search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்கை அம்மன்"

    • வீராம்பட்டினம் கடற்கரை பட்டினம் அதனால் கங்கையம்மன் என்று மக்கள் வழிபட்டார்களாம்.
    • கங்கையம்மன் தான் பிற்காலத்தில் செங்கழுநீர் அம்மனாக விளங்கியதாக கூறுவர்.

    வீராம்பட்டினம் ஊருக்கு நடுவில் ஒரு வேப்ப மரம் இருந்ததாம். அந்த மரத்தடியில் ஒரு பெண் வந்து உட்கார்ந்து இருந்தாராம். மக்கள் எல்லாரும் போய் அந்த பெண்ணை தங்கள் வீட்டுக்கு அழைத்தார்களாம். அந்த பெண் யார் வீட்டுக்கும் போகாமல் வேப்ப மரத்தடியில் தூங்குவாராம். பால் கொடுத்தால் மட்டும் குடிப்பாராம்.

    நான் இந்த ஊரையும் மக்களையும் காப்பாற்ற வந்து இருக்கிறேன். யாரும் பயப்படவேண்டாம் என்று அந்த பெண் கூறினாராம். நான் இறந்து விட்டால் இந்த வேப்ப மரத்தடியில் புதைத்து விடுங்கள் என்று கூறுவாராம்.

    சில காலம் கழித்து அந்த பெண் இறந்து விட்டார். அவர் சொன்னது போல் வேப்பமரத்தடியில் அந்த பெண்ணின் உடலை புதைத்து விட்டார்கள். ஆனால் ஊர் மக்கள் பயந்து போய் இருந்தார்கள். இடுகாட்டில் புதைக்க வேண்டிய பிணத்தை ஊர் நடுவில் புதைத்து விட்டோமே என்று புலம்பினார்கள்.

    ஊரில் மின்சாரம் இல்லை, மாலையில் சூரியன் மறைந்த உடனே மக்கள் வீட்டுக்குள் போய்விடுவார்கள். இரவில் வெளியில் வரமாட்டார்கள். ஊரில் யாராவது இறந்து விட்டால் அந்த தெருவில் இரவானால் யாரும் நடமாட மாட்டார்கள். இறந்தவர் வந்து பிடித்துக் கொள்வார் என்று பயந்து வீட்டுக்குள் இருப்பார்களாம்.

    வீராம்பட்டினத்துக்கு அரியாங்குப்பத்தில் இருந்து தான் அரிசி, பருப்பு, புளி, மிளகாய், பயிறு, காய்கள் வாங்க வர வேண்டும். அரியாங்குப்பத்துக்கும் வீராம்பட்டினத்துக்கும் ஒத்தையடி பாதை தான் இருந்ததாம். ஒத்தையடிப் பாதையில் இருபுறமும் சவுக்குத்தோப்பு, முந்திரித்தோப்பு, மாந்தோப்பு, சப்பாத்தி முள் இருக்குமாம்.

    வீராம்பட்டினத்துக்கும் அரியாங்குப்பத்துக்கும் நடுவில் சுடுகாடு, இடுகாடு இருந்ததாம். இப்போதும், இருக்கிறது. அரியாங்குப்பத்தில் பொருட்கள் வாங்க வர வேண்டும் என்றால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள். சூரிய வெளிச்சம் இருப்பதற்குள், இருட்டுவதற்குள் வீராம்பட்டினம் வந்து விடுவார்களாம்.

    அந்த பெண்ணை புதைத்த வேப்ப மரத்தடியில் பெண்கள் விளக்கு வைத்து வணங்கி வழிபடுவார்களாம். அவர்கள் வேண்டிக் கொண்டது போல் நல்லது நடக்குமாம். அம்மா தாயே! இன்றைக்கு மீன் அதிகம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் அப்படியே கிடைக்குமாம்.

    அது மட்டும் அல்ல! அரியாங்குப்பம் போகும் போது அந்த பெண் புதைக்கப்பட்ட இடத்தில் வேண்டிக் கொண்டு தாங்கள் நடந்து போனால் தங்களுக்கு முன்னால் ஒரு கருப்பு உருவம் போவது போல் மக்கள் உணர்ந்தார்களாம்! அந்த பெண் புதைக்கப்பட்ட வேப்பமரத்தடியில், சமாதியின் தலை மாட்டில் 3 கற்களை வைத்துத் தாயே, அம்மா எங்களை காக்க வந்த கடல்தாயே என்று வேண்டி வணங்கி வழிபட்டார்களாம். அதனாலேயே பயம் இல்லாமல் மக்கள் ஊருக்குள் நடமாடினார்களாம். ஆண், பெண், இளம்பெண், இளைஞர்கள் என எல்லோரும் வழிபடத் தொடங்கினார்களாம்.

    ஒரு நாள் ஒரு பெண் மீது சாமி வந்து அடியே நான் யார் தெரியுமா? இந்த அகிலத்தைக் காப்பாற்ற வந்த பராசக்தி அம்மன். இந்த உலகத்தையும் இந்த ஊரையும் மக்களையும் காக்க அவதரித்த தெய்வம், நான் படுத்து உறங்கும் இடத்தைத் தோண்டினால் ஒரு நாகம் வரும் அதை அப்புறப்படுத்தி விட்டு எனக்குக் கோவில் கட்டி வழிபடுங்கள். உங்களை காக்கும் தெய்வமாக இருப்பேன், உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று கூறி மலையேறி விட்டதாம். கிராமங்களில் சாமி ஆடியவர்கள் கூறியதைக் கேட்டுக் கற்பூரம் ஏற்றி காட்டினால் அமைதியாகி கீழே விழுந்து விடுவார்கள். அதைத்தான் சாமி மலையேறிப்போச்சி என்று சொல்வார்கள்.

    சாமியாடி சொன்ன மாதிரி ஊர் மக்கள் ஒன்று கூடி பள்ளம் தோண்டினார்களாம். அங்கு ஒரு புற்றும் அதில் பாம்பும் இருந்ததாம். பாம்பு வெளியே வந்து மறைந்து விட்டதாம். அங்கு சிறு கோவில் கட்டி அம்மனை வணங்கி வழிபட்டார்களாம். வீராம்பட்டினம் கடற்கரை பட்டினம் அதனால் கங்கையம்மன் என்று மக்கள் வழிபட்டார்களாம். ஊரில் உள்ள மக்கள் குறிப்பாக பெண்கள், இளம்பெண்கள் தினமும் காலையில் இங்கு வந்து வழிபடுவார்களாம். தாங்கள் நினைத்தக் காரியம் நடக்குமாம். இந்த கங்கையம்மன் தான் பிற்காலத்தில் செங்கழுநீர் அம்மனாக விளங்கியதாக சிலர் கூறுகிறார்கள்.

    ×