search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கை நூலிழை ஆடை"

    • பின்னலாடைத் தொழில் ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளியில் ஏராளமான சோதனையை சந்திக்கிறது.
    • கடந்த நிதியாண்டில் திருப்பூரில் இருந்து 36 ஆயிரத்து 419 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.

    திருப்பூர் :

    பின்னலாடைத் தொழில் ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளியில் ஏராளமான சோதனையை சந்திக்கிறது. எவ்வளவு தான் நெருக்கடி எழுந்தாலும் விடாமுயற்சியில் இறங்கும் தொழில்துறையினர் சவால்களை முறியடித்து வெற்றி மகுடம் சூட்டிக்கொள்கின்றனர். 'சி-பாரம்' பிரச்சினையில் துவங்கி, கடந்த ஆண்டு தொழிலை புரட்டிப்போட்ட நூல் விலை உயர்வு வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், பின்னலாடை உற்பத்தியாளர்களும் தீர்வு கண்டுவிடுகின்றனர்.

    கொரோனாவுக்கு பின் வளர்ச்சிப்பாதையில் வேகமாக பயணித்த பனியன் தொழிலுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது நூல் விலை உயர்வு மட்டுமல்ல, ரஷ்யா - உக்ரைன் போர் சூழலும்தான். அப்படியிருந்தும் கடந்த நிதியாண்டில் திருப்பூரில் இருந்து 36 ஆயிரத்து 419 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது :- இறக்குமதி நாடுகளில் இயல்புநிலை திரும்பி வருவதால் சிறு, குறு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும்.விரைவில் நிலை மாறும். செயற்கை நூலிழை ஆடை உற்பத்திக்கு திருப்பூர் முழு அளவில் தயாராகிவருகிறது. முதல்கட்டமாக செயற்கை நூலிழை துணி உற்பத்தி மற்றும் சாயமிடுவதில் சோதனை முறை வெற்றியடைந்துள்ளது.

    இந்தாண்டில் மட்டும் 100 நிட்டிங் எந்திரங்கள், பாலியஸ்டர் பின்னலாடை துணி உற்பத்தியை துவக்கியுள்ளன. சாய ஆலைகளும் பாலியஸ்டர் துணிக்கு சாயமிட்டு வெற்றி கண்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் இத்தகைய புதிய முயற்சி துவங்கியுள்ளது.ஆடை உற்பத்தியில் பெரிய மாற்றம் தேவையில்லை. வழக்கமாக பயன்படுத்தும் தையல் மெஷின்களில், ஊசிகளை மட்டும் சரிசெய்தால் பாலியஸ்டர் பின்னலாடைகளை உற்பத்தி செய்யலாம். நிட்டிங் , டையிங் பிரிவில் வெற்றிகரமாக பாலியஸ்டர் துணியை தயார் செய்து வருகிறோம். திருப்பூரை பொறுத்தவரை செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி பாதையில் நகர துவங்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் வேகமெடுக்க வாய்ப்புள்ளது. தற்போதைய மந்தநிலையும் சில மாதங்களில் மாறிவிடும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • நூலிழை ஆடை உற்பத்தியிலும் முத்திரை பதித்துள்ளதை வெளிநாட்டு வர்த்தகர்கள் கண்காட்சி வாயிலாக உணர்ந்தனர்.
    • புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைத்த ஆயத்த ஆடைகள், குழந்தைகள் ஆடைகள், விளையாட்டு சீருடைகள் வரவேற்பு அதிகரித்துள்ளது.

    திருப்பூர் :

    இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம்(ஐ.கே.எப்.,), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியன சார்பில் திருப்பூரில் 49வது இந்தியா சர்வதேச பின்னலாடை கண்காட்சி கடந்த மாதம் நடந்தது.கண்காட்சி, கருத்தரங்கு மற்றும் பேஷன் ேஷா அனைத்தும், செயற்கை நூலிழை ஆடை மற்றும் மறுசுழற்சி முறை ஆடைகளை மையப்படுத்தியே அமைந்திருந்தது. தூக்கி எறியும் பெட் பாட்டில் களில் இருந்து, பாலியஸ்டர் நூல் தயாரித்து, அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் சாயமேற்றி புதிய தொழில்நுட்பத்தில் தயாரித்த ஆடைகள் பெரும் வரவேற்பை பெற்றன.

    அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, வங்கதேசம், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனத்தினர் கண்காட்சியை பார்வையிட்டனர். அத்துடன் டெல்லி, பெங்களூரு வில் உள்ள பிராண்டட் ஆயத்த ஆடை வர்த்தக நிறுவனங்களும் பங்கேற்றன. பருத்தி நூலிழை ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த திருப்பூர், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியிலும் முத்திரை பதித்துள்ளதை வெளிநாட்டு வர்த்தகர்கள் கண்காட்சி வாயிலாக உணர்ந்தனர். திருப்பூரின் நீடித்த நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய உற்பத்தி திறமையை கண்டு பெரிதும் வியப்பில் ஆழ்ந்தனர்.

    கண்காட்சி நிறைவடைந்து 10 நாட்களான நிலையில் திருப்பூரின் சூழலியல் பாதுகாப்பு தனிச்சிறப்புகள், வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

    ஜீரோ டிஸ்சார்ஜ் , சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி, மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு ஆகிய நீடித்த நிலையான பசுமை இயக்க பணிகள் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து இந்திய பின்னலாடைக் கண்காட்சி தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    கண்காட்சி வாயிலாக முக்கிய நாடுகளில் திருப்பூரின் தனிச்சிறப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காட்சிப்படுத்தியிருந்த செயற்கை நூலிழை துணிகள், புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைத்த ஆயத்த ஆடைகள், குழந்தைகள் ஆடைகள், விளையாட்டு சீருடைகள் குறித்தும் வரவேற்பு அதிகரித்துள்ளது.

    சர்வதேச பசுமை கொள்கை, திருப்பூர் நிறுவனங்களால் பின்பற்றப்படுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு வர்த்தகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதால் 50வது கண்காட்சியை அக்டோபர் மாதம் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    திருப்பூரில் வடிவமைத்த செயற்கை நூலிழை ஆடைகளை காட்சிப்படுத்திய பேஷன் ேஷா , வெளிநாட்டு வர்த்தகர்களை கவர்ந்துவிட்டது.அதுதொட ர்பான வர்த்தக விசாரணை வேகமெடுத்துள்ளது. பருத்தி நூலிழை பின்னலாடைக்கான நகரம் என்ற பெயர் மாறி செயற்கை நூலிழை ஆடையிலும் திருப்பூர் முக்கிய இடத்தை பிடிக்கப்போ கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படை யில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் நடக்கிறது. டாலர் மதிப்பை குறைக்கவும் மற்ற நாட்டு பணமதிப்பின் அடிப்படையில் வர்த்தகம் செய்யவும், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.சர்வதேச அளவில் இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் வர்த்தகம் செய்ய பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன; அதன்படி மத்திய ரிசர்வ் வங்கி 18 நாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜெர்மனி, பிரிட்டன், கென்யா, இஸ்ரேல், மலேஷியா, மொரீசியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா உட்பட, 18 நாடுகள் அனுமதி பெற்றுள்ளன.இவற்றில் ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள், இந்திய ரூபாய் அடிப்படையில் வர்த்தகம் செய்ய துவங்கியுள்ளன. விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் இந்திய வங்கியில் 'வோஸ்த்ரோ' கணக்கு துவக்க வேண்டும். அதன்படி, 'யூனியன் பாங்க் ஆப் இந்தியா' வங்கியில் வோஸ்த்ரோ கணக்கு துவங்கிய மலேசியா இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், இந்தியா - மலேசியா இடையே 1.59 லட்சம் கோடி ரூபாய் (19.4 பில்லியன் டாலர்) அளவுக்கு வர்த்தகம் நடந்து வருகிறது. இந்திய ரூபாயின் அடிப்படையில் வர்த்தகம் செய்ய மலேசியா முன்வந்துள்ளது. ரஷ்யா, அரபு நாடுகளை தொடர்ந்து மலேசியாவும் இதில் இணைந்துள்ளது. விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் ரூபாயை சர்வதேச கரன்சியாக பயன்படுத்தும் போது பின்னலாடை ஏற்றுமதியும் அதிகரிக்கும். இந்தியாவின் பொருளாதாரம் உயரும். மலேசியாவுக்கு செயற்கை நூலிழை ஆடைகள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றனர்.

    • பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்களை பெற்று உற்பத்தி பரபரப்பாக மாறியுள்ளது.
    • செயற்கை நூலிழை ஆடைகளுக்கான ஆர்டர் வரத்தும், விசாரணையும் அதிகரித்துள்ளது.

    திருப்பூர் :

    கொரோனா தொற்றால் சர்வதேச நாடுகளில் தொழில்கள் முடங்கினாலும் இந்தியாவின் உள்நாட்டு ஜவுளி வர்த்தகம் நிலை பெற்று விளங்கியது. ஒரு சில மாதங்களில் கொரோனா பாதிப்புகளை பின்னுக்கு தள்ளி திருப்பூர் ஏற்றுமதியாளர்களும் தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொண்டனர்.

    உக்ரைன் போர் சூழல் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை உருவானது. கடந்த ஆங்கில புத்தாண்டுக்கு பிறகு அந்நாடுகளில் படிப்படியாக இயல்புநிலை திரும்பியது. நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட திருப்பூரிலும் பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்களை பெற்று உற்பத்தி பரபரப்பாக மாறியுள்ளது.

    நூல் விலை குறைய துவங்கிய போது ஏற்கப்பட்ட ஆர்டர்கள் தற்போது ஏற்றுமதியாகி வருகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த மாதம் 12 ஆயிரத்து 227 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மார்ச் மாத ஏற்றுமதி, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வாக இருக்கும். பிப்ரவரி மாத ஏற்றுமதியை சேர்த்தாலே கடந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதியை தொட்டுவிடலாம் என ஜவுளித்துறையினர் கணித்துள்ளனர்.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் மட்டும் 3,383 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 11.12சதவீதம் அதிகம்.கடந்த 2011-22ல் அதிகபட்சமாக டிசம்பர் மாதம் 3,296 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. அதை மிஞ்சும் அளவுக்கு கடந்த மாத ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொழில்துறையினர்தெரிவித்தனர்.

    திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பருத்தி நூலிழை பின்னலாடைகளுக்கு பல்வேறு நாடுகளில் வரவேற்பு அதிகம். திருப்பூர் ஏற்றுமதியாளர் கோடைக்கால ஆர்டர்களை மட்டுமே அதிகம் நம்பியிருக்கின்றனர். இந்நிலையை மாற்றிட செயற்கை நூலிழை பின்னலாடை உற்பத்தியும், வர்த்தகமும் ஊக்குவிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தாண்டில் மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நூலிழை ஆடைகளுக்கான ஆர்டர் வரத்தும், விசாரணையும் அதிகரித்துள்ளது. இதனால் வரும் மாதங்களில் புதிய ஆர்டர் வரத்து திருப்பூருக்கு திருப்புமுனையாக அமையும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ×