search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி கணக்கு"

    • வாசுதேவன் தன் மனைவி பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி அதில் ஆபாசபடங்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளார்.
    • மனைவியின் சகோதரி பெயரிலும் போலியான கணக்கு தொடங்கி தவறான தகவல்கள் பதிவிட்டு வந்துள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் வாசுதேவன். இவருக்கும் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் வாசுதேவன் தன் மனைவி பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி அதில் ஆபாசபடங்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளார். அதேபோல் அவரது மனைவியின் சகோதரி பெயரிலும் போலியான கணக்கு தொடங்கி தவறான தகவல்கள் பதிவிட்டு வந்துள்ளார்.

    மேலும் வாசுதேவன் தனது மாமனாரிடம், அவரது 2 மகள்களும் பேஸ்புக்கில் ஆபாசமாக கருத்துக்கள் பதிவிடுவதாக அனைவருக்கும் கூறி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மனைவி பெயரில் போலியான கணக்கு தொடங்கி ஆபாசபடம் மற்றும் தவறான தகவல்கள் வெளியிட்டதாக வாசுதேவன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து சைபர்கிரைம் போலீசாருக்கு தெரியப்படுத்தி, மேற்கொண்டு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

    • மர்மபெண் ஒருவர், பெண்ணின் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய போலி கணக்கு தொடங்கினார்.
    • சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    அவர் சமூக அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருகிறார். அப்பெண் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வருகிறார்.

    அந்த சமூக வலைதளங்களில் அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் பதிவிட்டுள்ளார்.

    இதற்கிடையே மர்மபெண் ஒருவர், அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய போலி கணக்கு தொடங்கினார்.

    அந்த கணக்கில் தன்னுடன் உல்லாசமாக இருக்கலாம் போன்ற பதிவும் இடம் பெற்றிருந்தது. அதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.

    மேலும் அவரது புகைப்படங்களை வைத்து தொடங்கப்பட்டுள்ள போலி கணக்குகளை முடக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வடசென்னை பாராளுமன்ற உறுப்பினராக டாக்டர் கலாநிதி வீராசாமி பணியாற்றி வருகிறார்.
    • கலாநிதி வீராசாமி தனது பெயரில் இதுபோன்ற இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லை என்பதால் யாரும் பணம் அனுப்பாதீர்கள் என தெரிவித்தார்.

    சென்னை:

    வடசென்னை பாராளுமன்ற உறுப்பினராக டாக்டர் கலாநிதி வீராசாமி பணியாற்றி வருகிறார். அண்மையில் இன்ஸ்டாகிராமில் இவரது பெயரில் போலி கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டாக்டர் கலாநிதி வீராசாமி படமும் அதில் வைக்கப்பட்டுள்ளது. அதை உண்மை என நம்பிய சிலர் அந்த கணக்கில் இணைந்துள்ளனர்.

    திடீரென அந்த போலி கணக்கை ஆரம்பித்த மர்ம நபர் தனக்கு வங்கியில் சர்வர் பிராப்ளம் இருப்பதால் அவசரமாக பணம் தேவைப்படுவதாக குறுஞ்செய்தி அனுப்பி கூகுள் பே நம்பரை அனுப்பியுள்ளார். பலருக்கு இதுபோல் பணம் கேட்டு தகவல் அனுப்பி உள்ளார். இதுகுறித்து தெரிய வந்ததும், கலாநிதி வீராசாமி தனது பெயரில் இதுபோன்ற இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லை என்பதால் யாரும் பணம் அனுப்பாதீர்கள் என தெரிவித்தார்.

    ஆனால் தொடர்ந்து போலி இன்ஸ்டாகிராம் கணக்கு இயங்குவதால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×