search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைலாசநாதன்"

    • கோயிலுக்குள் அமர்ந்திருந்தால் நம் முயற்சியற்று தியான நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லும் அமைதியான பிரதேசம் இது.
    • கோயிலின் வளாகத்திலேயே அனுமனையும் பைரவரையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    அது வெறும் மண் மேடுதான். ஏன் அதை லிங்கத்துமேடு என்று அழைக்க வேண்டும். சில நூறு வருடங்களுக்கு முன்பு ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும். அதிலிருந்து அந்த இடத்தை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று தீர்மானித்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனாலேயே 1990 வரை அப்படியே அழைத்துக் கொண்டிருந்தனர். வைரத்தை எப்படி மூடி வைத்தாலும் ஏதேனும் ஒரு கீற்று சட்டென்று வெளியேறி பிரகாசித்துவிடும். அதுபோல கிருஷ்ணமூர்த்தி எனும் பக்தர் மூலம் ஈசன் தன்னிருப்பை வெளிப்படுத்தினார். ஒருநாள் பதுவஞ்சேரியின் வயல் வெளிகளுக்கு மத்தியிலுள்ள மண் மேட்டின் அருகே உட்கார்ந்திருந்தார்.

    வெளியே வெயில் கொதித்துக் கொண்டிருந்தாலும் மனதை எண்ணங்கள் அலைக்கழித்தாலும் ஏதோ ஒரு சக்தி உள்ளத்து தணலை குளிர்வித்தபடி இருந்தது. ஏதோவொரு நிம்மதியற்ற நிலை மனதில் இருந்தாலும் கடலலையின் சாரல் முகத்தை தழுவுவதுபோல நெஞ்சத்து துயரத்தை துடைத்து விட்டபடி இருந்தது.

    'இது மண் மேடா. இல்லையே. வேறெதுவோ உள்ளுக்குள்ளிருந்து என்னை அணைந்து கொள்கிறதே. சூழ்ந்து கொள்கிறதே. இறுக்கப் பிடித்து அமர வைக்கிறதே. இத்தனை சுகமாக நான் இருந்ததில்லையே' என்று என்றும் இல்லாது அந்த மேட்டை மிக மென்மையாக வருடினார். இத்தனை வருடங்களாகப் பார்த்த மேடு அன்று மட்டும் ஏனோ வினோதமாக தோற்றமளித்தது.

    மண்ணை அகற்றித்தான் பார்ப்போமே எனும் எண்ணம் அதிவேகமாக வந்தது. ஏதோ உத்தரவிட்டது போன்று மண்ணை அகற்றத் தொடங்கினார். கல்லுக்குள் மறைந்திருக்கும் சிற்பம் வெளிப்படுவதுபோல முதலில் வட்டமான கல் தெரிந்தது. ஆஹா.... என்று மகிழ்ச்சியோடு இன்னும் ஜாக்கிரதையாக மண்ணை களைய பாணம் தெரிந்தது. சூழ்ந்திருந்த மண்ணை முழுவதுமாக ஒதுக்க சிவலிங்கம் பளீரென்று வெளிப்பட்டது. மகிழ்ச்சியில் துள்ளினார். 'கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்...' என்று ஆனந்தமானார். கண்ணில் நீர் வழிந்தது. ஊருக்குள் ஓடி எல்லோரிடமும் சொல்ல வேண்டுமென்று ஆவலானார். மண் மேட்டின் ஒரு பகுதியை சரி செய்துவிட்டோமே அப்படியே நிறுத்த வேண்டாம் என்று மற்றொரு பகுதியிலிருந்த மண்ணையும் வாரிக் கொட்டினார்.

    அள்ளும்போது ஈசனின் அருள் அதற்குள்ளும் சுரப்பது தெரிந்தது. முதலில் பாணம் போல தெரிந்தது. 'ஆஹா... ஆஹா...' என்று அரற்றினார். இன்னொரு சிவலிங்கமா என்று ஆனந்த அதிரல் உடலை சிலிர்க்கடித்தது. இரண்டு சிவலிங்கத்திற்கு மத்தியிலும் நின்று கைகூப்பி, நெடு மரம் போன்று சடாரென்று விழுந்தார். அதற்குள் ஊருக்குள் செய்தி பரவியது. முதல் சிவலிங்கம் தோன்றும்போதே மக்கள் சூழ்ந்து நின்று உதவினர். இரண்டாவதாக இன்னொரு லிங்கம் பொங்கி இருப்பதைப் பார்த்து ஊரே ஸ்தம்பித்து நின்றது. மாலைச் சூரியன் பிரிய மனமில்லாது விடைபெற்றான்.

    காற்றில் ஈரப்பதம் ஏறியது. கீழ்வானம் கறுக்க மெல்லியதாய்ச் சாரல் பூமியை நனைத்தது. பெருமழையாக கொட்டித் தீர்த்தது. இரண்டு சிவலிங்கத்தின் அருகிலும் நெய் தீபங்கள் ஏற்றினர். பச்சைக் குழந்தையை பார்ப்பது போல உற்று உற்றுப் பார்த்து பரவசப்பட்டனர். ஈசனின் மேனியில் முத்துக்கள்போல நீர் கோர்த்துக் கொண்டது. பாணத்திலிருந்து இறங்கி ஆவுடையாரின் மீது வடிந்தது. சுற்றி நின்றவர்களின் நெஞ்சத்தில் நிம்மதி பரவியது. தொல்பொருள்துறை அதிகாரி சத்தியமூர்த்தி வந்து ஆராய்ந்தார். லிங்கத்திற்கு பக்கவாட்டில் இன்னும் கொஞ்சம் அகலமாக தோண்டப்பட்டது. கோயிலின் கடக்கால் தெரிந்தது. தேனுபுரீஸ்வரர் ஆலயக் கல்வெட்டில் இக்கோயிலைப் பற்றிய விவரங்களை கண்டுபிடித்தனர்.

    இத்தலத்திற்கு புஞ்சேரி அகரம் அல்லது அரசநாராயண சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சோழர்கள் காலத்திய கோயிலாகும். ஈசனுக்கு கைலாசநாத நாயனார், திரு அகஸ்தீஸ்வர நாயனார் என்றும் திருப்பெயர்கள் இடப்பட்டிருந்தன. ஒருவாறாக இதற்கொரு கோயில் கட்ட வேண்டுமென்றும் தனித்தனியாக எல்லா சந்நதிகளோடும் அமைக்க வேண்டுமென்று தீர்மானித்தனர். சுயம்பு மூர்த்தியாக அமைந்திருந்த கைலாசநாதரை மூலவராக வைத்தும் அருகேயே அகஸ்தீஸ்வரரையும் ஸ்தாபித்தனர். கிழக்கு நோக்கிய நிலையில் ஈசன் அருள்பாலிக்கிறார். கைலாசநாதருக்கு அருகேயே அம்பாள் ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்தனர். அதற்குப் பிறகு திரிபுரசுந்தரி எனும் திருப்பெயரில் அம்பாள் சிலையை நிறுவினார்கள். அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். படிப்படியாக கோயில் வளரத் தொடங்கியது.

    கோயிலின் வளாகத்திலேயே அனுமனையும் பைரவரையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். அஷ்டமி அன்று பைரவருக்கும் பௌர்ணமியன்று அம்பாள் மற்றும் சிவனுக்கும் சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது. நவகிரக சந்நதியும் தனியே அமைந்துள்ளன. வயல்வெளிகளுக்கு மத்தியில் அழகும் நேர்த்தியும் மிக்கதாக இக்கோயில் விளங்குகிறது. தென்றல் தாலாட்டும் புறநகர பூமி. சென்னை மாநகரத்தின் நெரிசல்களும் துரிதங்களின் சாயல்களும் இல்லாத அழகிய கிராமம். கோயிலுக்குள் அமர்ந்திருந்தால் நம் முயற்சியற்று தியான நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லும் அமைதியான பிரதேசம் இது. ரிஷிகள் புற்றுக்குள் தவமிருப்பதுபோல இத்தல ஈசனும் தனக்குள் தானே ஆத்ம தியானத்திலேயே கிடந்திருப்பாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    தானே தியானத்தின் இலக்காக இருந்து கொண்டு எதற்கு இவ்வாறு மறைத்துக் கொண்டு வெளிப்பட வேண்டுமென்கிற வியப்பும் பெருகுகிறது. தோன்றுவதும் மறைவதும் மறைப்பதை மீண்டும் வெளிப்படுத்துவதும் என்று சகலமும் ஈசனின் திருவிளையாடல்களே என்பதையே இத்தலம் உணர்த்துகிறது. அடுத்து என்ன செய்வது..? வழி தெரியாமல் தவிக்கிறேன். பிரச்னைகள் பல்வேறு ரூபத்தில் என்னை துரத்துகிறது என்று கலங்கி நின்றவரை கைலாசநாதர் கைதூக்கி விடுகிறார். ஒன்றா... இரண்டா... ஓராயிரம் பிரச்னைகள் கூட இருக்கட்டுமே கண நேரத்தில் சுண்டி எறிந்து விடுகிறார். இது வெறும் நம்பிக்கை இல்லை. பல பக்தர்களின் அனுபவம். எனவே, சென்று தரிசியுங்கள்.

    அருகேயே ஆயிரம் வருடங்களுக்கு முன்புள்ள சப்தமாதர்கள் கோயிலையும் கோணாட்சி அம்மனையும் தரிசித்து வாருங்கள். சிவாலயத்திற்கு இணையான பழமை கோணாட்சி அம்மன் கோயிலுக்கும் உண்டு. இரு கோயில்களின் தொடர்புக்கு: 9789972277, 7299113196. சென்னை - தாம்பரத்திலிருந்து சேலையூர் - கேம்ப்ரோடு வழியாக அகரம்தென் ஊருக்குச் செல்லும் வழியிலேயே, அருகிலேயே பதுவஞ்சேரி அமைந்துள்ளது.

    ×