search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன அழுத்தத்தை விரட்டும் உணவுகள்"

    • மன அழுத்தம் வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கிறது.
    • மன நலனை சீராக பராமரிப்பதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு.

    இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்கு ஆளாக்குகிறது. சில உணவு வகைகளை அன்றாடம் உட்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு வித்திடும் அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம். ஏனெனில் மன நலனை சீராக பராமரிப்பதில் உண்ணும் உணவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.

    வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை மன அழுத்தம் ஆட்கொள்ள வாய்ப்பிருக்கிறது. மனநிலையிலும் அதன் தாக்கம் வெளிப்படும். மனம் தெளிவின்றி தடுமாறிக்கொண்டிருக்கும். காளான், முட்டை, சோயா பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களை பெற முடியும்.

     கார்போஹைட்ரேட் கலந்த உணவு வகைகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். நரம்புத் தளர்ச்சி, கவலை, தூக்கமின்மை போன்றவற்றிற்கு கார்போஹைட்ரேட் குறைபாடு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இவை மன அழுத்தத்துடனும் தொடர்புடையவை. முழு தானியங்கள், புழுங்கல் அரிசி போன்றவைகளில் கார்போஹைட்ரேட் அதிகம் நிரம்பி இருக்கும். அவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பீன்ஸ், சோயா, இறைச்சி வகைகள், பருப்பு வகைகள், பன்னீர் போன்ற புரதச்சத்து மிகுந்த உணவுகளையும் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை மூளைக்கும், மன நலனுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியவை. மன நலனை மேம்படுத்துவதில் செர்ரி பழ வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. திராட்சை, பெர்ரி பழங்களையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

     ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு வகைகள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், மனச்சோர்வு அறிகுறிகளை குறைக்கவும் உதவும். அதனால் அதனோடு தொடர்புடைய மீன் வகைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

    மதிய உணவில் வெண்ணெய் சேர்த்து கொள்வதும் சிறப்பானது. அதில் உள்ளடங்கி இருக்கும் நல்ல கொழுப்பு, மூளை சீராக செயல்பட துணைபுரியும். காளான்களும் மன நலனுக்கு நன்மை சேர்ப்பவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்.

    நல்ல மனநிலைக்கு வித்திடும் உணவு பட்டியலில் வெங்காயம் இடம்பிடித்திருக்கிறது. வெங்காயத்தையும், இஞ்சியையும் சமையலில் சேர்ப்பது புற்றுநோயில் இருந்து காக்கவும் உதவும்.

    தக்காளி பழத்தில் போலிக் அமிலம் மற்றும் ஆல்பா- லிபோயிக் அமிலம் அதிகம் உள்ளது. இவை இரண்டும் மனச்சோர்வுக்கு எதிராக போராடும் வல்லமை படைத்தவை. அதனால் தினமும் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பீன்ஸ் இதயத்திற்கும், மனநலனுக்கும் நன்மை சேர்க்கும். அதுவும் தவறாமல் உணவில் இடம்பெற வேண்டும்.

    ×