search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் கிரைம் போலீஸ்"

    • குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
    • கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இதில் புதுச்சேரியில் என்ஜினீயர், டாக்டர் என நன்கு படித்தவர்கள் தான் அதிகம் ஏமாந்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் புதுச்சேரியில் 10 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் ரூ.8.25 லட்சத்தை இழந்துள்ளனர். வில்லியனுார் பெண் ஒருவர், குறைந்த விலையில் துணிகள் கிடைக்கும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 6 ஆயிரத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.

    இன்ஸ்டாகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி அரியாங்குப்பம் பெண் ரூ. 90 ஆயிரத்தையும், முதலியார்பேட்டை பெண் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

    வேலை தேடி ஆன்லைனில் பதிவு செய்திருந்த சின்ன காலாப்பட்டு வாலிபரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஸ்பைஸ் ஜெட் மனிதவள மேம்பாட்டு அதிகாரி பேசுவதாக கூறி வேலை உறுதியாகி விட்டது. சில கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளார்.

    குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

    சாரத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், கே.ஓய்.சி.யை அப்டேட் செய்வதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.7,500 அபேஸ் செய்து உள்ளார்.

    லாஸ்பேட்டை வாலிபருக்கு, கிரெடிட் கார்டு வந்துள்ளதாக வந்த லிங்க்கை ஓபன் செய்து வங்கி தகவலை பதிவிட்ட அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 24 ஆயிரம் அபேஸ் ஆனது. காமராஜர் சாலையைச் சேர்ந்த பெண்ணிடம், மர்மநபர் கூரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், டெலிவரி ஆகாத பொருள் குறித்து அறிய அவர் அனுப்பிய மொபைல் அப்ளிக்கேஷன் இன்ஸ்டால் செய்து, தகவல் பதிவிட்டதும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.19 ஆயிரம் திருடப்பட்டது.

    வி.மணவெளியை சேர்ந்தவர் வாட்ஸ்அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து, தாய்லாந்து சுற்றுலா செல்ல தொடர்பு கொண்டுள்ளார். விமான டிக்கெட், ரூம் புக்கிங் செய்ய ரூ. 3 லட்சம் வங்கி கணக்கில் செலுத்திய பின்பு மர்மநபர் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

    இதேபோன்று, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    இதுதொடர்பான புகார்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • போலி லிங்குகளை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாரமங்கலத்துப் பட்டியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர், இவருக்கு கடந்த 12-ந்தேதி டெலிகிராம் மூலம் மர்ம நபர் அறிமுகமாகி பேசினார்.

    அப்போது அவர் அனுப்பும் செயலியை பதிவிறக்கி விவரங்களை பூர்த்தி செய்தால் இரட்டிப்பு பணம் பெறலாம் என தெரிவித்தார். இதனை நம்பிய அந்த வாலிபர் தனது விவரங்களை தெரிவித்து ரூ.39.38 லட்சத்தை மர்ம நபர் பதிவிட்டு வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்தார்.

    பணம் சென்றடைந்ததும் மர்ம நபரின் டெலிகிராம் வெப்சைட் லிங்க் அனைத்தும் முடக்கப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் குஜராத், அசாம் மாநிலங்களை சேர்ந்த மோசடி கும்பல்களின் வங்கி கணக்குகளுக்கு பணம் சென்றடைந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது போல போலி லிங்குகளை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுச்சேரியை சேர்ந்த ஜான்பால் என்பவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை இழந்துள்ளார்.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவையில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆன்லைன் மூலம் பணத்தை இழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்டாக கருதாமல் தொடர்ந்து ஆன்லைன் மோசடியில் சிக்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி கனகசெட்டி குளம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 34). இவர் நேருவீதியில் கடை வைத்துள்ளார். இவருடைய செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. எதிர் முனையில் சாட்டிங் செய்த நபர் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் பிட்காயின் விலை தற்போது மிகவும் குறைந்துள்ளது. எனவே பிட்காயின் வாங்குவதற்கு தற்போது சரியான தருணம், அதில் முதலீடு செய்தால் பல மடங்கு சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை நம்பிய ஹரிகிருஷ்ணன், செல்போனில் வந்த வங்கி கணக்கிற்கு ஒரே தவணையில் ரூ.21 லட்சம் அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு பிட்காயின் எதுவும் வரவில்லை.

    இதையடுத்து, தனக்கு செல்போனில் குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஹரிகிருஷ்ணன் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராமதாஸ் (42) என்பவர் பிட்காயின் வாங்குவதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை .

    இதுபோல் புதுச்சேரியை சேர்ந்த ஜான்பால் என்பவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை இழந்துள்ளார்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவையில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
    • பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கிளப் அவுஸ் என்ற டேட்டிங்கை பயன்படுத்தி வந்தார். இதன்மூலம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் திலீப் குமார் என்பவர் பழக்கமானார்.

    இது நாளடைவில் காதலாக மாறியது. திலீப் குமாரின் வற்புறுத்தலுக்கு இணங்க அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினார். நாளடைவில் தீலிப்குமாரின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் பழகு வதை நிறுத்திக்கொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த திலீப்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை தேடி வந்தனர். வேலைக்காக துபாய் சென்றிருந்த திலீப்குமாரை இந்தியாவுக்கு வரவழைத்து அவரை கைது செய்தனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 8 மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் புகார் கொடுத்த பெண்ணிற்கு தெரிந்தவராகவோ அல்லது முன்னாள் காதலர், உறவினராகவோ இருக்கின்றனர்.

    எனவே குறிப்பாக பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்.

    மேலும் ஆண் நண்பர்களோ காதலர்கள் அல்லது உங்களுக்கு பழக்கப்பட்டவர்களோ அவர்கள் கேட்பதற்கு இணங்க வீடியோ காலில் பேச வேண்டாம்.

    பெண்களை மிரட்ட பயன்படுத்தப்படுகின்ற புகைப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்களாகவே எடுக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட புகைப்படங்களாக தான் உள்ளது.

    எனவே பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
    • மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் பேஸ்புக் கணக்கில் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் ஒருவர், தான் வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தான் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளேன்.

    எனவே எனது சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு தாங்கள் உதவ வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் உதவிக் கேட்டுள்ளார்.

    இதனை உண்மை என நம்பி அவரும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு பேஸ்புக் மூலம் தலைமை ஆசிரியருக்கு நட்பு ஏற்பட்டது.

    மேலும் பார்சலில் பணம் அனுப்பி வைப்பதாக தெரிவித்து இந்திய தூதரகம், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பேசுவதாகவும் பார்சலை பெற வரி செலுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் 13 தவணைகளாக ரூ.43 லட்சத்து 90 ஆயிரத்தை அந்த பெண் பெற்றுக்கொண்டார்.

    அதன் பின் வெளிநாட்டில் இருந்து பேசிய பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பணப்பார்சலும் வரவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபோல் புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் பிரியா. இவரின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் உங்களுடைய வங்கி கணக்குகளில் தொகை அதிகம் உள்ளது. அதற்கான காரணத்தை சொல்லாவிட்டால் உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன பிரியா அவர்கள் கூறிய வங்கிகணக்கில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அனுப்பினார். பின்னர் விசாரித்த போதுதான் ஏமாற்றப்பட்டதை பிரியா உணர்ந்தார்.

    இதுகுறித்து இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் கூறினர்.

    மேலும் புதுவையை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 90 ஆயிரமும், மூலக் குளத்தை சேர்ந்த சத்தியா என்பவரிடம் ரூ.3 லட்சத்து 19 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த சங்கர் என்பவரிடம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், பான் கார்டு அப்டேட் செய்வதாக கூறி 5 பேரிடம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரமும், ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை உள்ளது என்ற விளம்பரத்தை நம்பி 2 பேரிடம் ரூ.85 ஆயிரமும் மோசடி நடந்துள்ளது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் புதுச்சேரியில் 12 பேரிடம் ஆன்லைனில் பல்வேறு வகையான நூதன முறையில் ரூ.60 லட்சம் மோசடி நடந்துள்ளது.

    இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைத்து மோசடி செய்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை முகப்பேரை சேர்ந்த ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் பகுதி நேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பின்னர் டெலிகிராம் மூலம் மோசடி நபர் தொடர்பு கொண்டதாகவும் அதனை நம்பி அவர்கள் கொடுத்த இரண்டு வங்கி கணக்குகளுக்கு ரூ.18 லட்சத்து 23 ஆயிரம் வரையிலான பணத்தை டெபாசிட் செய்ததாகவும் கூறினார்.

    ஆனால் தான், செலுத்திய தொகை ஏதும் தனக்கு திரும்ப வரவில்லை என்றும் புகார் அளித்திருந்தார்.

    இதையடுத்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புகார்தாரர் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள் முகவரிகள் மற்றும் அடையாள விவரங்கள் போன்றவைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மோசடி வங்கி கணக்கில் இருந்து செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. விசாரணையில் குற்றவாளிகள் சென்னை ஐ.சி.எப்.-ல் இருந்து இந்த குற்றத்திற்காக வங்கி கணக்குகள் தொடங்கி அதனை வெளிநாட்டில் இருக்கும் மோசடிகாரர்களிடம் கொடுத்து மக்களை ஏமாற்றியது தெரியவந்தது.

    இது தொடர்பாக டார்லா பிரவீன்குமார், சண்டீபன், ராஜூ, அசோக்குமார், வீரராகவன், பிரவீன்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போலியாக ஒரு வங்கி கணக்கு தொடங்க முதலில் ரூ.50 ஆயிரம் பெறப்பட்டதாகவும் பிரதி மாதம் ரூ.30 ஆயிரம் வரை பெற்றதாக டார்லா பிரவீன்குமார் தெரிவித்ததன் பேரில் அதற்கு உதவிய அசோக் குமார் மற்றும் ராஜூ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அசோக்குமார் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் பேரில் வீரராகவன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்ற செயலுக்காக பயன் படுத்தப்பட்ட 7 செல்போன் கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

    இவர்களின் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் முடக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட எதிரிகள் ஏற்கனவே மும்பை, இஸ்லாபூர் காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

    ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஈர்க்கப்படுகிறார்கள்.

    மேலும் அவர்கள் டெலிகிராமில் ஒரு குரூப்பில் இணைக்கப்பட்டு யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்வது, ஓட்டல்களுக்கு ரிவியூ எழுதுவது அல்லது கிரிப்ட்டோ கரன்சியில் டிரேடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆரம்பத்தில் ரூ.150 முதல் ரூ.1000 வரை லாபம் பெற்றுள்ளனர்.

    பின்னர் அவர்களை டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைத்து மோசடி செய்து உள்ளனர். இதுவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்டவர்களை மோசடிக் கும்பல் ஏமாற்றியிருப்பது தெரியவந்து உள்ளது.

    எனவே ஆன்லைனில் பகுதி நேர வேலை தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1930 என்ற ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணைய தளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

    • லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார்.
    • பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர்.

    இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 274 செலுத்தினார். அதன்பின் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோல லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார். அவருக்கு பணம் திரும்பி வரவில்லை.

    வாணரப்பேட்டையை சேர்ந்த பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார். நெல்லித்தோப்பு ரமேஷ் ஆன்லைன் வீடியோவை பார்த்து லைக் செய்தால் பணம் கிடைக்கும் என கூறியதை நம்பி ரூ.1.3/4 லட்சம் செலுத்தி ஏமாந்தார்.

    ஏனாம் பிராந்தியம் தீபக்குமார் ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தையை நம்பி ரூ.2 ¾ லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். முத்தியால்பேட்டை பிரபாகரன் பான்கார்டு புதுப்பித்தல் என நம்பி வங்கி தகவலை தெரிவித்ததால் ரூ.24 ஆயிரத்து 986 இழந்தார்.

    இவர்கள் உட்பட கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவை முழுவதும் 19 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர புதுவை நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என நம்பி ரூ.5.72 லட்சம் முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்டேர் ரூ.2 கோடி வரை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது.
    • www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

    சென்னை:

    ஏ.ஐ. என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

    இதன் மூலமாக மனிதர்களை போன்று மாற்று உருவத்தை உருவாக்க முடியும் என்பதை பயன்படுத்தி போலியான நபர்களை உருவாக்கி திடுக்கிட வைக்கும் துணிகர மோசடி அரங்கேற தொடங்கி இருப்பதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    டீப்பேக் தொழில்நுட்பம், உண்மையான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்களைப் போன்று போலியான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்கள் உருவாக்க உபயோகிக்கப்படுவதால் பல்வேறு வகையான மோசடிகளைச் செய்வதற்கு வழி வகுக்கிறது.

    ஆரம்பத்தில், இந்தத் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் திரைப்படத் தயாரிப்பாளர்களால் தடையின்றி நடிகர்களை காட்சிகளில் ஒருங்கிணைக்கவும் அல்லது வரலாற்று நபர்களைப் போல சித்தரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், குற்றவாளிகள் இந்த சக்தியைப் தவறாகப் பயன்படுத்த முற்படுகிறார்கள்.

    செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அழைப்பு மோசடியானது அரங்கேற தொடங்கி உள்ளது.

    மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற நம்பகமான நபர்களின் திருடப்பட்ட படங்கள் அல்லது ஆன்லைனில் கிடைக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அவர்களைப் போல் ஒரு போலி கணக்கை உருவாக்குகின்றனர்.

    செயற்கை நுண்ணறிவு மூலம் டீப் பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் அல்லது பிற ஆன்லைன் தளங்களில் உருவாக்கி பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து அவர்களை ஏமாற்றுகிறார்கள். பின்னர், பாதிக்கப்பட்டவரிடம் அவசர உணர்வை உண்டாக்கி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு கூறுகின்றனர்.

    ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது. வீடியோவை கையாளுதலுடன் கூடுதலாக, மோசடி செய்பவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரல் தொகுப்பைப் பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் குரலைப் பிரதிபலிக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு வீடியோ அழைப்பு மோசடிகளை எவ்வாறு தடுப்பது என சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் குமார் கூறியதாவது:-

    தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

    நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக பணியாளர் எனக் கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து வீடியோ அழைப்பைப் பெறும்போது, பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் அவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க அவர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவும்.

    ஆன்லைனில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் உங்கள் தகவலுக்கான அணுகலைக் கட்டுப் படுத்த சமூக ஊடகத்தளங்களில் உள்ள தனியுரிமை அமைப்புகளைச் சரிசெய்யவும்.

    அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, பல காரணி அங்கீகாரம் மற்றும் பிற அடையாளச் சரிபார்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும்.

    நீங்கள் இது போன்ற வீடியோ கால் மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றவும்.

    சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

    மோசடி நடந்த தளத்தை தொடர்பு கொண்டு மோசடி செய்தவரின் சுயவிவரத் தகவல் மற்றும் நீங்கள் சேகரித்த ஆதாரங்கள் உட்பட அனைத்து தொடர்புடைய விவரங்க ளையும் அவர்களிடம் வழங்கவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கேரள மாநிலத்தில் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாகவும் அதன் காரணமாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ​​15 பேர் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்க ஒரு குழுவும், பின்தொடர்வதற்காக மற்றொரு குழுவும் உள்ளது.
    • கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 80,148 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 46 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் உள்ளது. 1930 ஹெல்லைன் நம்பர் மூலம் பெறப்படும் அழைப்புகள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சைபர் கிரைமில் தற்போது கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் சஞ்சய்குமார் கூறியிருப்பதாவது:-

    சைபர் கிரைமில் நெட்வொர்க் கட்டமைப்பை மேம்படுத்தவும், சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் மற்றும் மாநிலத்துக்கு தேவையான அதிநவீன மென்பொருள் கருவிகளை வாங்க ரூ.28.97 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

    இதில் அதிவேக தடயவியல் இமேஜிங் சாதனம், ஆல் இன் ஒன் போர்ட்டபிள் ரைட் பிளாக்கர், போர்ட்டபிள் டேட்டா பிரித்தெடுக்கும் அமைப்பு, தடயவியல் மென்பொருள், டிஜிட்டல் தடயவியல் மென்பொருள் மற்றும் சாதன தரவு பிரித்தெடுத்தல் மென்பொருள் ஆகியவை அடங்கும்.

    இந்தக் கருவிகள் ஐ.பி. முகவரி அல்லது அரசு அல்லது தனிநபருக்கு எதிரான எந்தவொரு தவறான சமூக ஊடகங்களிலும் அல்லது சந்தேகத்திற்குரிய நபரின் ஆப் செய்யப்பட்ட செல்போனிலும் பயன்படுத்தப்படலாம்.

    இது சம்பந்தமாக 16 கருவிகள் வாங்கப்படுகிறது. மேலும் சைபர் குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடிக்க அனைத்து சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களுக்கும் குறைந்தது 3 கருவிகள் வாங்கப்படுகிறது.

    சைபர் கிரைம் போலீசார் பல முறை உதவிக்காக தனியார் தரப்பினரையோ அல்லது பிற மாநிலங்களையோ அணுக வேண்டியிருந்தது. சந்தேகத்திற்குரிய நபரை சமூக ஊடகங்களில் பதிவு செய்ய தனியார் ஏஜென்சிகள் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை கேட்கின்றனர் என்றார்.

    மேலும் சைபர் கிரைம் பிரிவின் தொழில்நுட்ப ஆலோசகர் எம்.எஸ்.குமார் கூறியதாவது:-

    சைபர் குற்றங்களை கண்டறிய இந்த நவீன கருவிகள் பயன்படுத்தப்படும். உதாரணமாக, குற்றம் நடந்த இடத்திலிருந்து ஒரு சாதனத்தை மீட்டெடுத்தால், செல்போன் தடயவியல் கருவி சேமிப்பகத்திலும் வாட்ஸ்அப் அரட்டையிலும் உள்ளதைக் கண்டறிய மொபைல் சாதனத்திற்குள் செல்ல உதவும்.

    நாங்கள் முழு தகவலையும் பெறலாம் மற்றவர்களுக்கு அனுப்பியிருந்த தகவல்களையும் ஏற்கனவே அனுப்பியிருந்த தகவல்களை அழித்திருந்தாலும் நாங்கள் அதனை இந்த கருவிகள் மூலம் மீட்டெடுக்க முடியும்.

    குற்றவாளியை முடிவு செய்வதற்கு முன்பு நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக கண்டறிந்து அவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும்.

    இப்போது 15 பேர் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்க ஒரு குழுவும், பின்தொடர்வதற்காக மற்றொரு குழுவும் உள்ளது.

    ஒரு நாளைக்கு எத்தனை அழைப்புகள் பெறப்பட்டன மற்றும் கையாளப்பட்டன என்பது குறித்த அறிக்கையை உருவாக்க ஒரு குழு இருக்கும்.

    கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 80,148 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ரூ.30.91 கோடி மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.158.03 கோடி வரை முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • மர்மபெண் ஒருவர், பெண்ணின் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய போலி கணக்கு தொடங்கினார்.
    • சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    அவர் சமூக அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருகிறார். அப்பெண் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வருகிறார்.

    அந்த சமூக வலைதளங்களில் அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் பதிவிட்டுள்ளார்.

    இதற்கிடையே மர்மபெண் ஒருவர், அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய போலி கணக்கு தொடங்கினார்.

    அந்த கணக்கில் தன்னுடன் உல்லாசமாக இருக்கலாம் போன்ற பதிவும் இடம் பெற்றிருந்தது. அதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.

    மேலும் அவரது புகைப்படங்களை வைத்து தொடங்கப்பட்டுள்ள போலி கணக்குகளை முடக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பறிக்கப்படும் பணத்தை மீட்டு கொடுக்க சைபர் கிரைம் போலீஸ்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • பாதிக்கப்படுபவர்கள் 1930 எண்ணில் உடனடியாக புகார் அளிக்கலாம்.

    சென்னை:

    ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பறிக்கப்படும் பணத்தை மீட்டு கொடுக்க சைபர் கிரைம் போலீஸ்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    விருதுநகரை சேர்ந்த முதியவர் பழனிசாமி என்பவரின் ரூ.10 லட்சம் பணத்தை சென்னை தலைமை சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர்.

    இதற்காக சூப்பிரண்டு தேவராணி டி.எஸ்.பி. தாமஸ், மற்றும் உதவி ஆய்வாளர்கள், பால்வண்ணநாதன், கோபிராஜா ஆகியோரை, பழனிசாமி பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். இதுபோன்று பாதிக்கப்படுபவர்கள் 1930 எண்ணில் உடனடியாக புகார் அளிக்கலாம்.

    • பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
    • பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று கூறியுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரம் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் கிஷோர் (40) திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலதிபரான கிஷோருக்கு பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் சில நாட்களாக கிஷோருடன் பேஸ்புக்கில் எஸ்எம்எஸ் மூலம் பேச்சு கொடுத்து வந்தார். இதன்மூலம் கிஷோரும், அந்த லண்டனை சேர்ந்த நபரும் நல்ல நண்பர்களாகியுள்ளனர்.

    இந்நிலையில், லண்டனை சேர்ந்த நபர் கிஷோருக்கு, லண்டன் நாட்டின் டாலர் மற்றும் நகைகளை பரிசாக அளிக்கிறேன் என்றும், அதனை பார்சல் மூலம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய கிஷோர், லண்டனில் இருந்து பரிசு வரும் என நம்பி காத்திருந்தார். தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் கிஷோரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் டெல்லி விமான நிலையத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். தொடர்ந்து அந்த நபர், கிஷோரிடம் தங்களுக்கு வந்துள்ள பார்சல் சட்ட விரோதமானது எனவும், இந்த பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், இதனை பாதுகாப்பாக பெற பல லட்சம் பணத்தை செலவழிக்க வேண்டும் என கூறிகிஷோரிடம் கடந்த 2 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ரூ.16 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால், இதுவரை கிஷோருக்கு பார்சல் வந்து சேரவில்லை. இதனால் ஒருகட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், இது குறித்து கிஷோர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மேலும், உண்மையில் அந்த நபர்கள் லண்டன், டெல்லியில் உள்ளனரா? அல்லது உள்ளூரில் இருந்து கொண்டு போலியாக சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி மோசடி செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    ×