search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் வேகமெடுக்கும் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் வேகமெடுக்கும் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி

    • பின்னலாடைத் தொழில் ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளியில் ஏராளமான சோதனையை சந்திக்கிறது.
    • கடந்த நிதியாண்டில் திருப்பூரில் இருந்து 36 ஆயிரத்து 419 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.

    திருப்பூர் :

    பின்னலாடைத் தொழில் ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளியில் ஏராளமான சோதனையை சந்திக்கிறது. எவ்வளவு தான் நெருக்கடி எழுந்தாலும் விடாமுயற்சியில் இறங்கும் தொழில்துறையினர் சவால்களை முறியடித்து வெற்றி மகுடம் சூட்டிக்கொள்கின்றனர். 'சி-பாரம்' பிரச்சினையில் துவங்கி, கடந்த ஆண்டு தொழிலை புரட்டிப்போட்ட நூல் விலை உயர்வு வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், பின்னலாடை உற்பத்தியாளர்களும் தீர்வு கண்டுவிடுகின்றனர்.

    கொரோனாவுக்கு பின் வளர்ச்சிப்பாதையில் வேகமாக பயணித்த பனியன் தொழிலுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது நூல் விலை உயர்வு மட்டுமல்ல, ரஷ்யா - உக்ரைன் போர் சூழலும்தான். அப்படியிருந்தும் கடந்த நிதியாண்டில் திருப்பூரில் இருந்து 36 ஆயிரத்து 419 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது :- இறக்குமதி நாடுகளில் இயல்புநிலை திரும்பி வருவதால் சிறு, குறு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும்.விரைவில் நிலை மாறும். செயற்கை நூலிழை ஆடை உற்பத்திக்கு திருப்பூர் முழு அளவில் தயாராகிவருகிறது. முதல்கட்டமாக செயற்கை நூலிழை துணி உற்பத்தி மற்றும் சாயமிடுவதில் சோதனை முறை வெற்றியடைந்துள்ளது.

    இந்தாண்டில் மட்டும் 100 நிட்டிங் எந்திரங்கள், பாலியஸ்டர் பின்னலாடை துணி உற்பத்தியை துவக்கியுள்ளன. சாய ஆலைகளும் பாலியஸ்டர் துணிக்கு சாயமிட்டு வெற்றி கண்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் இத்தகைய புதிய முயற்சி துவங்கியுள்ளது.ஆடை உற்பத்தியில் பெரிய மாற்றம் தேவையில்லை. வழக்கமாக பயன்படுத்தும் தையல் மெஷின்களில், ஊசிகளை மட்டும் சரிசெய்தால் பாலியஸ்டர் பின்னலாடைகளை உற்பத்தி செய்யலாம். நிட்டிங் , டையிங் பிரிவில் வெற்றிகரமாக பாலியஸ்டர் துணியை தயார் செய்து வருகிறோம். திருப்பூரை பொறுத்தவரை செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி பாதையில் நகர துவங்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் வேகமெடுக்க வாய்ப்புள்ளது. தற்போதைய மந்தநிலையும் சில மாதங்களில் மாறிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×