search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம்"

    • இந்த விழா வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • தினமும் மாலை 4.45 மணி முதல் 6 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது.

    பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.

    இதையொட்டி உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 7 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த விழா வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    14-ந் தேதி வரை வெளிக்கோடை திருநாளும், 15- ந் தேதி முதல் 19-ந்தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறுகிறது.

    15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இரவு 8.45 மணிமுதல் இரவு 9.45 மணிவரை வீணை ஏகாந்த சேவை நடைபெறும். வெளிக்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணிவரையும், இரவு 8 மணிக்கு மேலும் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது.

    உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளி பின் மாலை 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    உள்கோடை உற்சவத்தையொட்டி தினமும் மாலை 4.45 மணி முதல் 6 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. 19-ந்தேதி வீணை வாத்தியம் கிடையாது. இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் கஜேந்திரனாக நடித்து காட்டியது.
    • ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.

    முன்னொரு காலத்தில் திரிகுதா என்ற மலை அடிவாரத்தில் உள்ள நீரோடையில் துர்வாச முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கந்தர்வன் கூகூ அந்த நீரோடையில் கந்தர்வ பெண்களுடன் ஜலகிரீடையில் ஈடுபட்டான். இதனால் துர்வாச முனிவரின் தவம் கலைந்தது. இதனால் கோபமான முனிவர் கந்தர்வனை முதலையாக சாபமிட்டார்.

    உடனே கந்தர்வன் சாப விமோசனம் கேட்கும்போது விஷ்ணுவின் சக்ர ஆயுதம் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார். இதே போல் இந்திரேதாயும்னா என்ற மன்னன் பெருமாளை வழிபடும் போது ஆச்சார்ய குறைவாக வழிபட்டதால் ஆத்திரமடைந்த அகத்திய முனிவர், அந்த மன்னனை யானையாக சபித்தார். இதனால் அவர் கஜேந்திர யானையாக வாழ்ந்து வந்தார்.

    ஒரு நாள் கஜேந்திர யானை தடாகத்தில் பெருமாளுக்கு, பூஜைக்காக தாமரைப் பூ பறிக்க போனபோது தடாகத்தில் இருந்த கூகூ முதலை கஜேந்திர யானையின் காலை கவ்விக்கொண்டு விட மறுத்தது. எவ்வளவோ முயன்றும் அந்த முதலை யானையின் காலை விடவில்லை. இதனால் தவித்த கஜேந்திர யானை, பெருமாளை வேண்டி ரெங்கா, ரெங்கா என்று கூவி தன்னை காப்பாற்ற அழைத்தது. உடனே கருடன் மீது ஏறி அங்கு வந்த பெருமாள், தனது சக்ராயுதத்தால் கூகூ முதலையை அழித்து கந்தர்வனுக்கும், யானையான கஜேந்திரனுக்கும் சாப விமோசனம் வழங்கினார். இந்நிகழ்ச்சியே கஜேந்திர மோட்சம் ஆகும்.

    இந்த நிகழ்ச்சி சித்ரா பவுர்ணமி நாளில் நடந்ததால் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் இந்நிகழ்ச்சி நடத்தி காட்டப்படும். இதையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு எழுந்தருளினார். அங்கு பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார்.

    பின்னர் ஆஸ்தான மண்டபத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு காவிரி ஆற்றிற்கு சென்றார். அங்கு நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி 6.15 மணிக்கு நடைபெற்றது. அப்போது ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் கஜேந்திரனாக நடித்து காட்டியது. இதை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். பின்னர் இரவு 8.15 மணிக்கு நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியின் போது அம்மாமண்டபத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இன்று 12 மணி முதல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
    • மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் கடந்த 25-ந்தேதி மாலை தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. வெளிக்கோடை நாட்களில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் மாலை புறப்பட்டு கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து, புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    நம்பெருமாள் உள்கோடை திருநாள் கடந்த 30-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு மாலை 6.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு உள்கோடை மண்டபத்திற்கு இரவு 7.45 மணிக்கு சென்றடைந்தார். உள்கோடை மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் கோடை திருவிழா நிறைவு பெற்றது.

    சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) கஜேந்திர மோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு சென்றடைவார். அங்கு நண்பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம்.
    • சேரகுலவல்லி ரெங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார்.

    குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி என்ற பகுதியை பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் மன்னராக இருந்த போதிலும் பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி காரணமாக தனது ஒரே மகளான சேரகுலவல்லியை ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமணம் செய்து வைத்தார். அன்று முதல் சேரகுலவல்லி ரெங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார்.

    இவருக்கு பெரிய சன்னதியின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தின் மேற்கு பகுதியில் சன்னதி உள்ளது. குலசேகர ஆழ்வார், சேரகுலவல்லியை பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம். இதனால் ஆண்டு தோறும் ராமநவமி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறும். இந்த ஆண்டு ராமநவமி உற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் நம்பெருமாள் சேரகுலவல்லி தாயாருடன் பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை சேர்த்தி சேவை கண்டருளினார்.

    அர்ச்சுன மண்டபத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வெளிக்கோடை மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சென்றடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளி அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    • இந்த விழா இன்று தொடங்கி 29-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • நம்பெருமாள் உள்கோடை திருநாள் 30-ந் தேதி தொடங்கி மே 4-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான இன்று மாலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேருவார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    நம்பெருமாள் உள்கோடை திருநாள் வருகிற 30-ந் தேதி தொடங்கி மே மாதம் 4-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 30-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவை நடைபெறுகிறது. வெளிக்கோடை, உள்கோடை திருநாளை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி வரை இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதி கிடையாது. வருகிற 29-ந் தேதி ஸ்ரீராமநவமியையொட்டி பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நம்பெருமாள் சேரகுலவள்ளி தாயார் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது.

    5-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது.
    • நாளை இரவு சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப் பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் தங்க கருடன், யாழி, கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதைத்தொடர்ந்து 7 ஆம் திருநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். அதன் பிறகு ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 1 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    8-ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்க விலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு 5.15 மணிக்கு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார்.

    காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தேரில் நம்பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது.

    கீழச்சித்திரை வீதியில் இருந்த புறப்பட்ட தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதி ஆகிய நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை சென்றடைந்தது. தேர் நிலைக்கு வந்த பின்னர் நம்பெருமாள் ரேவதி மண்டபம் சேர்ந்தார்.

    தேரோட்டத்தை முன்னிட்டு போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள் ளது.

    நாளை (வியாழக்கிழமை) திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். நாளை மறுநாள் (21-ந் தேதி) ஆளும் பல்லக்குடன் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    • 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது.
    • 21-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 21-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 1 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அதிகாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து வருகிற 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் 19-ந்தேதி நடைபெறுகிறது.
    • 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் வீதி உலா வந்தார்.

    விழாவின் 4-ம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு காலை 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து காலை 4.30 மணிக்கு நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைவார். மண்டபத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நண்பகல் 12 மணிக்கு திருச்சி ஆரியவைஸ்யாள் ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.

    அங்கிருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைவார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    நாளை (சனிக்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலையில் அனுமந்த வாகனத்திலும், 16-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 17-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 18-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் 19-ந்தேதி நடைபெறுகிறது.
    • 20-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    விழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும், நாளை(வியாழக்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 14-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 15-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 16-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 17-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார்.

    18-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 17-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார்.
    • தேரோட்டம் 19-ந்தேதி நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தக்காலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலபொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதன் பின்னர் காலை 10.15 மணியளவில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வருகிறார். காலை 6.30 மணிமுதல் 7 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் கொடிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 12-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். அன்று மாலை கற்பகவிருட்ச வாகனத்தில் உலா வருகிறார்.

    13-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 14-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 15-ந்தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 16-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    17-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 18-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    • சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் தங்க கருட வாகனம், சேஷவாகனம், கற்பக விருட்சம், தங்க குதிரை வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 5-ந் தேதி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. 6-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு கருடமண்டபத்திற்கு மாலை 3.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு வாகன மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சென்றார்.

    வாகன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்பட கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்.
    • இன்று ஆளும் பல்லக்கு உலாவும் நடந்து பங்குனித்திருவிழா நிறைவுபெறும்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மண்டகப்படிகளுக்கு சென்று வந்தார். உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான நம்பெருமாள்-ரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று காலை வரை நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேர் எனப்படும் கோ ரத புறப்பாடு நேற்று நடந்தது. இதற்கென தாயார் சன்னதி சேர்த்தி உற்சவத்தில் இருந்தபடி உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 9 மணியளவில் பச்சை சாதரா பட்டுடுத்தி, முத்துவளையக் கொண்டை, கஸ்தூரி திலகம், கவுஸ்துபம் எனப்படும் நீலமணிநாயகம், ரத்தின அபயஹஸ்தம் உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து தேருக்கு புறப்பட்டார். அங்கிருந்து சித்திரை வீதி வடகிழக்கு மூலையில் நின்றிருந்த கோ ரதத்தில் காலை 10 மணியளவில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து காலை 10.45 மணியளவில் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் கோ ரதம் வடம் பிடிக்கப்பட்டது.

    அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், கஸ்தூரி ரங்கா... காவேரி ரங்கா... என பக்தி பரவசத்துடன் முழங்கியவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கீழச்சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேலச்சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகள் வழியாக தேர் ஆடி அசைந்து வந்து மதியம் 3.15 மணியளவில் மீண்டும் நிலையை அடைந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் தேரில் இருந்து பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளினார். இரவில் சப்தாவரணமும், இன்று(வெள்ளிக்கிழமை) 7-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உலாவும் நடந்து பங்குனித்திருவிழா நிறைவுபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×