search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேசபிரபு தாக்குதல்"

    • கைதான 2பேரையும் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது திடீரென அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் பிடிக்க முயன்ற போது, தப்பியோடிய சரவணன், பிரவீன் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபுவை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, அரிவாளால் வெட்டிய திருப்பூரை சேர்ந்த சரவணன் (வயது 23), ஈரோட்டை சேர்ந்த பிரவீன் ( 27) ஆகியோரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் கைதான 2பேரையும் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது திடீரென அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது, தப்பியோடிய சரவணன், பிரவீன் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் 2 பேரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதையடுத்து இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 பேர் கொண்ட மர்மநபர்கள் தாக்கியதில் நேசபிரபு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
    • செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நேசபிரபு என்பவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு 5 பேர் கொண்ட மர்மநபர்கள் தாக்கியதில் நேசபிரபு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    நேசபிரபு மர்மநபர்கள் பின்தொடர்ந்து வருவதும், தாக்குவது குறித்தும் காவல்துறையின் அவசர எண்ணை தொடர்பு கொண்டு கூறியபோது காவல்துறை அதிகாரி அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டது தொடர்பாக 4 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பிரவீன் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது.
    • தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு, நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

    ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஆணையிடுகிறேன்.

    மேலும் இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள நேச பிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    • எனது வாழ்க்கை முடிந்தது, என்னை வெட்டுகிறார்கள் சார் என்று காவல்துறை அதிகாரியிடம் நேசபிரபு தெரிவித்துள்ளார்.
    • சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசபிரபு. இவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்றிரவு நேசபிரபு மர்மநபர்கள் சிலர் தன்னை பின் தொடர்வதாக காவல்துறையின் அவசர எண்ணை (100) தொடர்பு கொண்டு காவல்துறை அதிகாரியிடம் பாதுகாப்பு கேட்டுக்கொண்டு இருந்த போதே நேசபிரபுவை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது எனது வாழ்க்கை முடிந்தது, என்னை வெட்டுகிறார்கள் சார் என்று காவல்துறை அதிகாரியிடம் நேசபிரபு தெரிவித்துள்ளார். இதற்கு அந்த காவல்துறை அதிகாரி அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பலத்த காயம் அடைந்த நேசபிரபு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் மீதும், அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் நலச்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. மேலும் இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    நேசபிரபு மர்மநபர்களால் தாக்கப்படும் போது காவல்துறை அதிகாரியிடம் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதனிடையே, செய்தியாளர் நேசபிரபு தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×