search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபாலீசுவரர்"

    அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளித்தனர்.
    அவினாசியில் பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கொங்கு 7 சிவாலயங்களில் முதன்மையானது இந்த கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் கடந்த 10-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து 11 -ந் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகளும், இரவு பூத வாகனம், அன்ன வாகனம் காட்சிகள், அதிகார நந்தி கிளி வாகன காட்சிகள் நடந்தது.

    13-ந் தேதி இரவு புஷ்ப பல்லக்கு கைலாசவாகன காட்சிகள் நடைபெற்றது. நேற்று இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்வு நடந்தது. இதில் விநாயகப்பெருமான் மூஷிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும, பூமி நீளா தேவி கரிவரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது. நிகழ்ச்சியின்போது வானவேடிக்கை அதிர்வேட்டுகள் முழங்க சிவ கண பூத வாத்தியம் இசைக்கப்பட்டது.

    இதையடுத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி கோவிலில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு கடைவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுவாமி வலம் வரும் வீதிகளில் வழி நெடுகிலும் மாவிலைத் தோரணங்கள், வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று (திங்கட்கிழமை) கற்பக விருட்சம் திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சிகள் ஆகியன நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பூர நட்சத்திரத்தில் சுவாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 17-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 18-ந் தேதி மாலை 4 மணிக்கு அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது 19-ந் தேதி இரவு 7 மணியளவில் தெப்பத்தேர் உற்சவம், 20-ந் தேதி நடராஜர் தரிசனம் நடக்கிறது. 21-ந் தேதி காலை மஞ்சள் நீர் விழா மற்றும் இரவு மயில்வாகனம் காட்சியுடன் விழா நிறைவடைகிறது. நேற்று சித்திரை முதல் தேதி என்பதால் அதிகாலை 4 மணி முதல் அவினாசி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து தீர்த்தக் குடங்கள் எடுத்து சென்றனர். இதனால் கோவில் வளாகத்தில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 
    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அறுபத்து மூவர் நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
    ‘மயிலையே கயிலை, கயிலையே மயிலை’ என்னும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில். இங்கு அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டார். இந்த கோவிலில், திருஞானசம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றினார். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலாப்பூர் கோவிலில் தான்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனி பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.

    அந்தவகையில் இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாள் கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு பூஜை நடைபெற்றது. 10 நாள் திருவிழாவில் தினசரி ஒரு வாகனத்தில் இறைவன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    அறுபத்து மூவர் நாயன்மார்களுக்கு கபாலீசுவரர் காட்சி அளிக்கும் விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று காலை திருஞானசம்பந்தர் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அங்கம் பூம்பாவையை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியும் மயிலாப்பூர் குளக்கரையில் நடைபெற்றது. கூடிநின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 3 மணிக்கு அறுபத்து மூவர் நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அறுபத்து மூவர் நாயன்மார்கள் சிலைகள் மலர் களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏற்றப்பட்டு 16 கால் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாடவீதிகளில் அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெற்றது.

    அப்போது, வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீசுவரர், நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். இவர்களுடன், மயிலாப்பூர் காவல் தெய்வம் கோலவிழி அம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேசுவரர், முண்டககண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, வீரபத்திரர் சுவாமிகள் தனித்தனி பல்லக்குகளில் மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். மாட வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வீதி உலாவின் போது கோவிலை சுற்றி பெண்கள் மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினார்கள். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில் சத்தியமூர்த்தி தலைமையில் மன்ற தலைவரும், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவருமான பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் அன்னதானம் வழங்கி தொடங்கிவைத்தார்.

    இதேபோன்று பல்வேறு அமைப்புகள் மற்றும் மயிலாப்பூர் மாட வீதிகள் அருகில் வசிப்பவர்கள் நீர்மோர், குளிர்பானங்கள், இனிப்புகள், எழுதுபொருட்கள், அன்னதானம் வழங்கினார்கள்.

    விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை-ஆணையர் த.காவேரி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பலர் செய்திருந்தனர்.
    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா மற்றும் விடையாற்றி விழா தொடங்கியது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கபாலீசுவரர் மற்றும் கற்பகம்பாள் தேரில் எழுந்தருளினர். ‘திரிபுர சம்ஹாரம்’ நடைபெறும் வகையில் தேரில் எழுந்தருளிய கபாலீஸ்வரருக்கு வில், அம்புடன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அறநிலையத்துறை ஆணையர் பனீந்திரரெட்டி தொடங்கி வைத்தார். மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நான்கு மாட வீதிகளில் ஆடி அசைந்து வந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பகல் 11 மணி அளவில் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பித்து, சுவாமி, அம்பாள் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

    தேர் திருவிழாவில் சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஐந்திருமேனிகள் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு நாதஸ்வரம் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை-ஆணையர் த.காவேரி உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.
    ×