search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்கழி வழிபாடு"

    • கண்ணனை வணங்கி, இப்பிறவியில் மகிழ்ச்சியாக வாழும் பெண்ணே!
    • அவன் உடம்பில் ஒரு பக்கத்தில் அன்னை பார்வதி உறைகிறாள்.

    திருப்பாவை

    பாடல்

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

    மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்

    நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால்

    பண்டுஒருநாள்

    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்

    தோற்றும் உனக்கே பெருந்துயில்தான்

    தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்!

    அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    முற்பிறவியில் பாவை நோன்பு இருந்து கண்ணனை வணங்கி, இப்பிறவியில் மகிழ்ச்சியாக வாழும் பெண்ணே! உன்னை நாங்கள் பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. எழுந்திருக்காவிட்டாலும் பரவாயில்லை, பதிலாவது சொல்லக்கூடாதா?. மணம் மிக்க துளசி மாலையை தலையில் சூடியிருக்கும் நாராயணன், நாம் வேண்டிய வரங்களைத் தருவார். முன்னோர் காலத்தில் ராமனால் எமதர்மனின் வாயில் விழுந்த கும்பகர்ணன், உனக்கு தூக்கத்தைத் தந்தானா? சோம்பல் குணம் உடையவளே! எங்கள் குலத்திற்கு அருமையான ஆபரணம் போன்றவளே! உன் தூக்கம் கலைந்து எழுந்து வந்து கதவை திறப்பாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

    பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

    ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

    கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்

    ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

    ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    சிவபெருமானின் திருவடிகள் ஏழு பாதாள உலகங்களையும் கடந்து, சொற்களால் விளக்க முடியாத சிறப்புடன் விளங்குகின்றன. மலர்கள் நிறைய சூடிய அவன் திருமுடி எல்லாப்பொருட்களும் சென்றுசேரும் முடிவாக இருக்கிறது. அவன் ஒரே திருமேனி உடையவன் அல்ல. அவன் உடம்பில் ஒரு பக்கத்தில் அன்னை பார்வதி உறைகிறாள். அவன் அர்த்தநாரீஸ்வரன். வேதங்களும், விண்ணுலகில் உள்ளவர்களும், மண்ணுலகில் உள்ளவர்களும் பாடி துதித்தாலும், அவனது பெருமை பேசமுடியாத அளவுக்கு விரிந்து செல்கிறது. அவன் திருதொண்டர் களின் உள்ளங்களில் குடியிருப்பவன். குற்றமில்லாத குலத்தில் பிறந்து சிவாலயத்தில் பணி செய்கின்ற பெண் பிள்ளைகளே! எப்போதும் அவர்களுடன் இருக்கும் நீங்களாவது அவனுடைய ஊர் எது? அவனுடைய பெயர் என்ன? அவனைப் பாடும் தன்மை எப்படி என்று கூறுவீர்களா? அதன்படி நாங்கள் நடந்துகொள்வோம்.

    • எழுந்திருபெண்ணே! பரந்தாமன் புகழ் பாடுவோம்.
    • சிவபெருமானின் புகழை நாங்கள் பாடினோம்.

    திருப்பாவை

    பாடல்

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

    வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்

    கூவுவான் வந்து நின்றோம் கோதுகுலம் உடைய

    பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

    மாவாய்! பிளந்தானை மல்லரை மாட்டிய

    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

    ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கிழக்கு வானம் வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்கு கிளம்பிவிட்டன. ஆயர்குல பெண்கள் பாவை நோன்பிற்காக நீராட புறப்பட்டு விட்டனர். உன்னையும் நீராட அழைத்துச் செல்ல வேண்டி, அவர்களைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ளோம். இப்போது உன்னை எழுப்பிக் கொண்டு இருக்கிறோம். எழுந்திருபெண்ணே! பரந்தாமன் புகழ் பாடுவோம். குதிரை வடிவில் வந்த அசுரன் வாயைப் பிளந்து கொன்றவன், மல்யுத்தம் செய்ய வந்தவர்களை வென்றவன், தேவர்களுக்கு தலைவனான கிருஷ்ணனைப் பாடி வணங்கினால் நாம் விரும்பிய அனைத்தையும் கேட்டு அவன் நிறை வேற்றுவான். நாங்கள் சொல்வதை ஏற்று புறப்படு!

    திருவெம்பாவை

    பாடல்

    கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

    ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

    வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

    ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கோழிகள் கூவுகின்றன. மற்ற பறவைகளும் ஒலி எழுப்புகின்றன. வீடுகளில் ஏழிசை கருவிகள் முழங்குகின்றன. எங்கும் வெண் சங்குகள் ஒலிக்கின்றன. ஒப்பற்ற பேரருளைக் கொண்ட சிவபெருமானின் புகழை நாங்கள் பாடினோம். இத்தனையும் உனக்கு கேட்கவில்லையா? இதற்குப் பிறகும் தெளியாத உன் உறக்கம் என்ன உறக்கமோ? வாய் திறந்து பேச மாட்டாயா? திருமால், தன் கண்ணை பறித்து சிவபெருமானுக்கு சாத்தி சக்கரத்தை பரிசாகப் பெற்றார். அதேபோன்று இறைவனிடம் அன்பு கொண்டு பெருவாழ்வு பெறுவோம். உலகம் எல்லாம் ஒடுங்கக்கூடிய பிரளய காலத்தில் இறுதியில் தான் ஒருவ னாக நின்று காத்தருளும் தலைவனாகிய சிவனைப் பாடுவோம்.

    • வெள்ளை சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா?
    • எல்லோருக்கும் தலைவனாக விளங்கும் இறைவனை நீ பாடுவாயாக!

    திருப்பாவை

    பாடல்

    புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்

    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

    பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

    வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

    மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

    உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    பெண்ணே! பொழுது விடிந்தது. இதோ பறவைகள் ஒலி எழுப்புகின்றன. கருடனை வாகனமாக கொண்ட பெருமாள் கோவிலில் இருந்து ஒலிக்கின்ற வெள்ளை சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா? தூக்கத்தில் இருந்து எழுந்திரு! பூதகி என்னும் ராட்சசியின் மார்பில் சுரந்த விஷப்பாலை குடித்து அவளை அழித்தவன், வண்டிச் சக்கரத்தின் வடிவில் வந்த சகடாசுரனை தன் கால்களால் உதைத்துக் கொன்றவன், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது துயில் கொண்டிருப்பவன். இப்படி பல சிறப்புகள் உடைய திருமாலை, முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து 'அரி அரி்' என்று போற்றி அழைக்கும் பேரொலி உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறதே! நோன்புக்கு செல்வோம் எழுந்து வா!

    திருவெம்பாவை

    பாடல்

    மானேநீ நென்னலை நாளைவந் துங்களை

    நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே

    போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

    வானே நிலவே பிறவே அறிவரியான்

    தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்

    வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

    ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்

    ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    மான் போன்ற சாயலை உடையவளே! நாளைக்கு நானே முதலில் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறினாயே! இப்போது நாங்கள் உன்னைத் தேடி வந்து எழுப்புகிறோம். நேற்று நீ சொன்ன சொல் எந்ததிசையில் சென்றுவிட்டது? நீ பதில் சொல்லமாட்டாய். இன்னும் பொழுது விடியவில்லையா? வானுலக தேவர்களும், மண்ணில் வாழும் மக்களும் மற்ற உலகில் உள்ளவர்களால் கூட அறிய முடியாத தன்மையை கொண்டவன் இறைவன். அப்படிப்பட்டவன் எங்கள் மீது வலிய வந்து கருணைகாட்டுகிறான். அவன் புகழை நாங்கள் பாடுவதைக் கேட்டும் நீ உறங்குகிறாய்? பதில் எதுவும் சொல்லாமலும், இறைவனைப் பாடி உருகாமலும் இருக்கிறாயே! இது உனக்கு சரிதானா? உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தலைவனாக விளங்கும் இறைவனை நீ பாடுவாயாக!

    • ஆயர்குலத்தினில் தோன்றிய மாணிக்க விளக்கை போன்றவன்.
    • அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டவன் இறைவன்.

    திருப்பாவை

    பாடல்

    மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

    தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

    தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

    தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    மாயாஜாலம் செய்வதில் வல்லவன், வடமதுரையில் பிறந்தவன், தூய்மையான நீர் பெருக்கெடுத்து ஓடும் யமுனைக்கரையில் விளையாடி வாழ்பவன், ஆயர்குலத்தினில் தோன்றிய மாணிக்க விளக்கை போன்றவன், தான் பிறந்த தாயின் வயிற்றுக்கு பெருமை சேர்த்தவன், அவனே தாமோதரன். அப்படிப்பட்ட கண்ணனை, தூய்மையான மனதோடு சென்று அவன் திருவடிகளில் மலர் தூவி வணங்க வேண்டும். வாயினால் அவன் புகழைப்பாடி, மனதினால் தியானித்து வழிபட்டால், நமது பிழைகள் யாவும் நீங்கும். முற்பிறவியில் நாம் செய்த பாவங்களும், தொடர்ந்து வருகின்ற பாவங்களும் நெருப்பினில் இட்ட தூசியைப்போல் மறைந்துவிடும். ஆகவே அவன் பெருமைகளைப் பாடுவோம்.

    திருவெம்பாவை

    பாடல்

    மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்

    போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

    பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

    ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

    கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்

    சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலம் இடினும் உணராய்

    உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    திருமால், நான்முகன் ஆகியோரால் காணமுடியாத இறைவனின் திருப்பாதங்களை, நாம் காணமுடியும் என்று பொய்யாக பிறர் நம்பும் படியாக பாலும், தேனும் ஒழுக பேசிய வாயையுடைய பெண்ணே, கதவைத் திறப்பாயாக! பூமியில் உள்ளவர்களாலும், வானுலகில் உள்ள தேவர்களாலும், பிற உலகத்தில் உள்ளவர்களாலும் அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டவன் இறைவன். அவன் எளியவர்களான நம் மீது அன்பும், கருணையும் கொண்டு அருள்புரிகிறான். அவனது பெருங்குணத்தை போற்றுகிறோம். சிவனே... சிவனே.. என்று அவன் திருநாமத்தை உரக்கப்பாடுகிறோம். இதைக்கேட்டும் உணர்ச்சி இல்லாமல் தூங்குகிறாயே! நறுமணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை. நீ எப்போதுதான் இதை உணரப்போகிறாய்! எழுந்திரு.!!

    • அருள் மழை பொழியக்கூடிய கண்ணனே!
    • ஒளி பொருந்திய முத்தினை போன்ற பற்களை கொண்ட பெண்ணே!

    திருப்பாவை

    பாடல்

    ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

    ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

    ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்

    பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்

    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

    தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    கடல் போன்ற நிலையில் அருள் மழை பொழியக்கூடிய கண்ணனே! மழைக்கு அதிபதியாகிய மன்னனே! நீ மழையை பெய்விக்காமல் ஒளிந்து கொள்ளாதே! நீ கடலில் புகுந்து, நீரை முகர்ந்து கொண்டு வானத்தை அடைய வேண்டும். இந்த உலகின் மூல முதல்வனாகிய திருமாலின் திருமேனியை போல் கருமை நிறமாக மாறவேண்டும். பெருமையும், எழிலும் பொருந்திய நாராயணனின் கையில் உள்ள சக்கரத்தைப் போல் மின்ன வேண்டும். அவனது மற்றொரு கையில் உள்ள வலம்புரி சங்கு ஒலிப்பதை போல. இடி இடிக்க வேண்டும். பெருமாளின் சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புபோல உலக மக்கள் யாவரும் வாழும் படியாகவும் நாங்கள் மகிழ்ந்து நீராடுவதற்கு தாமதம் செய்யாமல் மழையை பொழியச் செய்யவேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்

    ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

    வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

    எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

    கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

    விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

    உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து

    எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    ஒளி பொருந்திய முத்தினை போன்ற பற்களை கொண்ட பெண்ணே! இன்னுமா உனக்கு பொழுது விடியவில்லை? கிளிபோல பேசும் நம் தோழியர் அனைவரும் வந்துவிட் டார்களா? என்று கேட்கிறாய். இறைவனைப் பாட வந்தவர்களை கணக்கிட்டு சொல்கிறோம். யார் வரவில்லை என்பதை எண்ணிப்பார்த்து சொல்கிறோம் அதற்கு நேரம் ஆகும். அதுவரைக்கும் நீ தூங்கிக்கொண்டு காலத்தை வீணாக்காதே. தேவருக்கு ஒப்பற்ற மருந்தாகவும், வேதங் களின் சிறந்த பொருளாகவும் கண்ணுக்கு இனிமையாகக் காட்சிதரும் சிவனை பாடித் தொழுது உள்ளம் உருகி நிற்கிறோம். ஆகை யால் நீயே வந்து எண்ணிக்கொள். எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் நீ போய் தூங்கு!

    • தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவன் திருமால்.
    • என் அப்பன், ஆனந்தன், அமுதம் போன்றவன்

    திருப்பாவை

    பாடல்

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

    நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து

    ஓங்குபெருஞ்செந்நெலோடு கயலுகள

    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

    வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    வாமன அவதாரத்தில், மாவலி சக்கர வர்த்தியிடம் மூன்றடி மண்கேட்டு, வானளாவ உயர்ந்து தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவன் திருமால். மேன்மைமிக்க அவருடைய பெயரைப் பாடி நீராடினால், நாடு முழுவதும் மாதம் மூன்று முறை மழை பெய்யும்.

    நீர்வளம் பெருகி நெற்பயிர்கள் செழுமையாக உயர்ந்து வளரும். நெற்பயிர்களின் நடுவே கயல்மீன்கள் துள்ளும்.

    அழகிய குவளை மலரில் புள்ளிகளைக் கொண்ட வண்டுகள் தேன் குடித்து மெய் மறந்து உறங்கும். தொழுவத்தில் புகுந்து பால் கறப்போர் பருத்த மடிகளை பற்றிக் கறக்க, வள்ளல் குணம்மிக்க பசுக்கள் குடம் நிறைய பாலைச் சுரந்து குடங்களை நிரப்பும். இப்படிப்பட்ட நீங்காத செல்வத்தை நாம் இந்த பாவை நோன்பால் அடைவோம்.

    திருவெம்பாவை

    பாடல்

    முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

    அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்

    தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

    பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்

    புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ

    எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

    சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை

    இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    முத்தைப்போன்று வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் எல்லோருக்கும் முன்பாகவே எழுந்திருந்து, இறைவனை 'என் அப்பன், ஆனந்தன், அமுதம் போன்றவன், இன்பமே வடிவானவன்' என்று இனிக்க இனிக்க பேசுவாய். அப்படிப்பட்ட நீ, நாங்கள் இத்தனைமுறை அழைத்தும் உறங்கிக் கொண்டிருக்கிறாய். வந்து கதவை திறந்து விடு!

    நீங்கள் எல்லாம் இறைவனுடைய பழைய அடியார்கள். இறைவன் அருகில் இருப்பவர்கள். அதிக பற்றுடையவர்கள். அவன் பால் உரிமை உடைய நீங்கள் என்னுடைய தவறை பெரிதுபடுத்தாமல் மன்னித்து ஏற்றால் இழுக்கு ஆகுமா? நீ இறைவனுடன் பற்றும், அன்பும் கொண்டவள் என்று எல்லோரும் அறிவோம்.

    அழகான இதயத்தை உடையவர்கள் சிவபெருமானை நினைத்து பாடாமல் இருக்க மாட்டார்கள்!. உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இதுவும் தேவைதான்.

    • பாவை நோன்புக்கென செய்யக்கூடிய விதிமுறைகளைக் கேளுங்கள்.
    • இறைவனின் மலர் பாதங்கள் அவர்களின் கண்களை கூசச்செய்கிறது.

    திருப்பாவை

    பாடல்

    வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்

    செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

    பையத் துயின்ற பரமன் அடிபாடி,

    நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி

    மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;

    செய்யா தனசெய்யோம்;

    தீக்குறளைச் சென்றோதோம்;

    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

    உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    இந்த பூமியில் பிறந்து வாழ்பவர்களே! மார்கழி மாத பாவை நோன்புக்கென செய்யக்கூடிய விதிமுறைகளைக் கேளுங்கள்.

    திருப்பாற்கடலில் பாம்பணையில் துயில்கின்ற பரந்தாமனின் திருவடியை அன்புடன் பாட வேண்டும். நெய், பால் ஆகியவற்றை உண்ணக்கூடாது. அதிகாலையில் எழுந்து நீராடி, கண்ணுக்கு மை தீட்டாமல், கூந்தலில் பூ சூடிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பிற ரைப்பற்றி கோள் சொல்லக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யக்கூடாது. செய்யத்தகாத காரியங்களையும் செய்யக்கூடாது.

    யோகிகளுக்கும், தவசிகளுக்கும் நாமாக சென்று தர்மம் செய்ய வேண்டும். பிறருக்கு கொடுக்கும் போது செருக்கு இல்லாமலும், வெறுப்பு இல்லாமலும், பரமன் அடிபணிந்து செய்ய வேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்

    பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்

    பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே

    நேசமும் வைத்தனையோ நேரிழையாய்

    நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

    ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

    கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

    தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

    ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    சிறந்த அணிகலன்களை அணிந்திருக்கும் பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போது, யாவும் கடந்து நிற்கின்ற ஒளிவடி வான இறைவன் மீது பாசம் வைத்திருப்பதாகச் சொல்வாய். அதே அன்பை இந்த மலர் படுக்கையின் மீது எப்போது வைத்தாய். பெண்களே!

    நீங்கள் கேலியாக பேசி விளையாடுவதற்கு இது ஏற்ற இடம் அல்ல. தேவர்கள் சிவபெருமானை வாழ்த்துவதும், வணங்குவதுமாக உள்ளனர். இறைவனின் மலர் பாதங்கள் அவர்களின் கண்களை கூசச்செய்கிறது. ஒளிமயமான ஈசன் தனது திருவடிகளை இம்மண்ணில் படும்படி அருள்புரிய வந்துள்ளார். சிவலோகத்தில் வீற்றிருக்கும் அவர், தில்லை சிதம்பரத்தில் நம்மைக் காக்க எழுந்தருளியுள்ளார். நாம் சென்று வழிபடுவோம்.

    • விநாயகருக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர்.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை : 

    உடுமலை கோவில்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.உடுமலை குட்டை திடல் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்து வருகின்றன.அங்குள்ள விநாயகருக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ×