search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுந்தராபுரம் அருகே"

    • வீட்டில் இருந்து பரபரப்பு கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது
    • ராஜ்குமார் வீட்டிற்குள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    குனியமுத்தூர்,

    சிவகங்கை மாவட்டம் கோட்டையிருப்பை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது45).

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவைக்கு வந்துள்ளார்.

    இங்கு அவருக்கு கார் டிரைவர் வேலை கிடைத்ததை தொடர்ந்து சுந்தராபுரம் அடுத்த கணேசபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். தினமும் வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக ராஜ்குமாரின் வீடு பூட்டியே கிடந்தது. அவர் ஊருக்கு சென்றிருப்பார் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர்.

    ஆனால் சம்பவத்தன்று காலை வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியான அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து, வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் விரைந்து வந்து பார்த்தார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

    இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ராஜ்குமார் வீட்டிற்குள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணத்தை அறிய வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது கடிதம் ஒன்று இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று மட்டும் எழுதி இருந்தது. போலீசார் அதனை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முரளி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நாட்டியப்பள்ளி 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
    • நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை திருட்டு போனது.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் பரதநாட்டிய பயிற்சியாளர் முரளி (வயது 50) என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நாட்டியப்பள்ளி 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு முரளி பரதநாட்டிய பயிற்சியை முடித்துவிட்டு நாட்டியப் பள்ளியை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்க்கும்போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உடனே உள்ளே சென்று பார்க்கும் போது சிலைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். குனியமுத்தூர் போலீசார் பதிவு செய்து விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த பகுதி மக்கள் கூறுகையில் சம்பந்தப்பட்ட அந்த இடம் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காட்சியளிக்கும். நள்ளிரவு சமயங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இங்கு அதிகமாவே உள்ளது . எனவே மின்விளக்கு வசதி வேண்டும். மேலும் போலீசார் இந்தப் பகுதியில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தனர். 

    • தீர்வு கிடைக்குமா? என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    • குறிச்சி காந்திஜி ரோடு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் பகுதியில் குறிச்சி காந்திஜி ரோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இச்சாலையானது பொள்ளாச்சி ரோட்டில் இருந்து ஆரம்பித்து சாரதாமில் ரோட்டில் முடிவடைகிறது.

    கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்தில் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை பாரதி நகர் ,கேடிஎஸ் காலனி, தாயம்மாள் லே-அவுட் ,முருகன் கோவில் வீதி, முது பார் கோவில் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, லோகநாதபுரம், ஆண்டாள் தோட்டம் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் நாள் ஒன்றுக்கு இந்த வழியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ேமாட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களும் சென்று வரும் சாலையாகவும் உள்ளது.

    இப்படிப்பட்ட இந்த சாலையானது பல ஆண்டுகளாக தார் சாலையாக இல்லாமல், மண் சாலையாகவும், குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலைகளில் செல்லும்போது வாகன ஓட்டிகள் மீது புழுதி படிகிறது. சிறு, சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஆங்காங்கே விழுந்து விடும் சூழ்நிலை உள்ளது. காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றனர்.

    இப்பகுதியில் வசிப்பவர்கள் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோவை அழைக்கும் போது காந்திஜி ரோடு வருவதற்கு மட்டும் அழைக்க வேண்டாம் என கூறும் நிலையில் சாலை உள்ளது.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இச்சாலையில் மினிபஸ் ஓடி வந்தது. தற்போது சாலையின் அவல நிலைகண்டு ,மினி பஸ்களும் வருவதில்லை. இதனால் வெளியே செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்துள்ளோம். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டி இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.

    மேலும் குண்டும் குழியுமான சாலை காரணமாக, பல முறை ஓடும் ஆட்டோவில் குழந்தை பிறந்த சம்பவம் இந்த சாலைக்கு வரலாறு உண்டு.

    இத்தகைய அவல நிலையில் வாழ்ந்து வருகிறோம். இதுதவிர பாதாள சாக்கடை திட்டம் என்று பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தி, ஆங்காங்கே தோண்டி சாலையை பிளாக் செய்து விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் வாழும் மக்களாகிய நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்.

    இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எத்தனையோ முறை கூறியும் எந்தவித பயனும் இல்லை. எனவே இப்பகுதியில் அதிவிரைவில் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாவட்டத்திலேயே மிக மோசமான சாலை என்று கணக்கெடுத்தால், குறிச்சி காந்திஜி ரோட்டை தான் கூற முடியும். இந்த அவல நிலை மாற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுத்து ,இப்பகுதி மக்களை மனஉளைச்சலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றனர்.

    ×