதுரைக்கும் தண்ணீர் திறக்கப்படும்.

    வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
    • கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார்.

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 4 வழக்குகளிலும் அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணையில் சவுக்கு சங்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்றத்திற்கு வலது கையில் கட்டு போட்டபடி சவுக்கு சங்கர் வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க நீதிமன்ற வளாகம் முன்பு காத்திருந்த பெண்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெட்ரோல் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
    • மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம் காரணமாக சைக்கிள் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.

    மதுரை:

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு சிலர் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தனர்.

    அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் போது அதில் முறைகேடு நடப்பதாகவும், ஒரு லிட்டர் பெட்ரோலில் 100 மில்லி அளவிற்கு பெட்ரோல் போடாமலே பெட்ரோல் போடப்பட்டதாக கணக்கு காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதனையடுத்து அந்த இளைஞர்கள் சிலர் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு சென்று அங்கு குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிலையில் அங்குள்ள அளவீடு மானி மூலமாக பெட்ரோலை நிரப்ப கூறி, அதன்படி நிரப்பிய போது ஒவ்வொரு லிட்டரிலும் 100 மில்லி அளவு குறைவாக எடுப்பது தெரியவந்தது.

    இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்தபோதே பெட்ரோல் பங்க் ஊழியர் உடனடியாக எந்திரத்தில் மாற்றம் செய்தார். இதனையும் வீடியோ எடுத்த நபர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இந்த பெட்ரோல் பங்க் முறைகேடு குறித்து மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் இளைஞர்கள் சிலர் புகார் அளித்த நிலையில் அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    திரவ தங்கம் என அழைக்கப்படும் பெட்ரோல் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய தேவையாக உள்ளது. வாகனங்களின் இயக்கத்துக்கு முக்கிய காரணியாக உள்ள பெட்ரோலை சாமானியர்கள் முதல் முதலாளிகள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம் காரணமாக சைக்கிள் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.

    சாதாரண வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பலதரப் பினரும் வெளியே செல்ல மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அவரவர் வசதிக்கேற்ப ரூ.50 முதல் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் போட்டு வருகின்றனர். ஆனால் அதிலும் தற்போது முறைகேடு புகார் எழுந்துள்ளது. சாமானியர்கள் உழைத்து அதில் ஒரு குறிப்பிட்ட தொகை பெட்ரோலுக்கே செலவழித்து வரும் நிலையில் அதன் அளவையும் குறைத்து விநியோகிக்கப்படுவது பொதுமக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    நுகர்வோர்களுக்கு சரியான அளவில் சரியான விலையில் பொருட்கள், சேவைகள் கிடைக்க வேண்டும் என பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால் பெட்ரோல் அளவில் குறைத்து நடக்கும் இந்த நூதன முறைகேட்டை தடுக்க வேண்டும். பெட்ரோல் பங்கில் நுகர்வோர்களுக்கு சரியான பெட்ரோல் அளவை வழங்குவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர்.
    • மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.

    மதுரை:

    பல்வேறு குற்றங்கள் புரிந்து நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு சிறைக்கு வரும் கைதிகளின் மறுவாழ்வுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதில் சிறைவாசிகளின் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பில் உள்ள பெட்ரோல் நிலையம், சிறைச்சந்தை ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக சிறைச் சந்தை காணப்படும். இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.

    மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட்டு பின் மத்திய சிறையில் செயல்பட்டுவரும் சிறை சந்தையை பார்வையிட்டனர். அதன் பின் அங்கு காலை உணவு அருந்திவிட்டு சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு அவர்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜையின் அருகே ஒரு கைப்பை இருந்தது. அதைக்கண்ட சிறை சந்தையில் பணிபுரியும் தண்டனை சிறைவாசி கார்த்திக் அந்த கைப்பையை எடுத்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    அதில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. அதில் அவர்களுடைய ஆதார் தவிர தொடர்பு எண்கள் இல்லாததால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து சிறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே தனது கைப்பையை எங்கு தவறவிட்டோம் என்று தெரியாமல் பல்வேறு இடங்களுக்கு சென்ற சிம்டா சீனிவாஸ் கடைசியாக மதுரை மத்திய சிறை சந்தைக்கு வந்தனர். அவர்களிம் உரிய விசாரணைக்கு பிறகு மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கைப்பை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதனை பெற்றுக் கொண்ட சுற்றுலாவாசிகள் மற்றும் சிறை அதிகாரிகள் சிறைவாசி கார்த்திக்கின் நேர்மையை பாராட்டினர். உரியவரிடம் ஒப்படைத்த காட்சி.

    • பணியில் இருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
    • சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் மத்திய அரசுக்கு சொந்தமான சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் கார் ஒன்று கடந்து செல்ல முயன்றது.

    அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அவசரமாக செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் காரை விட மறுத்ததால், அதன் டிரைவர் சுங்கச்சாவடி ஊழியர் மீது காரை மோதினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி செல்லக் கூடிய பதிவு எண் இல்லாத கார்களும், வேறு மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய கார்களும், திருமங்கலம் நகர் பகுதி வாகனங்கள் எனக் கூறி ஏமாற்றி, சுங்க வரி கட்டணம் செலுத்தாமல் செல்வது வாடிக்கையாகி வருவதாக புகார்கள் எழுந்தன.

    மேலும், சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பின்றி பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற வாகனங்களை சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்த கேட்டுக் கொள்ளும்போது வாக்குவாதம் மற்றும் கைகலப்பும் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். கப்பலூர் சுங்கச்சாவடியில் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிகளை ஈடுபட்டு வருகின்ற நிலை ஏற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

    உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காத போதிலும் பதிவெண் இல்லாத கார்களும் உள்ளூர் வாகனம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியர்களை தாக்குவதும், ஊழியர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனவும் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது.
    • 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்

    தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மாட் டோம் என்று கூறினார்கள். ஆனால் கடுமையாக மின் கட்டத்தை உயர்த்தி விட்டனர்.

    நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. கியாஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். அதுவும் அப்படியே இருக்கிறது. பெட்ரோல் விலையை கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு டீசலுக்கான விலையை குறைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கு வழங்குவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் ஒரு கோடி பேருக்கு கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள்.

    மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது. இனியும் இந்த 2 ஆண்டுகளில் அரசை மக்கள் நம்ப தயாராக இல்லை. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அம்மா அரசின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர். இன்றைக்கு மக்கள் மனதில் மகிழ்ச்சி உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை, வீழ்ச்சி தான் உள்ளது. அதுதான் உண்மையான கள நிலவரம். தி.மு.க. ஆட்சி எப்போதும் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும்.

    நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையா? தற்கொலையா? என்ற முடிவு கூட இன்னும் வரவில்லை. இது காவல்துறை மெத்தனமா? அரசியல் குறுக்கீடா? அழுத்தமா? என்று தெளிவாக தெரியவில்லை.

    புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறையில் கடிதம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது.

    3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். தமிழகம் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சியில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆண்டுதோறும் ஏராளமான சிறைவாசிகள் பொதுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
    • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வதற்காக சிறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

    குறிப்பாக எட்டாம் வகுப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை கல்வி கற்ப தற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது அவர்களுக்கு தேவையான சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்கள் மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏராளமான சிறைவாசிகள் பொதுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

    இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மதுரை மத்திய சிறையில் உள்ள 15 தண்டனை சிறைவாசிகள் எழுதினர். இதில் 15 பேரும் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதில் சிறைவாசி ஆரோக்கிய ஜெயபிரபாகரன் என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், சிறைவாசியான அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண்குமார் என்பவர் 506 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

    இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பெண்கள் மத்திய சிறையில் யாரும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மத்திய சிறையில் தேர்வு எழுதிய 15 பேரும் தேர்ச்சி பெற்ற நிலையில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்ததை முன்னிட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறைத் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×