search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்சிகோ எல்லைச்சுவர்"

    மெக்சிகோ எல்லைச்சுவர் விவகாரத்தில் டிரம்ப் புதிய சமரச முயற்சி மேற்கொண்டார். ஆனால் ஜனநாயக கட்சியினர் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். #DonaldTrump #USMexicoBorder #WallFunding
    வாஷிங்டன்:

    அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவதற்காக உள்நாட்டு நிதியில் 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்கும்படி ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார்.

    இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற செனட் சபையில் செலவின மசோதா நிறைவேறாமல் போனது. இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் தங்களுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருப்பதால் அரசு துறைகள் முடக்கம் 4 வாரங்களை கடந்து நீடிக்கிறது.

    மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் சாதகமான சூழல் அமையாவிட்டால் அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனம் செய்ய நேரிடும் என டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.

    அதேசமயம் அகதிகள் விவகாரத்தில் டிரம்ப் கையாண்டு வரும் கடுமையான போக்கை கைவிட்டுவிட்டு, மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள டிரம்ப் முன்வந்துள்ளார்.

    அதே சமயம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான 5.7 பில்லியன் டாலர் நிதியில் அவர் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை.

    இது தொடர்பாக நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எல்லையை திறக்க செய்து போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்கு வழி ஏற்படுத்தி தர விரும்புபவர்களிடம் இருந்து நம்முடைய எதிர்காலத்தை மீட்டெடுப்பதற்கு இதுவே சரியான நேரம்.

    தீவிர இடதுசாரிகள் நமது எல்லையை கட்டுப்படுத்த முடியாது. எல்லைச் சுவர் என்பது ஒழுக்கக்கேடானது அல்ல. அதனை எதிர்ப்பவர்கள் தான் ஒழுக்கக்கேடானவர்கள்.

    எல்லைச் சுவர் திட்டத்துக்கு 5.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க ஜனநாயக கட்சியினருடன் சமரசம் செய்ய முடிவு செய்துள்ளேன். அது என்னவென்றால் ‘டிரீமர்ஸ்’ என அழைக்கப்படும், சிறு வயதில் அமெரிக்கா குடியேறியவர்களை பாதுகாக்கும் ‘டி.ஏ.சி.ஏ’ திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறேன்.

    அதே போல் போரினாலும், இயற்கை பேரிடரினாலும் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்குள் வந்தவர்களுக்கு இந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தையும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறேன்.

    இதன் மூலம் சிறு வயதில் அமெரிக்காவில் குடியேறிய 7 லட்சம் பேர், போர் மற்றும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு அமெரிக்க வந்த 3 லட்சம் பேர் பலன் பெறுவார்கள்.

    இந்த பொது சமரசத்தை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசுத்துறைகள் முடக்கத்துக்கு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எனினும் டிரம்பின் இந்த சமரசத்தை ஜனநாயக கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டனர். பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி இது குறித்து கூறுகையில், “முன்பே நிராகரிக்கப்பட்ட திட்டங்களை ஜனாதிபதி டிரம்ப் இப்போது தொகுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசுத்துறைகள் முடக்கத்தின் மூலம் பெருமை தேடிக்கொண்ட அவர், அரசுத்துறைகள் மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகளை கட்டாயமாக எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

    செனட் சபை ஜனநாயக கட்சி தலைவர் சக் சும்மர், “அரசுத்துறைகள் முடக்கத்தால் ஏராளமான அமெரிக்க ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை டிரம்ப் தற்போதுதான் உணர்ந்துள்ளார்” என கூறினார். 
    மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சனையை மனிதாபிமான நெருக்கடியாக பார்க்க வேண்டும் என அமெரிக்க மக்களிடையே தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார்.
     
    இதற்காக உள்நாட்டு நிதியில் இருந்து 500 கோடி டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தை அவர் வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால். மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது. மேலும், அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுதியாக உள்ளது.

    இதனால், உள்நாட்டு அரசு செலவினங்களுக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட செலவின மசோதா  செனட் சபையில் எதிர்க்கட்சியான  ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெற தவறியதால் நிறைவேற முடியாமல் போனது.

    இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின.

    மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியினருக்கும் சமரசம் ஏற்படாததால் இரு வாரங்களுக்கும் மேலாக அரசு துறைகள் முடக்கம் நீடிக்கிறது.

    இந்நிலையில், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இதன் மூலம் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சியின் பலம் கூடியது. மேலும் பிரதிநிதிகள் சபை  தலைவராக ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதைதொடர்ந்து அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நிலுவையில் உள்ள இரு செலவின மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அந்த இரு மசோதாக்களிலும் மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. அந்த மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் வெற்றிகரமாக நிறைவேறியது.



    இருப்பினும், தற்போது செனட் சபையில் குடியரசு உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அங்கு இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம் என தெரிகிறது. ஒருவேளை செனட் சபையிலும் அந்த மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டால் ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அவை அனுப்பிவைக்கப்படும்.

    அமெரிக்க-மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு நிதி அளிக்காத எந்த தீர்மானத்தையும் ஏற்கமாட்டேன் என ஏற்கனவே டிரம்ப் தெரிவித்துள்ளார். 

    எனவே, இந்த செலவின மசோதாக்கள் இரு சபைகளிலும் நிறைவேறினாலும் தனக்குரிய சிறப்பு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் அவற்றை ரத்து செய்துவிடுவார் என தெரிகிறது. இதனால் அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருவது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    இதற்கிடையில், எல்லைப்பகுதியில் இரும்பிலான தடுப்பு வேலி அமைக்கலாம். இரும்பு தடுப்புகள் பலமானதாகவும் இருக்கும் என்று நேற்று தெரிவித்தார். இதற்கு 570 கோடி டாலர்கள் வரை செலவாகும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், தனது நிலைப்பாட்டை மக்கள் மன்றத்தில் முன்வைக்க டிரம்ப் தீர்மானித்தார். அதிபராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அவரது அலுவலகத்தில் இருந்தவாறு தொலைக்காட்சி வழியாக நேற்று அவர் மக்களிடையே உரையாற்றினார்.

    அமெரிக்கா-மெக்சிகோ இடையே பலமான எல்லைச்சுவர்  இல்லாததால் இங்கு குடியேறவரும் மக்கள் வழியில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள்படும் வேதனையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    இதை மனிதாபிமான நெருக்கடியாக நாம் கருத வேண்டும். எல்லைச்சுவர் ஒன்றினால் மட்டுமே இந்த பிரச்சனையை களைய முடியும். எனவே, இதயத்துக்கும் ஆன்மாவுக்குமான முக்கிய பிரச்சனையாக இதை மதித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்னை சந்தித்து பேச வேண்டும். மக்களிடம் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்கள் எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லதல்ல என தனது தொலைக்காட்சி உரையில் டிரம்ப் குறிப்பிட்டார். 

    அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லை பிரச்சனையை மனிதாபிமான நெருக்கடியாக மாற்றி, மனித உரிமை மீறல் என பிறநாடுகள் குற்றம்சாட்டும் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கும் டிரம்ப் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். #Trumpurges #wallfunding #bordercrisis #borderwall
    ×