search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகர சங்கராந்தி"

    • ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது.
    • நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றதாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது. மொத்தம் 20 டன் எடை உடையது. இந்த நந்தியெம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி மாட்டுப் பொங்கலான இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு காலையில் நந்தியெம் பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை உள்பட பல வகையான பழங்களாலும், பால்கோவா உள்பட இனிப்புகளாலும், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியெபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள், பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ-பூஜை நடந்தது.

    பின்னர் நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

    • பொங்கல் விழாவை பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி, இரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
    • கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் காலங்காலமாக செய்யப்படும் சம்பிரதாயம் ஆகும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பொங்கல் திருநாள் மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இந்த நிலையில் நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் மாடு வளர்ப்பவர்கள் மாட்டுப்பொங்கல் அன்று விசேஷமாக மாடுகளை கவுரவிக்கும் வகையில் பூஜை செய்து, மாலை அணிவித்து, சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் கிராமத்து பொங்கலை நகருக்குள் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய பெங்களூரு நகரின் மகாலட்சுமி லேஅவுட் அருகே உள்ள நந்தினி படாவனே பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படும் பொங்கல் விழாவை பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி, இரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    இறுதியில் கிராமப்புறங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாடுகளை வரவழைத்து இருந்தனர்.

    அந்த மாடுகளை சாலையின் குறுக்கே வைக்கோல் புல் போட்டு, வைக்கோல் புல் பற்றவைக்கப்பட்டு, தீயில் வரிசையாக ஒவ்வொரு மாடுகளாக ஓட வைத்தனர்.

    இது கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் காலங்காலமாக செய்யப்படும் சம்பிரதாயம் ஆகும். இதனை நகருக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் அதிகமான மாடுகளை வரவழைத்து அந்த மாடுகளை தீயில் ஓட வைத்து கொண்டாடியது இந்த பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்தது.

    இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வியப்புடன், ஆச்சரியதுடன் கண்டு ரசித்தனர்.

    • இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மக்கள் கோயிலுக்கு வருகை தந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கட்டாக்:

    ஒடிசாவின் கட்டாக் மாவட்டம் படம்பாவில் உள்ள சிங்கநாத் கோவிலில், மகர சங்கராந்தியை கொண்டாடுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆற்றின் மறு கரையில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்வதற்கு படகு வசதி இல்லாததால், கோவிலை இணைக்கும் கோபிநாத்பூர்-படம்பா டி பாலத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    இதில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார். சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்ததுடன், இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.

    கொரோனா தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மக்கள் கோயிலுக்கு வருகை தந்ததால் கூட்டம் அதிகமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×