search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரணில்"

    பாராளுமன்ற பாரம்பரியம், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனா கூறி உள்ளார். #Sirisena #RanilWickramasinghe
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

    இதை சமாளிக்க பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த சிறிசேனா உத்தரவிட்டார். அவரது நடவடிக்கை சட்ட விரோதமானது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு ராஜபக்சேவும், அவரது மந்திரி சபையும் செயல்பட தடை விதித்தது. நெருக்கடி அதிகரித்ததால் ராஜபக்சே நேற்று முன்தினம் பதவியில் இருந்து விலகினார்.

    இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நேற்று பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    எக்காரணம் கொண்டும் ரணில் விக்ரமசிங்கேயை பிரதமராக நியமிக்க முடியாது என்று ஏற்கெனவே கூறியிருந்த சிறிசேனா அந்த முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என்று விளக்கம் அளித்தார். இது தொடர்பாக கட்சித்தலைவர்கள் முன்னிலையில் சிறிசேனா பேசியதாவது:-

    மூத்த வக்கீல்கள் மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகளை ஆலோசித்த பின்னரே ஒவ்வொரு செயலையும் நான் மேற்கொண்டேன். நல்லெண்ண அடிப்படையில் நான் செயல்பட்டிருக்கிறேன். அதற்காக வரலாற்றில் நினைவு கூரப்படுவேன்.

    சுமார் 1½ கோடி மக்களின் வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டேன். ஆனால் 122 எம்.பி.க்கள் அதை தடுத்து விட்டனர். இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற பாரம்பரியம், ஜனநாயகம் ஆகியவற்றை காக்க வேண்டும் என்ற நோக்கில் ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இலங்கையில் நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டிருப்பதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறியதாவது:-

    அண்டைய நாடு மற்றும் உண்மையான நட்புநாடு என்ற வகையில் இலங்கையில் நிலவிய அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டிருப்பதை இந்தியா வரவேற்கிறது. அனைத்து அரசியல் சக்திகள் வெளிப்படுத்திய முதிர்ச்சி மற்றும் ஜனநாயகத்தின் வலிமை ஆகியவற்றுக்கான வெற்றிதான் இது.

    இந்தியா-இலங்கை இடையிலான நட்புறவு மேல்நோக்கி பயணிக்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து செல்ல இந்தியா உறுதி பூண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sirisena #RanilWickramasinghe
     
    ×